[highlight_content]

Thiruvoymozhi 4-8

திருவாய்மொழி

நான்காம் பத்து

எட்டாம் திருவாய்மொழி

ஏறாளும் இறையோனும், திசைமுகனும் திருமகளும் *

கூறாளும் தனி யுடம்பன், குலங்குலமா அசுரர்களை *

நீறாகும் படியாக, நிருமித்துப் படை தொட்ட *

மாறாளன் கவராத மணிமாமை, குறைவிலமே.       4.8.1

மணிமாமை குறைவில்லா, மலர் மாதருறை மார்பன் *

அணிமானத் தடவரைத் தோள், அடலாழித் தடக்கையன் *

பணிமானம் பிழையாமே, அடியேனைப் பணி கொண்ட *

மணிமாயன் கவராத மடநெஞ்சால், குறைவிலமே.     4.8.2

மடநெஞ்சால் குறைவில்லா, மகள் தாய் செய்தொரு பேய்ச்சி *

விட நஞ்ச முலை சுவைத்த, மிகு ஞானச் சிறு குழவி *

பட நாகத்தணைக் கிடந்த, பருவரைத் தோள் பரம் புருடன் *

நெடு மாயன் கவராத நிறைவினால், குறைவிலமே.              4.8.3

நிறைவினால்குறைவில்லா, நெடும்பணைத்தோள் மடப்பின்னை *

பொறையினால் முலையணைவான், பொருவிடை யேழடர்த்துகந்த *

கறையினார் துவருடுக்கை, கடையாவின் கழிகோல்கை *

சறையினார் கவராத தளிர் நிறத்தால், குறைவிலமே.            4.8.4

தளிர் நிறத்தால் குறைவில்லாத், தனிச் சிறையில் விளப்புற்ற *

கிளி மொழியாள் காரணமாக், கிளரரக்கன் நகரெரித்த *

களிமலர்த் துழாயலங்கல், கமழ் முடியன் கடல் ஞாலத்து *

அளிமிக்கான் கவராத அறிவினால், குறைவிலமே.     4.8.5

அறிவினால் குறைவில்லா, அகல் ஞாலத்தவரறிய *

நெறி யெல்லா மெடுத்துரைத்த, நிறை ஞானத்தொரு மூர்த்தி *

குறிய மாணுருவாகிக், கொடுங் கோளால் நிலம் கொண்ட *

கிறியம்மான் கவராத கிளரொளியால், குறைவிலமே.         4.8.6

கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து *

கிளரொளிய இரணியனது, அகல் மார்பம் கிழித்துகந்த *

வளரொளிய கனலாழி, வலம்புரியன் மணிநீல *

வளரொளியான் கவராத வரிவளையால், குறைவிலமே.      4.8.7

வரிவளையால் குறைவில்லாப், பெரு முழக்கால் அடங்காரை *

எரியழலம் புகவூதி, இருநிலமுன் துயர் தவிர்த்த *

தெரிவரிய சிவன் பிரமன், அமரர் கோன் பணிந்தேத்தும் *

விரிபுகழான் கவராத மேகலையால், குறைவிலமே.    4.8.8

மேகலையால் குறைவில்லா, மெலிவுற்ற வகலல்குல் *

போகமகள் புகழ்த் தந்தை, விறல் வாணன் புயம் துணித்து

நாக மிசைத் துயில்வான் போல், உலகெல்லாம் நன்கொடுங்க *

யோகணைவான் கவராத உடம்பினால், குறைவிலமே.         4.8.9

உடம்பினால் குறைவில்லா, உயிர் பிரிந்த மலைத் துண்டம் *

கிடந்தன போல் துணிபலவா, அசுரர் குழாம் துணித்துகந்த *

தடம் புனல சடை முடியன், தனியொரு கூறமர்ந்துறையும் *

உடம்புடையான் கவராத உயிரினால், குறைவிலமே.          4.8.10

உயிரினால் குறைவில்லா, உலகேழ் தன்னுள்ளொடுக்கித் *

தயிர் வெண்ணெ யுண்டானைத், தடங்குருகூர்ச் சடகோபன் *

செயிரில் சொல்லிசை மாலை, ஆயிரத்துள் இப்பத்தால் *

வயிரம் சேர் பிறப்பறுத்து, வைகுந்தம் நண்ணுவரே.         4.8.11

error: Content is protected !!