[highlight_content]

Thiruviruttam

நம்மாழ்வார் அருளிச்செய்த

ருக்வேதஸாரமான

திருவிருத்தம்

தனியன்

(கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது)

கருவிருத்தக்குழிநீத்தபின் காமக்கடுங்குழிவீழ்ந்து*

ஒருவிருத்தம்புக்குழலுறுவீர்! உயிரின்பொருள்கட்கு*

ஒருவிருத்தம்புகுதாமல் குருகையர்கோனுரைத்த*

திருவிருத்தத்தோரடிகற்றீரீர் திருநாட்டகத்தே.

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும்*

இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை * உயிரளிப்பான்

எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் ! இமையோர் தலைவா!

மெய்ந் நின்று கேட்டருளாய் * அடியேன் செய்யும் விண்ணப்பமே. 1

செழுநீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தா லொப்ப * சேயரிக் கண்

அழுநீர் துளும்ப அலமருகின்றன * வாழியரோ

முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்

தொழுநீ ரிணையடிக்கே * அன்பு சூட்டிய சூழ் குழற்கே. 2

குழற் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் *

நிழற்போல்வனர்கண்டு நிற்குங்கொல்? மீளுங்கொல் ?* தண்ணந்துழாய்

அழற் போலடுஞ் சக்கரத் தண்ணல் விண்ணோர்த் தொழக் கடவும்

தழற் போற் சினத்த * அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே. 3

தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது * தண்ணந்துழாய்க்கு

இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் * நீ நடுவே

முனிவஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடிசூடு துழாய்ப்

பணிநஞ்ச மாருதமே! * எம்மதாவி பனிப்பியல்வே? 4

பனிப்பியல்வாக உடைய தண்வாடை * இக்காலம் இவ்வூர்ப்

பனிப்பியல் வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் * அந்தண்ணந் துழாய்ப்

பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்?

பனிப்புயல் வண்ணன் * செங்கோல் ஒரு நான்று தடாவியதே. 5

தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டுக் *

கடாயின கொண்டொல்கும் வல்லியீது ஏனும் * அசுரர் மங்கக்

கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்

நடாவிய கூற்றம் கண்டீர் * உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே. 6

ஞாலம் பனிப்பச் செறித்து * நன்னீரிட்டுக் கால் சிதைந்து

நீல வல்லேறு பொரா நின்ற வானமிது * திருமால்

கோலஞ் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண்பூங்

காலங் கொலோ ? அறியேன் * வினையாட்டியேன் காண்கின்றவே. 7

காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் * இந்நாள்

பாண்குன்ற நாடர் பயில்கின்றன * இதெல்லாம் அறிந்தோம்

மாண் குன்றமேந்தி தண் மாமலை வேங்கடத்து உம்பர் நம்பும்

சேண் குன்றம் சென்று * பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே. 8 திருவேங்கடம் திருப்பதி

திண் பூஞ்சுடர் நுதி நேமியஞ் செல்வர் * விண்ணாடனைய

வண் பூமணி வல்லி யாரே பிரிபவர் தாம்? * இவையோ

கண்பூங் கமலம் கருஞ் சுடராடி வெண் முத்தரும்பி

வண்பூங் குவளை * மடமான் விழிக்கின்ற மாயிதழே. 9

மாயோன் வட திருவேங்கட நாட* வல்லிக் கொடிகாள்!

நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் * நுமது

வாயோ ? அதுவன்றி வல்வினையேனும் கிளியு மெள்கும்

ஆயோ?அடும் தொண்டையோ? * அறையோ ! இது அறிவரிதே. 10         திருவேங்கடம் திருப்பதி

அரியனையாம் இன்றுகாண்கின்றன *கண்ணன்விண்ணனையாய் !

பெரியன காதம் பொருட்கோ ? பிரிவென * ஞால மெய்தற்கு

உரியன வொண் முத்தும் பைம் பொன்னு மேந்தி ஓரோ குடங்கைப்

பெரியன கெண்டைக் குலம் இவையோ * வந்து பேர்கின்றவே. 11

பேர்கின்றது மணிமாமை பிறங்கி யள்ளற் பயலை *

ஊர்கின்றது கங்கு லூழிகளே * இதெல்லா மினவே

ஈர்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணந்துழாய்

சார்கின்ற நன்னெஞ்சினார் * தந்து போன தனிவளமே. 12

தனிவளர் செங்கோல் தடாவு தழல் வாயரசவியப் *

பனிவளர் செங்கோலிருள் வீற்றிருந்தது பார் முழுதும் *

துனிவளர் காதல் துழாயைத் துழாவு தண்வாடை தடிந்து

இனிவளை காப்பவரார் ? * எனையூழிகள் ஈர்வனவே. 13

ஈர்வன வேலும் அம் சேலும் * உயிர்மேல் மிளிர்ந் திவையோ

பேர்வனவோ வல்ல * தெய்வ நல்வேள் கணைப் பேரொளியே

சோர்வன நீலச் சுடர் விடு மேனி யம்மான் விசும்பூர்

தேர்வன * தெய்வ மன்னீர கண்ணோ? இச் செழுங் கயலே. 14

கயலோ நும கண்கள் ? என்று களிறு வினவி நிற்றீர் ! *

அயலோ ரறியிலும் ஈதென்ன வார்த்தை ? * கடல் கவர்ந்த

புயலோடுலாங் கொண்டல் வண்ணன் புனவேங்கடத்து எம்மொடும்

பயலோவிலீர் * கொல்லை காக்கின்ற நாளும் பலபலவே. 15                    திருவேங்கடம் திருப்பதி

பலபல வூழிகளாயிடும் * அன்றி ஓர் நாழிகையைப்

பலபல கூறிட்ட கூறாயிடும் * கண்ணன் விண்ணனையாய்

பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் *

பலபல சூழலுடைத்து அம்ம ! வாழி இப்பாயிருளே. 16

இருள் விரிந்தாலன்ன * மாநீர்த் திரை கொண்டு வாழியரோ

இருள் பிரிந்தா ரன்பர் தேர்வழி தூரல் * அரவணை மேல்

இருள் விரிநீலக் கருநாயிறு சுடர் கால்வது போல் *

இருள்விரி சோதிப் பெருமானுறையும் எறிகடலே ! 17

கடல்கொண்டெழுந்தது வானம் * அவ்வானத்தையன்றிச் சென்று

கடல் கொண்டொழிந்தவதனால் இது * கண்ணன் மண்ணும் விண்ணும்

கடல் கொண்டெழுந்த அக்காலங்கொலோ ? புயற்காலங் கொலோ ? *

கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே ! 18

காரிகையார் நிறைகாப்பவர் யாரென்று * கார் கொண்டு இன்னே

மாரிகை யேறி அறையிடுங் காலத்தும் * வாழியரோ

சாரிகைப் புள்ளர் அந்தண்ணந் துழாய் இறை கூயருளார்

சேரிகை யேறும் * பழியாய் விளைந்தது என் சின்மொழிக்கே. 19

சின்மொழி நோயோ கழிபெருந் தெய்வம் * இந்நோயினதென்று

இன்மொழி கேட்கும் இளந் தெய்வம் அன்றிது * வேல ! நில் நீ

என்மொழி கேண்மின் என்னம்மனைமீர்! உலகேழு முண்டான்

சொல்மொழி மாலை * அந்தண்ணந் துழாய் கொண்டு சூட்டுமினே. 20

சூட்டு நன்மாலைகள் தூயன வேந்தி * விண்ணோர்கள் நன்னீர்

ஆட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு * ஓர் மாயையினால்

ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்து இமிலேற்று வன்கூன்

கோட்டிடை யாடினை கூத்து * அடலாயர் தம் கொம்பினுக்கே. 21

கொம்பார் தழைகை சிறுநாணெறிவிலம்* வேட்டை கொண்டாட்டு

அம்பார் களிறு வினவுவது ஐயர் * புள்ளூரும் கள்வர்

தம் பாரகத்து என்று மாடாதன தம்மில் கூடாதன *

வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ்வான்புனத்தே. 22

புனமோ? புனத்தயலே வழிபோகும் அருவினையேன்

மனமோ ? * மகளிர் ! நுங்காவல் சொல்லீர் * புண்டரீகத் தங்கேழ்

வனமோரனைய கண்ணான் கண்ணன் வானாடமரும் தெய்வத்

தினமோரனையீர்களாய் * இவையோ நும்மியல்வுகளே? 23

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுஉலாவும் * ஓரோ குடங்கைக்

கயல் பாய்வன பெருநீர்க் கண்கள் தம்மொடும் * குன்ற மொன்றால்

புயல் வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூருந் துழாய்க்

கொயல்வாய்மலர்மேல்*மனத்தொடுஎன்னாங்கொல்எங்கோல்வளைக்கே? 24

எங்கோல் வளைமுதலா* கண்ணன்மண்ணும் விண்ணும்அளிக்கும்

செங்கோல் வளைவு விளைவிக்குமால் * திறல் சேரமரர்

தங்கோனுடைய தங்கோன் உம்ப ரெல்லாயவர்க்குந் தங்கோன்

நங்கோ னுகக்கும் துழாய் * என் செய்யாது இனி நானிலத்தே ? 25

நானிலம் வாய்க் கொண்டு நன்னீரற மென்று கோதுகொண்ட *

வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை கடந்த பொன்னே ! *

கால்நிலந்தோய்ந்து விண்ணோர்தொழும் கண்ணன்வெஃகாவுது, அம்பூந்

தேனிளஞ் சோலை அப்பாலது * எப்பாலைக்கும் சேமத்ததே. 26             திருத்தண்கா,

திருவெ:கா

சேமம் செங்கோனருளே * செறுவாரும் நட்பாகுவரென்று

ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே * பண்டெல்லாம் அறைகூய்

யாமங்கள் தோறெரி வீசும் நங் கண்ணனந் தண்ணந் துழாய்த்

தாமம் புனைய * அவ்வாடை ஈதோ வந்து தண்ணென்றதே. 27

தண்ணந் துழாய் வளை கொள்வது யாமிழப்போம் * நடுவே

வண்ணந் துழாவி ஓர் வாடை யுலாவும் * வள்வா யலகால்

புள் நந்துழாமே பொரு நீர்த் திருவரங்கா ! அருளாய்

எண்ணந் துழாவுமிடத்து * உளவோ பண்டும் இன்னன்னவே? 28             திருவரங்கம்

இன்னன்ன தூது எம்மை ஆளற்றப் பட்டிரந்தாள் இவளென்று *

அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் * நீலமுண்ட

மின்னன்ன மேனிப் பெருமானுலகில் பெண் தூது செல்லா

அன்னன்ன நீர்மை கொலோ ?* குடிச்சீர்மையி லன்னங்களே ! 29

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுதிரந்தேன் *

முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ * கண்ணன் வைகுந்தனோடு

என்னெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர்

இன்னம் செல்லீரோ ? * இதுவோ? தகவென்று இசைமின்களே ! 30

இசைமின்கள் தூதென்று இசைத்தால் இசையிலம் *என்தலைமேல்

அசைமின்கள் என்றால் அசையுங் கொலாம்? *அம்பொன் மாமணிகள்

திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன்தாள் சிமய

மிசை மின் மிளிரிய போவான் * வழிக் கொண்ட மேகங்களே ! 31         திருவேங்கடம் திருப்பதி

மேகங்களோ ! உரையீர் * திருமால் திருமேனி யொக்கும்

யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் ? * உயிரளிப்பான்

மாகங்க ளெல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்

ஆகங்கள் நோவ * வருத்தும் தவமாம் அருள் பெற்றதே. 32

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் *

இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் * ஈங்கோர் பெண்பால்

பொருளோ வெனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாளென்றெண்ணோ ?

தெருளோம் அரவணையீர்! * இவள் மாமை சிதைக்கின்றதே. 33

சிதைக்கின்ற தாழி என்று ஆழியைச் சீறித் * தன் சீறடியால்

உதைக்கின்ற நாயகந் தன்னொடு மாலே* உனது தண் தார்

ததைக்கின்ற தண்ணந் துழாயணிவான் அதுவே மனமாய்ப்

பதைக்கின்ற மாதின் திறத்து * அறியேன் செயற் பாலதுவே. 34

பால் வாய்ப் பிறைப் பிள்ளை ஒக்கலைக் கொண்டு * பகலிழந்த

மேல் பால் திசைப் பெண் புலம்புறு மாலை * உலகளந்த

மால் பால் துழாய்க்கு மனமுடையார்க்கு நல்கிற்றை யெல்லாம்

சோல்வான் புகுந்து * இதுவோர் பணிவாடை துழாகின்றதே. 35

துழா நெடுஞ் சூழிருளென்று * தந்தண் தாரது பெயரா

எழா நெடுவூழி யெழுந்த இக்காலத்தும் * ஈங்கு இவளோ !

வழா நெடுந் துன்பத்தளென்று இரங்கார் அம்மனே ! இலங்கைக்

குழா நெடுமாடம் * இடித்த பிரானார் கொடுமைகளே ! 36

கொடுங்கால் சிலையர் நிரைகோளுழவர் * கொலையில் வெய்ய

கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து * அருவினையேன்

நெடுங் காலமும் கண்ணன் நீள் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற

தொடுங்கா லொசியுமிடை * இளமான் சென்ற சூழ்கடமே. 37

கடமாயினகள் கழித்துத் தன்கால் வன்மையால் * பலநாள்

தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவம் இது கொல் ? *

குடமாடி இம் மண்ணும் விண்ணும் குலுங்க உலகளந்து

நடமாடிய பெருமான் * உருவொத்தன நீலங்களே. 38

நீலத் தடவரை மேல் புண்டரீக நெடுந் தடங்கள்

போலப் பொலிந்து * எமக்கு எல்லா விடத்தவும் * பொங்கு முந்நீர்

ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்

கோலங் கரிய பிரான் * எம்பிரான் கண்ணின் கோலங்களே. 39

கோலப் பகல் களிறொன்று கற்புய்யக் * குழாம் விரிந்த

நீலக் கங்குல் களிறெல்லாம் நிரைந்தன * நேரிழையீர் !

ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ்குழற்கே

ஏலப்புனைந்து என்னைமார் * எம்மை நோக்குவது என்றுகொலோ? 40

என்றும் புன்வாடை யிது கண்டறிதும் * இவ்வாறு வெம்மை

ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் * ஓங்கசுரர்

பொன்றும் வகை புள்ளை யூர்வான் அருளருளாத இந்நாள்

மன்றில் நிறைபழி தூற்றி * நின்று என்னை வன்காற்று அடுமே. 41

வன் காற்றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த *

மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன * மண்ணும் விண்ணும்

என்காற்கு அளவின்மை காண்மின் என்பானொத்து வான் நிமிர்ந்த

தன் காற் பணிந்த என்பால் * எம்பிரான தடங் கண்களே. 42

கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே *

வண்ணம் கரியதோர் மால் வரை போன்று * மதி விகற்பால்

விண்ணும் கடந்து உம்பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும்

எண்ணுமிடத் ததுவோ ? * எம்பிரானது எழில் நிறமே. 43

நிறமுயர் கோலமும், பேரும் உருவும் இவை யிவை யென்று *

அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் * அங்கங் கெல்லாம்

உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் ஒன்றும்

பெற முயன்றா ரில்லையால் * எம்பிரான் தன் பெருமையையே. 44

பெருங் கேழலார் தம் பெருங்கண் மலர்ப் புண்டரீகம் * நம்மேல்

ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம் * ஒருவர் நம் போல்

வருங்கேழ் பவருளரே ? தொல்லை வாழியம் சூழ்பிறப்பு

மருங்கே வரப் பெறுமே? சொல்லு வாழி மட நெஞ்சமே! 45

மட நெஞ்சமென்றும் தமதென்றும் * ஓர் கருமம் கருதி

விடநெஞ்சை யுற்றார் விடவோ அமையும் * அப் பொன் பெயரோன்

தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ் விடப் போய்த்

திட நெஞ்சமாய் * எம்மை நீத்து இன்று தாறும் திரிகின்றதே. 46

திரிகின்றது வட மாருதம் * திங்கள் வெந்தீ முகந்து

சொரிகின்றது அதுவும் அது * கண்ணன் விண்ணூர் தொழவே

சரிகின்றது சங்கம் தண்ணந் துழாய்க்கு வண்ணம் பயலை

விரிகின்றது முழு மெய்யும் * என்னாங்கொல் என் மெல்லியற்கே ? 47

மெல்லிய லாக்கைக் கிருமி * குருவில் மிளிர் தந்து ஆங்கே

செல்லிய செல்கைத்து உலகை என் காணும் ? * என்னாலும் தன்னைச்

சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாது கற்றேன் ?

பல்லியின்சொல்லும்சொல்லாக் *கொள்வதோஉண்டு பண்டுபண்டே. 48

பண்டும் பலபல வீங்கிருள் காண்டும் * இப்பாயிருள் போல்

கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம் * காள வண்ண

வண்டுண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்

உண்டும் உமிழ்ந்தும் கடாய * மண்ணேரன்ன ஒண்ணுதலே ! 49

ஒண்ணுதல் மாமை யொளி பயவாமை * விரைந்து நந்தேர்

நண்ணுதல் வேண்டும் வலவ ! கடாகி இன்று * தேன் நவின்ற

விண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத் தாய்

மண்முதல் சேர்வுற்று * அருவி செய்யா நிற்கும் மாமலைக்கே. 50             திருவேங்கடம் திருப்பதி

மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப் பிரான் *

அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் * பரதர்

விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையாக்

துலைகொண்டு தாயம்கிளர்ந்து *கொள்வானொத்துஅழைக்கின்றதே. 51

அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைக் கொண்டுபோய் * அலர்வாய்

மழைக் கண் மடந்தை அரவணை யேற * மண் மாதர் விண் வாய்

அழைத்துப் புலம்பி முலைமலை மேல் நின்றும் ஆறுகளாய்

மழைக் கண்ணநீர் * திருமால் கொடியானென்று வார்கின்றதே ! 52

வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம் *

சீராயின தெய்வ நன்னோயிது * தெய்வத் தண்ணந் துழாய்த்

தாராயினும் தழையாயினும் தண் கொம்பதாயினும் கீழ்

வேராயினும் நின்ற மண்ணாயினும் * கொண்டு வீசுமினே. 53

வீசும் சிறகால் பறத்திர் * விண்ணாடு நுங்கட்கு எளிது

பேசும் படியன்ன பேசியும் போவது * நெய் தொடுவுண்டு

ஏசும் படியன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்

மாசில் மலரடிக் கீழ் * எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே ! 54

வண்டுகளோ ! வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ *

உண்டு களித்துழல்வீர்க்கு ஒன்றுரைக்கியம் * ஏனமொன்றாய்

மண்துகளாடி வைகுந்தமன்னாள் குழல் வாய் விரை போல்

விண்டு கள்வாரும் மலர் உளவோ * நும் வியலிடத்தே ? 55

வியலிட முண்ட பிரானார் விடுத்த திருவருளால் *

உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழி! * ஓர் தண்தென்றல் வந்து

அயலிடையாரும் அறிந்திலர் அம்பூந்துழாயின் இன் தேன்

புயலுடை நீர்மையினால் * தடவிற்று என் புலன் கலனே. 56

புலக்குண்டலப் புண்டரீகத்த போர்க்கெண்டை *வல்லியொன்றால்

விலக்குண் டுலாகின்று வேல் விழிக்கின்றன * கண்ணன் கையால்

மலக்குண்டு அமுதம் சுரந்த மறிகடல் போன்று அவற்றால்

கலக்குண்ட நான்று கண்டார் * எம்மை யாரும் கழறலரே. 57

கழல் தல மொன்றே நிலமுழு தாயிற்று * ஒரு கழல் போய்

நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது * நீண்ட வண்டத்து

உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை யில்லா

அழறலர் தாமரைக் கண்ணன் * என்னோ இங்கு அளக்கின்றதே ? 58

அளப்பருந்தன்மைய ஊழியங்கங்குல் * அந்தண்ணந்துழாய்க்கு

உளப் பெருங் காதலின் நீளிய வாயுள * ஓங்கு முந்நீர்

வளப் பெருநாடன் மதுசூதன னென்னும், வல்வினையேன்

தளப் பெரு நீள் முறுவல் * செய்ய வாய தட முலையே. 59

முலையோ முழுமுற்றும் போந்தில * மொய் பூங்குழல் குறிய

கலையோ அரையில்லை நாவோ குழறும் * கடல் மண்ணெல்லாம்

விலையோவென மிளிரும் கண் இவள் பரமே ? பெருமான்

மலையோ திருவேங்கட மென்று * கற்கின்ற வாசகமே. 60  திருவேங்கடம் திருப்பதி

வாசகம் செய்வது நம்பரமே ? * தொல்லை வானவர் தம்

நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன் * ஞாலமுற்றும்

வேயகமாயினும் சோரா வகை இரண்டே யடியால்

தாயவன் * ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே. 61

இறையோ! இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது*

அறையோ ! என நின்றதிரும் கருங்கடல் * ஈங்கு இவள் தன்

நிறையோ ? இனிஉன் திருவருளா லன்றிக் காப்பரிதால்

முறையோ?*அரவணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே ! 62

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய *

தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன * தாமிவையோ

கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல் செய்தேற்கு

எண்ணம் புகுந்து* அடியேனொடு இக்கால மிருக்கின்றதே. 63

இருக்கார் மொழியால் நெறி யிழுக்காமை * உலகளந்த

திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் * யாமும் அவா

ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையில்

கருக்காய் கடிப்பவர் போல் * திருநாமச் சொல் கற்றனமே. 64

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று * ஓரோ கருமம்

உற்றுப் பயின்று செவியொடு உசாவி * உலக மெல்லாம்

முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்

உற்றும் உறாதும் மிளிர்ந்த கண்ணாய் * எம்மை யுண்கின்றவே. 65

உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும் *

எண்ணாய் மிளிரு மியல்வினவாம் * எரி நீர் வளி வான்

மண்ணாகிய எம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்

கண்ணாய் * அருவினையேன் உயிராயின காவிகளே. 66

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று *

ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு * அசுரரைச் செற்ற

மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் *

தூவியம் பேடை யன்னாள், கண்களாய துணைமலரே. 67            திருவேங்கடம் திருப்பதி

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்

புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி * பொரு கடல் சூழ்

நிலந் தாவிய எம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்!

கலந்தார் வர எதிர் கொண்டு * வன் கொன்றைகள் கார்த்தனவே. 68

காரேற் றிருள் செகிலேற்றின் சுடருக்கு உளைந்து வெல்வான் *

போரேற் றெதிர்ந்தது புன்தலை மாலை * புவனி யெல்லாம்

நீரேற்றளந்த நெடிய பிரான் அருளா விடுமே ?

வாரேற்றிள முலையாய் ! வருந்தேல் உன் வளைத் திறமே. 69

வளைவாய்த் திருச்சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் *

தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந் துழாய்க்கு வண்ணம் பயலை *

விளைவான் மிக வந்து நாள் திங்களாண்டூழி நிற்க எம்மை

உளைவான் புகுந்து * இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே. 70

ஊழிகளாய் உலகேழு முண்டானென்றிலம் * பழங் கண்டு

ஆழிகளாம் பழவண்ண மென்றேற்கு * அஃதே கொண்டு அன்னை

நாழ் இவளோவென்னும் ஞாலமுண்டான் வண்ணம் சொல்லிற்றென்னும்

தோழிகளோ! உரையீர் * எம்மை அம்மனை சூழ்கின்றவே. 71

சூழ்கின்ற கங்குல் சுருங்கா விருளின் கருந் திணிம்பைப் *

போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க * துழாய் மலர்க்கே

தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று

வாழ்கின்றவாறு இதுவோ ? * வந்து தோன்றிற்று வாலியதே. 72

வால் வெண்ணிலவு உலகாரச் சுரக்கும் வெண் திங்களென்னும் *

பால் விண் சுரவி சுரமுதிர் மாலை * பரிதி வட்டம்

போலும் சுடரட லாழிப் பிரான் பொழிலே ழளிக்கும்

சால்பின் தகைமை கொலாம் ? * தமியாட்டி தளர்ந்ததுவே. 73

தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப் பாயல் * திருநெடுங்கண்

வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் * மால் வரையைக்

கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத்தான் முடிசூடு துழாய்

அளைந்துண் சிறுபசுந் தென்றல் * அந்தோ ! வந்துலாகின்றதே. 74

உலாகின்ற கெண்டை யொளியம்பு * எம்மாவியை ஊடுருவக்

குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் ! * குனிசங்கிடறிப்

புலாகின்ற வேலைப் புணரி அம்பள்ளி யம்மான் அடியார்

நிலாகின்ற வைகுந்தமோ ? வையமோ ? நும் நிலையிடமே. 75                பரமபதம்

இடம் போய் விரிந்து இவ்வுலகளந்தான் * எழிலார் தண்துழாய்

வடம் போதினையும் மடநெஞ்சமே ! * நங்கள் வெள்வளைக்கே

விடம் போல் விரிதல் இது வியப்பே? வியன் தாமரையின்

தடம் போதொடுங்க * மெல்லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே. 76

திங்களம் பிள்ளை புலம்பத் * தன் செங்கோலரசு பட்ட

செங்களம் பற்றி நின்றெள்கு புன்மாலை * தென் பாலிலங்கை

வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா

நங்களை மாமை கொள்வான் * வந்து தோன்றி நலிகின்றதே. 77

நலியும் நரகனை வீட்டிற்றும் * வாணன் திண் தோள் துணித்த

வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல * மைவரை போல்

பொலியு முருவிற் பிரானார் புனை பூந்துழாய் மலர்க்கே

மெலியு மட நெஞ்சினார் * தந்து போயின வேதனையே. 78

வேதனை, வெண்புரி நூலனை * விண்ணோர் பரவ நின்ற

நாதனை, ஞாலம் விழுங்கும் அநாதனை * ஞாலந் தத்தும்

பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டருளும்

சீதனையே தொழுவார் * விண்ணுளாரிலும் சீரியரே. 79         திருப்பாற்கடல்

சீரரசாண்டு தன் செங்கோல் சிலநாள் செலீஇக் கழிந்த *

பாரரசொத்து மறைந்தது நாயிறு * பாரளந்த

பேரரசே ! எம் விசும்பரசே ! எம்மை நீத்து வஞ்சித்த

ஓரரசே ! அருளாய் * இருள்ஆய் வந்து உறுகின்றதே. 80

உறுகின்ற கன்மங்கள் மேலன ஓர்ப்பிலராய் * இவளைப்

பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் ?* துழாய்குழல்வாய்த்

துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர்

இறுகின்றதால் இவளாகம் * மெல்லாவி யெரி கொள்ளவே. 81                  திருவேங்கடம் திருப்பதி

எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே * உதய மலை வாய்

விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் * மீண்டு அவற்றுள்

எரிகொள் செந்தீ வீழசுரரைப் போல எம் போலியர்க்கும்

விரிவ சொல்லீர் இதுவோ? *வையமுற்றும் விளரியதே. 82

விளரிக்குரலன்றில் மென்பெடை மேகின்ற முன்றில் பெண்ணை *

முளரிக் குரம்பை இதுவிதுவாக * முகில் வண்ணன் பேர்

கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல்லாவியும் நைவு மெல்லாம்

தளரிற் கொலோ ?* அறியேன் உய்யலாவது இத்தையலுக்கே. 83

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும் *

ஐய நல்லார்கள் குழிய விழவினும் * அங்கங்கெல்லாம்

கைய பொன்னாழி வெண் சங்கொடும் காண்பான், அவாவுவன் நான்

மைய வண்ணா ! மணியே !* முத்தமே ! என்தன் மாணிக்கமே ! 84

மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்து இருளோடு முட்டி *

ஆணிப் பொன்னன்ன சுடர் படு மாலை * உலகளந்த

மாணிக்கமே ! என் மரதகமே ! மற்றொப்பாரை யில்லா

ஆணிப் பொன்னே * அடியேனடி யாவி யடைக்கலமே ! 85

அடைக்கலத் தோங்கு கமலத் தலரயன் சென்னி யென்னும் *

முடைக் கலத்தூண் முன் அரனுக்கு நீக்கியை * ஆழி சங்கம்

படைக் கலமேந்தியை வெண்ணெய்க்கு அன்றாய்ச்சி வன்தாம்புகளால்

புடைக் கலந்தானை எம்மானை * என் சொல்லிப் புலம்புவனே? 86

புலம்பும் கனகுரல் போழ்வாய வன்றிலும் * பூங்கழி பாய்ந்து

அலம்பும் கனகுரல் சூழ்திரை யாழியும் * ஆங்கவை நின்

வலம்புள்ளது நலம் பாடுமிது குற்றமாக வையம்

சிலம்பும் படி செய்வதே ? * திருமால் இத்திருவினையே. 87

திருமாலுரு வொக்கும் மேரு * அம்மேருவில் செஞ்சுடரோன்

திருமால் திருக்கைத் திருச்சக்கர மொக்கும் * அன்ன கண்டும்

திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்

திருமால் தலைக்கொண்ட நங்கட்கு * எங்கே வரும் தீவினையே ? 88

தீவினைக்கு அரு நஞ்சை நல் வினைக்கு இன்னமுதத்தினைப் *

பூவினை மேவிய தேவி மணாளனைப் * புன்மை யெள்காது

ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுல கீரடியால்

தாவின ஏற்றை எம்மானை * எஞ்ஞான்று தலைப் பெய்வனே. 89

தலைப் பெய்து யான் உன் திருவடி சூடும் தகைமையினால் *

நிலைப் பெய்த வாக்கைக்கு நோற்ற இம்மாயமும் * மாயம் செவ்வே

நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு, அசுரர் குழாம்

தொலைப் பெய்த நேமி யெந்தாய் ! * தொல்லை யூழி சுருங்கலதே. 90

சுருங்குறிவெண்ணெய் தொடுவுண்ட கள்வனை *வையம் முற்றும்

ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை * மாவலி மாட்டு

இருங் குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற

பெருங் கிறியானை யல்லால் * அடியேன் நெஞ்சம் பேணலதே. 91

பேணல மில்லா அரக்கர் முந்நீர பெரும் பதிவாய் *

நீள்நகர் நீளெரி வைத்தருளா யென்று * நின்னை விண்ணோர்

தாள் நிலம் தோய்ந்து தொழுவர், நின் மூர்த்தி பல் கூற்றிலொன்று

காணலுமாங்கொல்? என்றே * வைகல் மாலையும் காலையுமே. 92

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்தகங்குல்குறும்பர் *

மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் * அன்ன கண்டும்

காலை நல் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து

மாலை நல் நாவில் கொள்ளார் * நினையார் அவன் மைப்படியே. 93

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் * வைதிகரே

மெய்ப் படியால் உன் திருவடி சூடுந் தகைமையினார் *

எப்படி ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்னும்

அப்படி யானும் சொன்னேன் * அடியேன் மற்று யாதென்பனே ? 94

யாதானும் ஓராக்கையில்புக்கு *அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்

மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே * அதனால்

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்

மாதாவினைப் பிதுவைத் * திருமாலை வணங்குவனே. 95

வணங்கும் துறைகள் பலபல வாக்கி * மதி விகற்பால்

பிணங்கும் சமயம் பலபல வாக்கி * அவை யவை தோறு

அணங்கும் பலபல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்

இணங்குநின்னோரையில்லாய் !* நின்கண் வேட்கையெழுவிப்பனே. 96

எழுவதும் மீண்டே படுவதும் பட்டு * எனை யூழிகள் போய்க்

கழிவதும் கண்டு கண்டு எள்கலல்லால் * இமையோர்கள் குழாம்

தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு

கழிவதோர் காதலுற்றார்க்கும் * உண்டோ கண்கள் துஞ்சுதலே ? 97

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற *

எஞ்சாப் பிறவி இடர் கடிவான் * இமையோர் தமக்கும்

தன் சார்விலாத தனிப்பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே

நெஞ்சால்நினைப்பரிதால் * வெண்ணெயூணென்னும் ஈனச்சொல்லே. 98

ஈனச்சொல் லாயினுமாக * எறி திரை வையம் முற்றும்

ஏனத் துருவாய் இடந்த பிரான் * இருங் கற்பகம் சேர்

வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும்

ஞானப்பிரானை யல்லா லில்லை * நான் கண்ட நல்லதுவே. 99

நல்லார் நவில் குருகூர் நகரான் * திருமால் திருப்பேர்

வல்லாரடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த *

சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்

பொல்லாவருவினை * மாயவன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே. 100

திருவிருத்தம் முற்றும்

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.