தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி
தனியன்கள்
(திருமாலையாண்டான் அருளிச் செய்தது)
தமேவமத்வாபரவாஸுதேவம்
ரங்கேசயம்ராஜவதர்ஹணீயம்
ப்ராபோதகீம்யோக்ருதஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும்பகவந்தமீடே.
(திருவரங்கப்பெருமாள் அரையர் அருளிச்செய்தது)
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்
தொண்டரடிப்பொடிதொன்னகரம்* வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானை*
பள்ளியுணர்த்தும்பிரானுதித்தஊர்.
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய் *
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்து வந்தீண்டி *
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் *
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 1 1 திருவரங்கம்
கொழுங்கொடி முல்லையின் கொழு மலரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ *
எழுந்தன மலரணைப் பள்ளி கொள்ளன்னம்
ஈன்பனி நனைந்த தமிருஞ் சிறகுதறி *
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயிறுற அதன் விடத்தினுக் கனுங்கி *
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 2 2 திருவரங்கம்
சுடரொளி பரந்தன சூழ் திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப் *
படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ
பாயிரு ளகன்றது, பைம்பொழிற் கமுகின் *
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ *
அடலொளி திகழ் தரு திகிரி அந்தடக்கை
அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 3 3 திருவரங்கம்
மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேய்ங் குழலோசையும் விடை மணிக் குரலும் *
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை *
வாட்டிய வரி சிலை வானவரேறே !
மாமுனி வேள்வியைக் காத்து * அவபிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தி யெம்மரசே !
அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 4 4 திருவரங்கம்
புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி *
கலந்தது குணதிசைக் கனை கடலரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த *
அலங்கலந் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா ! *
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான் ! பள்ளி யெழுந் தருளாயே. 5 5 திருவரங்கம்
இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ ?
இறையவர் பதினொரு விடையரும் இவரோ ? *
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ ?
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டிப் *
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்தீண்டிய வெள்ளம் *
அருவரை யனைய நின் கோயில் முன் இவரோ ?
அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 6 6 திருவரங்கம்
அந்தரத் தமரர்கள் கூட்டங்கள் இவையோ ?
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ ? *
இந்திர னானையும் தானும் வந்திவனோ ?
எம்பெருமான் உன கோயிலின் வாசல் *
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் *
அந்தரம் பாரிட மில்லை மற்றிதுவோ?
அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 7 7 திருவரங்கம்
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா*
எம்பெருமான் ! * படிமைக் கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டு நன் முனிவர் *
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ ?
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி *
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 8 8 திருவரங்கம்
ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி *
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவ ரவர் கங்குலு ளெல்லாம் *
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் *
ஆதலில் அவர்க்கு நாளோலக்க மருள
அரங்கத்தம்மா ! பள்ளி யெழுந் தருளாயே. 9 9 திருவரங்கம்
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ ? *
துடியிடையார் சுரி குழல் பிழிந்துதறித்
துகிலுடுத் தேறினர் சூழ் புனலரங்கா ! *
தொடை யொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள், தொண்டரடிப்பொடி யென்னும்
அடியனை * அளியனென் றருளி உன்னடியார்க்கு
ஆட்படுத்தாய், பள்ளி யெழுந் தருளாயே. 10 10 திருவரங்கம்
திருப்பள்ளியெழுச்சி முற்றும்
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்