IRAMANUSA NOOTRANDADI

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த

ப்ரபந்நகாயத்ரி என்னும்

இராமாநுச நூற்றந்தாதி

தனியன்கள்

(வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை)

முன்னைவினை அகல மூங்கிற்குடி அமுதன்*

பொன்னங்கழற்கமலப்போதிரண்டும்* – என்னுடைய

சென்னிக்கணியாகச்சேர்த்தினேன்* தென்புலத்தார்க்கு

என்னுக்கடவுடையேன்யான்.

நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதின்றிநண்ணினர்பால் *

சயந்தருகீர்த்திஇராமானுசமுனிதாளிணைமேல்*

உயர்ந்தகுணத்துத்திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்

இயம்பும்கலித்துறைஅந்தாதி ஓதஇசைநெஞ்சமே!

இனியென்குறைநமக்கு?  எம்பெருமானார் திருநாமத்தால்*

முனிதந்தநூற்றெட்டுச் சாவித்திரிஎன்னும்நுண் பொருளை*

கனிதந்தசெஞ்சொல்கலித்துறைஅந்தாதிபாடித்தந்தான்*

புனிதன்திருவரங்கத்தமுதாகியபுண்ணியனே.

சொல்லின்தொகைகொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்*

நல்லன்பரேத்தும்உன்நாமமெல்லாம்என்தன்நாவினுள்ளே*

அல்லும்பகலம்அமரும்படிநல்கு அறுசமயம்

வெல்லும்பரம!* இராமானுச! இது என்விண்ணப்பமே.

பூமன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ் மலிந்த

பாமன்னு மாறனடி பணிந்துய்ந்தவன் * பல்கலையோர்

தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்

நாம் மன்னி வாழ * நெஞ்சே ! சொல்லுவோம் அவன் நாமங்களே. 1

கள்ளார் பொழில் தென்னரங்கன் * கமலப் பதங்கள் நெஞ்சில்

கொள்ளா மனிசரை நீங்கிக் * குறையல் பிரானடிக் கீழ்

விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால்

உள்ளாது என்நெஞ்சு * ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே. 2

பேரியல் நெஞ்சே ! அடிபணிந்தேன் உன்னை * பேய்ப்பிறவிப்

பூரியரோடுள்ள சுற்றம் புலற்றி * பொருவருஞ்சீர்

ஆரியன் செம்மை யிராமானுச முனிக்கன்பு செய்யும்

சீரிய பேறுடையார் * அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே. 3

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி * மருள் சுரந்த

முன்னைப் பழவினை வேரறுத்து * ஊழி முதல்வனையே

பன்னப் பணித்த இராமானுசன் பரன்பாதமும் என்

சென்னித் தரிக்க வைத்தான் * எனக்கு ஏதும் சிதைவில்லையே. 4

எனக்குற்ற செல்வம் இராமானுசனென்று * இசையகில்லா

மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் * அவன் மன்னிய சீர்

தனக்குற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என்பா

இனக் குற்றம் காணகில்லார் * பத்தி யேய்ந்த இயல்விதென்றே. 5

இயலும் பொருளும் இசையத் தொடுத்து * ஈன்கவிகள் அன்பால்

மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை * மதியின்மையால்

பயிலுங் கவிகளில் பத்தியில்லாத என்பாவி நெஞ்சால்

முயல்கின்றனன் * அவன்தன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே. 6

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் * வஞ்ச முக்குறும்பாம்

குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் *

பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ்பாடி அல்லா

வழியைக் கடத்தல் * எனக்கு இனி யாதும் வருத்தமன்றே. 7

வருத்தும் புறவிருள் மாற்ற * எம் பொய்கைப் பிரான் மறையின்

குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி * ஒன்றத்

திரித்தன் றெரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே

இருத்தும் பரமன் * இராமானுசன் எம் இறையவனே. 8

இறைவனைக் காணும் இதயத்திருள் கெட * ஞானமென்னும்

நிறை விளக்கேற்றிய பூதத் திருவடி தாள்கள் * நெஞ்சத்து

உறைய வைத்தாளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்

மறையினைக் காத்து * இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே. 9

மன்னிய பேரிருள் மாண்ட பின் * கோவலுள் மாமலராள்

தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் * தமிழ்த் தலைவன்

பொன்னடி போற்றும் இராமானுசற் கன்பு பூண்டவர் தாள்

சென்னியில் சூடும் * திருவுடையார் என்றும் சீரியரே. 10

சீரிய நான்மறைச் செம்பொருள் * செந்தமிழா லளித்த

பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள் * சரணாம் பதுமத்

தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்

காரிய வண்மை * என்னால் சொல்லொணாதிக் கடலிடத்தே. 11

இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் * இணையடிப் போது

அடங்கு மிதயத் திராமானுசன் * அம்பொற் பாதமென்றும்

கடங்கொண் டிறைஞ்சும் திருமுனிவர்க் கன்றிக் காதல் செய்யாத்

திடங் கொண்ட ஞானியர்க்கே * அடியேன் அன்பு செய்வதுவே. 12

செய்யும் பசுந்துளவத் தொழில் மாலையும் * செந்தமிழில்

பெய்யும் மறைத் தமிழ் மாலையும் * பேராத சீரரங்கத்து

ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி யாதரியா

மெய்யன் * இராமானுசன் சரணே கதி வேறெனக்கே. 13

கதிக்குப் பதறி * வெங்கானமும் கல்லும் கடலுமெல்லாம்

கொதிக்கத் தவஞ்செய்யும் கொள்கையற்றேன் *கொல்லிகாவலன் சொல்

பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே

துதிக்கும் பரமன் * இராமானுசன் என்னைச் சோர்விலனே. 14

சோராத காதல் பெருஞ்சுழிப்பால் * தொல்லை மாலையொன்றும்

பாராது அவனைப் பல்லாண்டென்று காப்பிடும் * பான்மையன் தாள்

பேராத வுள்ளத் திராமானுசன் தன் பிறங்கிய சீர்

சாரா மனிசரைச் சேரேன் * எனக்கு என்ன தாழ்வினியே ? 15

தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து * தலமுழுதும் கலியே

ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் * அரங்கர் மெளலி

சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்

வாழ்கின்ற வள்ளல் * இராமானுச னென்னும் மாமுனியே. 16

முனியார் துயரங்கள் முந்திலும் * இன்பங்கள் மொய்த்திடினும்

கனியார் மனம் கண்ணமங்கை நின்றானைக் * கலை பரவும்

தனியானையைத் தண்தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்

இனியானை * எங்க ளிராமானுசனை வந்தெய்தினரே. 17

எய்தற்கரிய மறைகளை * ஆயிரம் இன் தமிழால்

செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் * சிந்தையுள்ளே

பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்

உய்தற்கு உதவும் * இராமானுசன் எம் உறு துணையே. 18

உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் * உயர் குருவும்

வெறிதரு பூமகள் நாதனும் * மாறன் விளங்கிய சீர்

நெறி தரும் செந்தமி ழாரணமே யென்று இந்நீணிலத்தோர்

அறிதர நின்ற * இராமானுசன் எனக்காரமுதே. 19

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் * அமுதத் திருவாய்

ஈரத் தமிழின் இசையுணர்ந்தோர்கட்கு * இனியவர் தம்

சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால்

வாரிப் பருகும் * இராமானுசன் என்தன் மாநிதியே. 20

நிதியைப் பொழியும் முகிலென்று * நீசர்தம் வாசல் பற்றித்

துதி கற்றுலகில் துவள்கின்றிலேன் இனித் * தூய் நெறி சேர்

எதிகட்கிறைவன் யமுனைத் துறைவ னிணையடியாம்

கதி பெற்றுடைய * இராமானுசன் என்னைக் காத்தனனே. 21

கார்த்திகையானும் கரிமுகத்தானும் * கனலும் முக்கண்

மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு * மூவுலகும்

பூத்தவனே ! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த

தீர்த்தனை யேத்தும் * இராமானுசன் என்தன் சேம வைப்பே. 22

வைப்பாய வான்பொருளென்று * நல்லன்பர் மனத்தகத்தே

எப்போதும் வைக்கும் இராமானுசனை * இருநிலத்தில்

ஒப்பாரிலாத உறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து

முப்போதும் வாழ்த்துவன் * என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே?   23

மொய்த்த வென்தீவினையால் பல்லுடல்தொறும்மூத்து * அதனால்

எய்த்தொழிந்தேன் முனநாள்க ளெல்லாம் * இன்று கண்டுயர்ந்தேன்

பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்

கைத்த மெய்ஞ்ஞானத்து * இராமானுசனென்னும் கார் தன்னையே. 24

காரேய் கருணை யிராமானுச ! * இக்கடலிடத்தில்

ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை? * அல்லலுக்கு

நேரே யுறைவிடம் நான் வந்து நீயென்னை யுய்த்த பின் உன்

சீரே உயிர்க்குயிராய் * அடியேற்கு இன்று தித்திக்குமே. 25

திக்குற்ற கீர்த்தி யிராமானுசனை * என் செய்வினையாம்

மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை * மேவு நல்லோர்

எக்குற்றவாளர் எது பிறப்பு ஏதியல்வாக நின்றோர்

அக்குற்றம் அப்பிறப்பு * அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே. 26

கொள்ளக் குறைவற்றிலங்கி * கொழுந்து விட்டோங்கிய வுன்

வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் *

வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக் கிழுக்கிதென்று

தள்ளுற்றிரங்கும் * இராமானுச ! என் தனிநெஞ்சமே. 27

நெஞ்சிற் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் * நங்கள்

பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் * பாதம் நண்ணா

வஞ்சர்க்கரிய இராமானுசன் புகழன்றி என்வாய்

கொஞ்சிப் பரவகில்லாது * என்ன வாழ்வு இன்று கூடியதே ! 28

கூட்டும் விதி என்று கூடுங்கொலோ? தென்குருகைப் பிரான்

பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத் * தன் பத்தியென்னும்

வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்

ஈட்டங்கள் தன்னை * என்நாட்டங்கள் கண்டு இன்பமெய்திடவே. 29

இன்பந்தரு பெருவீடு வந்தெய்திலென் ? * எண்ணிறந்த

துன்பந்தரு நிரயம் பலசூழிலென் ? * தொல்லுலகில்

மன்பல்லுயிர்கட் கிறையவன் மாயனென மொழிந்த

அன்பன் அனகன் * இராமானுசன் என்னை யாண்டனனே. 30

ஆண்டுகள் நாள் திங்களாய் * நிகழ் காலமெல்லாம் மனமே!

ஈண்டு பல்யோனிகள் தோறுழல்வோம் * இன்று ஓரெண்ணின்றியே

காண்தகு தோளண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக் கீழ்ப்

பூண்ட வன்பாளன் * இராமானுசனைப் பொருந்தினமே. 31

பொருந்திய தேசும் பொறையும் திறலும் * புகழும் நல்ல

திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் * செறுகலியால்

வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத் தளித்த

அருந்தவன் * எங்க ளிராமானுசனை யடைபவர்க்கே. 32

அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் * கையாழி யென்னும்

படையோடு நாந்தகமும் படர் தண்டும் * ஒண் சார்ங்க வில்லும்

புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று

இடையே * இராமானுச முனியாயின இந்நிலத்தே. 33

நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக்கலியை * நினைப்பரிய

பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை * என்பெய்வினை தென்

புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்

நலத்தைப் பொறுத்தது * இராமானுசன் தன் நயப்புகழே. 34

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே * சில மானிடத்தைப்

புயலே யெனக் கவி போற்றி செய்யேன் * பொன்னரங்க மென்னில்

மயலே பெருகும் இராமானுசன் மன்னு மாமலர்த்தாள்

அயரேன் * அருவினை என்னை எவ்வாறு இன்றடர்ப்பதுவே. 35

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் *

அன்று ஆரணச் சொற்

கடல் கொண்ட வொண் பொருள் கண்டளிப்பப் *

பின்னும் காசினியோர்

இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண் பொருள்

கொண்டு அவர் பின்

படருங்குணன் * எம் இராமானுசன் தன்படி இதுவே. 36

படி கொண்ட கீர்த்தி இராமாயண மென்னும் பத்தி வெள்ளம் *

குடி கொண்ட கோயில் இராமானுசன் குணங்கூறும் * அன்பர்

கடி கொண்ட மாமலர்த்தாள் கலந்துள்ளங் கனியும் நல்லோர்

அடி கண்டு கொண்டுகந்து * என்னையும் ஆளவர்க் காக்கினரே. 37

ஆக்கி அடிமை நிலைப்பித்தனை என்னை இன்று * அவமே

போக்கிப் புறத்திட்டதென் பொருளா முன்பு * புண்ணியர் தம்

வாக்கிற் பிரியா இராமானுச! நின்னருளின் வண்ணம்

நோக்கில் தெரிவரிதால் * உரையாய் இந்த நுண்பொருளே. 38

பொருளும் புதல்வரும் பூமியும் * பூங்குழலாரு மென்றே

மருள் கொண்டிளைக்கும் நமக்கு நெஞ்சே ! * மற்றுளார் தரமோ?

இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறில் பெரும் புகழே

தெருளும் தெருள் தந்து * இராமானுசன் செய்யும் சேமங்களே. 39

சேம நல் வீடும் பொருளும் தருமமும் * சீரிய நற்

காமமு மென்றிவை நான்கென்பர் * நான்கினும் கண்ணனுக்கே

ஆமது காமம் அறம் பொருள் வீடிதற்கென் றுரைத்தான்

வாமனன் சீலன் * இராமானுசன் இந்த மண்மிசையே. 40

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே

கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்க ளெல்லாம்

அண்ண லிராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே

நண்ணரு ஞானம் தலைக் கொண்டு * நாரணற் காயினரே. 41

ஆயிழையார் கொங்கை தங்கும் * அக்காதலளற் றழுந்தி

மாயும் என்னாவியை வந்தெடுத்தான் இன்று * மாமலராள்

நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்க னென்னும்

தூயவன் * தீதிலிராமானுசன் தொல்லருள் சுரந்தே. 42

சுரக்கும் திருவும் உணர்வும் * சொலப்புகில் வாயமுதம்

பரக்கும் இருவினை பற்றறவோடும் * படியிலுள்ளீர் !

உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறுமுறு கலியைத்

துரக்கும் பெருமை * இராமானுசனென்று சொல்லுமினே. 43

சொல்லார் தமிழொரு மூன்றும்* சுருதிகள் நான்கும் எல்லை

யில்லா அறநெறி யாவும் தெரிந்தவன் * எண்ணருஞ்சீர்

நல்லார் பரவும் இராமானுசன் திருநாமம் நம்பிக்

கல்லார் அகலிடத்தோர் * எது பேறென்று காமிப்பரே. 44

பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி * அப்பேறளித்தற்கு

ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி * என்றிப் பொருளைத்

தேறுமவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்

கூறும் பரமன்று * இராமானுச ! மெய்ம்மை கூறிடிலே. 45

கூறும் சமயங்களாறும் குலைய * குவலயத்தே

மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை * மதியிலியேன்

தேறும் படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்

ஏறும் குணனை * இராமானுசனை இறைஞ்சினமே. 46

இறைஞ்சப் படும் பரன் ஈசனரங்கனென்று * இவ்வுலகத்து

அறஞ் செப்புமண்ணல் இராமானுசன் * என்னருவினையின்

திறம் செற் றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே

நிறைந்தொப்பற விருந்தான் * எனக்காரும் நிகரில்லையே ! 47

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு * நின்னருளின் கணன்றிப்

புகலொன்றுமில்லை அருட்கு மஃதே புகல் * புன்மையிலோர்

பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே

அகலும் பொருளென் * பயனிருவோமுக்குமான பின்னே? 48

ஆனது செம்மை அறனெறி * பொய்ம்மை அறுசமயம்

போனது பொன்றி யிறந்தது வெங்கலி * பூங்கமலத்

தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்

தானதில் மன்னும் * இராமானுசனித் தலத்துதித்தே. 49

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் * ஒன்னலர் நெஞ்ச மஞ்சிக்

கொதித்திட மாறி நடப்பன * கொள்ளை வன் குற்றமெல்லாம்

பதித்த வென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவு தொல்சீர்

எதித்தலை நாதன் * இராமானுசன் றன் இணையடியே. 50

அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய் * அன்று பாரதப்போர்

முடியப் பரினெடுந் தேர்விடுங் கோனை * முழுதுணர்ந்த

அடியர்க் கமுதம் இராமானுசனென்னை ஆளவந்திப்

படியிற் பிறந்தது * மற்றில்லை காரணம் பார்த்திடிலே. 51

பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப * இப் பார்முழுதும்

போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேனிடைத் தான் புகுந்து *

தீர்த்தான் இருவினை தீர்த்தரங்கன் செய்ய தாளிணையோ

டார்த்தான் * இவையெம் இராமானுசன் செய்யும் அற்புதமே. 52

அற்புதன் செம்மை இராமானுசன் * என்னை ஆளவந்த

கற்பகம் கற்றவர் காமுறு சீலன் * கருதரிய

பற்பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரனதென்னும்

நற்பொருள் தன்னை * இந்நானிலத்தே வந்து நாட்டினனே. 53

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன * நாரணனைக்

காட்டிய வேதம் களிப்புற்றது * தென் குருகை வள்ளல்

வாட்டமிலா வண்டமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்

ஈட்டிய சீலத்து * இராமானுசன் றன் இயல்வு கண்டே. 54

கண்டவர் சிந்தை கவரும் * கடிபொழில் தென்னரங்கன்

தொண்டர் குலாவும் இராமானுசனைத் * தொகை யிறந்த

பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்

கொண்டலை மேவித் தொழும் * குடியாமெங்கள் கோக்குலமே. 55

கோக்குல மன்னரை மூவெழுகால் * ஒரு கூர்மழுவால்

போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் * புவனமெங்கும்

ஆக்கிய கீர்த்தி இராமானுசனை அடைந்த பின் என்

வாக்குரையாது * என்மனம் நினையாதினி மற்றொன்றையே. 56

மற்றொரு பேறு மதியாது * அரங்கன் மலரடிக்காள்

உற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை *

நற்றவர் போற்றும் இராமானுசனை யிந்நானிலத்தே

பெற்றனன் * பெற்ற பின் மற்றறியேனொரு பேதைமையே. 57

பேதையர் வேதப் பொருளிதென்றுன்னிப் * பிரமம் நன்றென்

றோதி மற்றெல்லா உயிரும் அஃதென்று * உயிர்கள் மெய் விட்

டாதிப் பரனொ டொன்றா மென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்

வாதில் வென்றான் * எம் இராமானுசன் மெய்ம்மதிக் கடலே. 58

கடலளவாய திசை யெட்டினுள்ளும் * கலியிருளே

மிடைதரு காலத் திராமானுசன் * மிக்க நான்மறையின்

சுடரொளியாலவ் விருளைத் துரந்திலனேல், உயிரை

உடையவன் * நாரணன் என்றறிவாரில்லை உற்றுணர்ந்தே. 59

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும்* திருவாய்மொழியின்

மணந்தரும் இன்னிசை மன்னுமிடந்தொறும் * மாமலராள்

புணர்ந்த பொன்மார்வன் பொருந்தும் பதிதொறும் புக்கு நிற்கும்

குணந்திகழ் கொண்டல் * இராமானுசன் எங்குலக் கொழுந்தே. 60

கொழுந்துவிட்டோடிப் படரும் வெங்கோள்வினையால் *நிரயத்து

அழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட பின்னும் *

அறுமுனிவர் தொழும் தவத்தோன் எம்மிராமானுசன் தொல்புகழ் சுடர்மிக்

கெழுந்தது * அத்தால் நல்லதிசயங் கண்டது இருநிலமே. 61

இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி * இன்று யானிறையும்

வருந்தேன் இனி எம் இராமானுசன் * மன்னு மாமலர்த்தாள்

பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மைசெய்யாப்

பெருந் தேவரைப் பரவும் * பெரியோர் தம் கழல் பிடித்தே. 62

பிடியைத் தொடரும் களிறென்ன * யான் உன் பிறங்கிய சீர்

அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் * அறுசமயச்

செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து இப்

படியைத் தொடரும் * இராமானுச! மிக்க பண்டிதனே! 63

பண்தரு மாறன் பசுந்தமிழ் * ஆனந்தம் பாய் மதமாய்

விண்டிட எங்களிராமானுச முனி வேழம் * மெய்ம்மை

கொண்ட நல்வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே

மண்டி வந்தேன்றது * வாதியர்காள்! உங்கள் வாழ்வற்றதே. 64

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு * என்றும் மறையவர் தம்

தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது * தத்துவ நூல்

கூழற்றது குற்றமெல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்

நாழற்றது * நம் இராமானுசன் தந்த ஞானத்திலே. 65

ஞானம் கனிந்த நலங் கொண்டு * நாள் தொறும் நைபவர்க்கு

வானம் கொடுப்பது மாதவன் * வல்வினையேன் மனத்தில்

ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை யெய்தினர்க்கு அத்

தானம் கொடுப்பது * தன் தகவென்னும் சரண் கொடுத்தே. 66

சரணமடைந்த தருமனுக்காய் * பண்டு நூற்றுவரை

மரண மடைவித்த மாயவன் * தன்னை வணங்க வைத்த

கரணமிவை உமக்கன்றென்று இராமானுசன் உயிர்கட்கு

அரணங் கமைத்திலனேல் * அரணார் மற்றிவ் வாருயிர்க்கே. 67

ஆரெனக்கின்று நிகர் சொல்லில்?* மாயன்அன்று ஐவர் தெய்வத்

தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் * பொருள் தெரியப்

பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்

சீரினில் சென்று பணிந்தது * என் ஆவியும் சிந்தையுமே. 68

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து * முன்னாள்

அந்தமுற் றாழ்ந்தது கண்டு * அவை யென் தனக்கன்றருளால்

தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து *

எந்தை இராமானுசன் வந்தெடுத்தனன் இன்று என்னையே. 69

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து *

எண்ணில் பல்குணத்த

உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் *

அன்றி என்பால் பின்னையும் பார்க்கில் நலமுளதே ?

உன் பெருங்கருணை தன்னை யென் பார்ப்பர் ? * இராமானுச !

உன்னைச் சார்ந்தவரே. 70

சார்ந்தது என்சிந்தை உன் தாளிணைக்கீழ் * அன்புதான் மிகவும்

கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு * உன்றன் குணங்களுக்கே

தீர்ந்ததென் செய்கை முன் செய்வினை நீ செய்வினை யதனால்

பேர்ந்தது * வண்மை இராமானுச! எம் பெருந்தகையே. 71

கைத்தனன் தீய சமயக் கலகரைக் * காசினிக்கே

உய்த்தனன் தூய மறைனெறி தன்னை * என்றுன்னி யுள்ளம்

நெய்த்த வன்போடிருந் தேத்தும் நிறை புகழோருடனே

வைத்தனன் என்னை * இராமானுசன் மிக்க வண்மை செய்தே. 72

வண்மையினாலுந் தன் மாதகவாலும் * மதிபுரையும்

தண்மையினாலுமித் தாரணியோர் கட்குத் * தான் சரணாய்

உண்மை நன் ஞானம் உரைத்த இராமானுசனை யுன்னும்

திண்மை யல்லாலெனக் கில்லை * மற்றோர் நிலை தேர்ந்திடிலே. 73

தேரார் மறையின் திறமென்று * மாயவன் தீயவரைக்

கூராழி கொண்டு குறைப்பது * கொண்டல் அனைய வண்மை

ஏரார் குணத்தெம் இராமானுசனவ் வெழில் மறையில்

சேராதவரைச் சிதைப்பது * அப்போதொரு சிந்தை செய்தே. 74

செய்த்தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் * திருவரங்கர்

கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி * நங்கண் முகப்பே

மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழே

மொய்த்தலைக்கும் வந்து * இராமானுச! என்னை முற்று னின்றே. 75

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் * நிறை வேங்கடப் பொற்-

குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும் *

உன்றனக் கெத்தனை இன்பந் தரும், உன் இணை மலர்த்தாள்

என் றனக்கும் அது * இராமானுச ! இவை யீந்தருளே. 76

ஈந்தனன் ஈயாத இன்னருள் * எண்ணில் மறைக் குறும்பைப்

பாய்ந்தனன் அம்மறைப் பல்பொருளால் * இப்படி யனைத்தும்

ஏய்ந்தனன் கீர்த்தியினாலென் வினைகளை வேர் பறியக்

காய்ந்தனன் * வண்மை இராமானுசற்கென் கருத்தினியே? 77

கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் * கருதரிய

வருத்தத்தினால் மிக வஞ்சித்து * நீ யிந்த மண்ணகத்தே

திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின் னென்னெஞ்சில்

பொருத்தப் படாது * எம்இராமானுச! மற்றோர் பொய்ப்பொருளே. 78

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து * இந்தப் பூதலத்தே

மெய்மைப் புரக்கும் இராமானுசன் நிற்க * வேறு நம்மை

உய்யக் கொளவல்ல தெய்வமிங்கி யாதென்றுலர்ந்தவமே

ஐயப்படா நிற்பர் * வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே. 79

நல்லார் பரவும் இராமானுசன் * திருநாமம் நம்ப

வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் * அவர்க்கே

எல்லா விடத்திலும் என்று மெப்போதிலும் எத்தொழும்பும்

சொல்லால் மனத்தால் கருமத்தினால் * செய்வன் சோர்வின்றியே. 80

சோர்வின்றி உன்றன் துணையடிக்கீழ்த் * தொண்டு பட்டவர்பால்

சார்வின்றி நின்ற எனக்கு* அரங்கன் செய்ய தாளிணைகள்

பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச ! இனியுன்

சீரொன்றிய கருணைக்கு * இல்லை மாறு தெரிவுறிலே. 81

தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது * வெந்தீவினையால்

உருவற்ற ஞானத்துழல்கின்ற என்னை * ஒருபொழுதில்

பொருவற்ற கேள்வியனாக்கி நின்றானென்ன புண்ணியனோ !

தெரிவுற்ற கீர்த்தி * இராமானுசனென்னும் சீர்முகிலே. 82

சீர் கொண்டு பேரறம் செய்து * நல்வீடு செறிது மென்னும்

பார் கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் * உன்பத யுகமாம்

ஏர் கொண்ட வீட்டை எளிதினி லெய்துவன் உன்னுடைய

கார் கொண்ட வண்மை * இராமானுசl இது கண்டு கொள்ளே. 83

கண்டு கொண்டேன் எம் இராமானுசன்

தன்னைக் * காண்டலுமே

தொண்டு கொண்டேன் அவன் தொண்டர்

பொற்றாளில் * என்தொல்லை வெந்நோய்

விண்டு கொண்டேன் அவன் சீர்

வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று

உண்டு கொண்டேன் * இன்னம்

உற்றன வோதில் உலப்பில்லையே. 84

ஓதிய வேதத்தின் உட்பொருளாய் * அதனுச்சி மிக்க சோதியை

நாதனென அறியாது உழல்கின்ற தொண்டர் *

பேதைமை தீர்த்த இராமானுசனைத் தொழும் பெரியோர்

பாதமல்லால் என்தனாருயிர்க்கு * யாதொன்றும் பற்றில்லையே. 85

பற்றா மனிசரைப் பற்றி * அப்பற்று விடாதவரே

உற்றாரென வுழன்று ஓடி நையேன் இனி * ஒள்ளிய நூல்

கற்றார் பரவும் இராமானுசனைக் கருதுமுள்ளம்

பெற்றார் யவர் * அவர் எம்மை நின்றாளும் பெரியவரே. 86

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் * தன் குணங்கட்கு

உரிய சொல் என்று முடையவ னென்றென்று * உணர்வின் மிக்கோர்

தெரியும் வண் கீர்த்தி இராமானுசன் மறை தேர்ந்து உலகில்

புரியும் நல்ஞானம் * பொருந்தாதவரைப் பொரும் கலியே. 87

கலி மிக்க செந்நெல் கழனிக்குறையல் * கலைப் பெருமான்

ஒலி மிக்க பாடலை உண்டு தன்னுள்ளம் தடித்து * அதனால்

வலி மிக்க சீயம் இராமானுசன் மறை வாதியராம்

புலி மிக்கதென்று * இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே. 88

போற்றரும் சீலத்து இராமானுச ! * நின்புகழ் தெரிந்து

சாற்றுவனேல் அதுதாழ்வு * அதுதீரில் உன்சீர் தனக்கு ஓர்

ஏற்றமென்றே கொண்டிருக்கிலும் என்மனம் ஏத்தியன்றி

ஆற்றகில்லாது * இதற்கு என்னினைவா யென்றிட்டு அஞ்சுவனே. 89

நினையார் பிறவியை நீக்கும் பிரானை * இந்நீள் நிலத்தே

எனையாள வந்த இராமானுசனை * இருங்கவிகள்

புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்

வனையார் * பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே. 90

மருள் சுரந்து ஆகம வாதியர் கூறும் * அவப்பொருளாம்

இருள் சுரந்தெய்த்த உலகிருள் நீங்கத் * தன்னீண்டிய சீர்

அருள் சுரந்து எல்லா வுயிர்கட்கும் நாதனரங்க னென்னும்

பொருள் சுரந்தான் * எம் இராமானுசன் மிக்க புண்ணியனே. 91

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் * அடிபோற்றி செய்யும்

நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன் * செம்மை நூற்புலவர்க்கு

எண்ணருங் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்து என்

கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் * நின்ற இக்காரணம் கட்டுரையே. 92

கட்டப் பொருளை மறைப் பொருளென்று * கயவர் சொல்லும்

பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே ? * என் பெருவினையைக்

கிட்டிக் கிழங்கொடு தன்னருளென்னு மொள் வாளுருவி

வெட்டிக் களைந்த * இராமானுசனென்னும் மெய்த்தவனே. 93

தவம் தரும் செல்வம் தகவும் தரும் * சலியாப் பிறவிப்

பவம் தரும் தீவினை பாற்றித் தரும் * பரந்தாம மென்னும்

திவம் தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு

உவந்தருந்தேன் * அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே. 94

உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து* அவர்க்குஉயவே

பண்ணும் பரனும் பரிவிலனாம் படி * பல்லுயிர்க்கும்

விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம் இராமானுசன்

மண்ணின் தலத்து உதித்து * மறை நாலும் வளர்த்தனனே. 95

வளரும் பிணி கொண்ட வல்வினையால் * மிக்க நல்வினையில்

கிளரும் துணிவு கிடைத்தறியாது * முடைத்தலையூன்

தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்கு

உளர் எம் இறைவர் * இராமானுசன் தன்னை யுற்றவரே. 96

தன்னையுற்றாட் செய்யும் தன்மையினோர் *மன்னு தாமரைத்தாள்

தன்னை யுற்றாட் செய்ய என்னை யுற்றான் இன்று தன்தகவால் *

தன்னை யுற்றாரன்றித் தன்மை யுற்றார் இல்லை யென்றறிந்து

தன்னை யுற்றாரை * இராமானுசன் குணம் சாற்றிடுமே. 97

இடுமே இனிய சுவர்க்கத்தில்? * இன்னும் நரகிலிட்டுச்

சுடுமே ? அவற்றைத் தொடர் தரு தொல்லை * சுழல் பிறப்பில்

நடுமே ? இனி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே

விடுமே ? சரணமென்றால் * மனமே ! நையல் மேவுதற்கே. 98

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் * தாழ் சடையோன்

சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் * நான் மறையும்

நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள்நிலத்தே

பொற்கற்பகம் * எம் இராமானுச முனி போந்த பின்னே. 99

போந்ததென்னெஞ்சென்னும் பொன்வண்டு *உனதடிப்போதில் ஒண்சீ

ராந்தெளி தேனுண்டு அமர்ந்திட வேண்டி * நின்பாலதுவே

ஈந்திட வேண்டும் இராமானுச ! இதுவன்றி ஒன்றும்

மாந்தகில்லாது * இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே. 100

மயக்கும் இருவினை வல்லியில் பூண்டு * மதி மயங்கித்

துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் * துயரகற்றி

உயக் கொண்டு நல்கும் இராமானுச ! என்றது, உன்னை யுன்னி,

நயக்கு மவர்க்கிது இழுக்கென்பர் * நல்லவ ரென்று நைந்தே. 101

நையும் மனம் உன் குணங்களை யுன்னி * என் நா இருந்து எம்

ஐயனி ராமானுச னென்றழைக்கும் * அருவினையேன்

கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்

வையமிதனில் * உன் வண்மை என் பால் என் வளர்ந்ததுவே? 102

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் * அன்று வாளவுணன்

கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் * கீர்த்திப் பயிரெழுந்து

விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என் தன் மெய் வினை நோய்

களைந்து * நன் ஞான மளித்தனன் கையில் கனியென்னவே. 103

கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் * உன்தன்

மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் * நிரயத்

தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ

செய்யில் தரிப்பன் * இராமானுச! என் செழுங் கொண்டலே! 104

செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் * திருவடிக் கீழ்

விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன் ஞானி * நல் வேதியர்கள்

தொழும் திருப்பாத னிராமானுசனைத் தொழும் பெரியோர்

எழுந்திரைத் தாடும் இடம் * அடியேனுக்கு இருப்பிடமே. 105

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் *மாலிருஞ்சோலையென்னும்

பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் * அவை தம்மொடும் வந்து

இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து

இருப்பிடம் * என்தனிதயத் துள்ளே தனக்கின்புறவே. 106

இன்புற்ற சீலத்து இராமானுச ! * என்றும் எவ்விடத்தும்

என்புற்ற நோயுடல் தோறும் பிறந்து இறந்து * எண்ணரிய

துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டு, உன் தொண்டர்கட்கே

அன்புற்றிருக்கும் படி * என்னை யாக்கி அங்காட் படுத்தே. 107

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் * அணியாக மன்னும்

பங்கய மாமலர் பாவையைப் போற்றுதும் * பத்தியெல்லாம்

தங்கியதென்னத் தழைத்து நெஞ்சே! நம் தலை மிசையே

பொங்கிய கீர்த்தி * இராமானுசனடிப் பூமன்னவே. 108

இராமாநுச நூற்றந்தாதி முற்றும்

திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.