திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
திருக்குறுந்தாண்டகம்
நிதியினைப் பவளத்தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் * கஞ்சன் மாளக் கண்டு முன், அண்டமாளும் *
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் * கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே. 1
காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதிளிலங்கை செற்ற
ஏற்றினை * இமயம் மேய எழில் மணித்திரளை * இன்ப
வாற்றினை அமுதந் தன்னை அவுண னாருயிரை யுண்ட
கூற்றினைக் * குணங் கொண்டு உள்ளம் ! கூறு நீ கூறுமாறே. 2 திருப்பிரிதி
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து * வானோர்க்
காயிருந்து அமுதம் கொண்ட அப்பனை, எம்பிரானை *
வேயிருஞ் சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற *
மாயிருஞ் சோலை மேய மைந்தனை, வணங்கினேனே. 3 திருமாலிருஞ்சோலை
கேட்க யானுற்றதுண்டு கேழலாய் உலகங் கொண்ட *
பூக்கெழு வண்ணனாரைப் போதரக் கனவில் கண்டு *
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் *
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே. 4
இரும்பு அனன்றுண்ட நீர் போல் எம்பெருமானுக்கு * என்தன்
அரும் பெறலன்பு புக்கிட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன் *
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக் *
கரும்பினின் சாறு போலப் பருகினேற்கு இனியவாறே. 5
மூவரில் முதல்வனாய ஒருவனை உலகம் கொண்ட
கோவினைக் * குடந்தை மேய குருமணித் திரளை * இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை அமரர் சென்னிப்
பூவினைப் * புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே? 6 திருக்குடந்தை (கும்பகோணம்)
இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்ம்மையை * விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய *
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமை யானைத் *
தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே. 7 திருவரங்கம்,
திருவேங்கடம் திருப்பதி
வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசம் ஈன்ற
தேனிடைக் * கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார் *
மானிடப் பிறவி அந்தோ ! மதிக்கிலர் கொள்க * தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே. 8
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையிலெரி நின்றுண்ணும் *
கொள்ளி மேலெறும்பு போலக் குழையுமால் என்தனுள்ளம் *
தெள்ளியீர் ! தேவர்க்கெல்லாம் தேவராய், உலகம் கொண்ட
ஒள்ளியீர் ! * உம்மை யல்லால் எழுமையும் துணையிலோமே. 9
சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீவினையேன் ? *
பத்திமைக் கன்புடையேனாவதே? பணியாய் எந்தாய் ! *
முத்தொளி மரகதமே ! முழங்கொளி முகில் வண்ணா !* என்
அத்த ! நின்னடிமை யல்லால் யாது மொன்றறிகிலேனே. 10
தொண்டெல்லாம் பரவி, நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு * தான் கவலை தீர்ப்பான் ஆவதே? பணியாய் எந்தாய் ! *
அண்டமாய் எண்திசைக்கும் ஆதியாய் ! நீதியான *
பண்டமாம் பரமசோதி ! நின்னையே பரவுவேனே. 11
ஆவியை அரங்கமாலை அழுக்குடம் பெச்சில் வாயால் *
தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் * பிழைத்தவாறென்று அஞ்சினேற்கு அஞ்சலென்று *
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோன்றினாரே. 12 திருவரங்கம்
இரும்பு அனன்றுண்ட நீரும் போதரும் கொள்க * என்தன்
அரும் பிணி பாவமெல்லாம் அகன்றன என்னை விட்டுச் *
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட *
கரும்பினைக் கண்டு கொண்டு என்கண்ணிணை களிக்குமாறே ! 13 திருவரங்கம்
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி * நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்தொழிந்தேன் *
தூவி சேரன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தையானைப் *
பாவியேன் பாவியாது பாவியே னாயினேனே. 14 திருக்குடந்தை (கும்பகோணம்)
முன் பொலா இராவணன் தன் முதுமதிளிலங்கை வேவித்து*
அன்பினால் அனுமன் வந்து ஆங்கடியிணை பணிய நின்றார்க்கு *
என்பெலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்ச மென்னும்
அன்பினால் * ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே. 15
மாய மான் மாயச் செற்று மருதிற நடந்து வையம்
தாய் * அமா பரவை பொங்கத் தடவரை திரித்து * வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்களென்னும் *
தூய மாமாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே. 16
பேசினார் பிறவி நீத்தார் பேர் உளான் பெருமை பேசி *
ஏசினார் உய்ந்து போனார் என்பது இவ்வுலகின் வண்ணம் *
பேசினேன் ஏசமாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு *
ஆசையோ பெரிது கொள்க அலை கடல் வண்ணர் பாலே. 17 திருப்பேர்நகர்
இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி*
அளப்பி லைம்புல னடக்கி அன்பு அவர் கண்ணே வைத்துத் *
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே *
விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையைக் காண்கிற்பாரே. 18
பிண்டியார் மண்டையேந்திப் பிறர் மனை திரிதந்துண்ணும் *
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் * உலகமேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்று
மண்டினார் * உய்யலல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே? 19 திருவரங்கம்,
திருப்பேர்நகர்,
கண்டியூர்,
திருமெய்யம்,
திருக்கச்சி (அத்திகிரி),
திருக்கடல்மல்லை
வானவர் தங்கள் கோனும் மலர்மிசை யயனும் * நாளும்
தேமலர் தூவியேத்தும் சேவடிச் செங்கண்மாலை *
மானவேல் கலியன் சொன்ன வண்தமிழ் மாலை நாலைந்தும் *
ஊனமதின்றி வல்லார் ஒளி விசும்பாள்வர் தாமே. 20
திருக்குறுந்தாண்டகம் முற்றும்.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்