Irandam Thiruvandadi

பூதத்தாழ்வார் அருளிச்செய்த

இரண்டாம் திருவந்தாதி

தனியன்

(திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச்செய்தது(

என்பிறவிதீரஇறைஞ்சினேன் இன்னமுதா

அன்பே தகளியளித்தானை* – நன்புகழ்சேர்

சீதத்தார்முத்துக்கள்சேரும் கடல்மல்லைப்

பூதத்தார்பொன்னங்கழல்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக *

இன்புருகு சிந்தை யிடு திரியா *- நன்புருகி

ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு *

ஞானத் தமிழ் புரிந்த நான். 1

ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்தன் நாமங்கள் *

தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் *- வானத்

தணியமரர் ஆக்குவிக்கு மஃதன்றே? * நங்கள்

பணியமரர் கோமான் பரிசு. 2

பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம் *

புரிவார் புகப் பெறுவர் போலாம் *- புரிவார்கள்

தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து *

நல்லமரர் கோமான் நகர். 3                            திருப்பாற்கடல்

நகரிழைத்து நித்திலத்து நாண் மலர் கொண்டு * ஆங்கே

திகழு மணி வயிரம் சேர்த்து *- நிகரில்லாப்

பைங்கமல மேந்திப் பணிந்தேன் * பனிமலராள்

அங்கம் வலங் கொண்டானடி, 4

அடி மூன்றில் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும் *

அடி மூன்றிரந்து அவனி கொண்டாய் *- படி நின்ற

நீரோத மேனி நெடுமாலே ! * நின்னடியை

யாரோத வல்லார் அறிந்து? 5

அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு * ஆர்வம்

செறிந்த மனத்தராய்ச் செவ்வே அறிந்து *- அவன் தன்

பேரோதி யேத்தும் பெருந் தவத்தோர் காண்பரே *

காரோத வண்ணன் கழல். 6

கழலெடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று * மாற்றார்

அழலெடுத்த சிந்தையராய் அஞ்சத் *- தழலெடுத்த

போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை *

ஓராழி நெஞ்சே ! உகந்து. 7

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறங்கொள் கொங்கை *

அகங் குளிர உண்ணென் றாளாவி *- உகந்து

முலை யுண்பாய் போலே முனிந்துண்டாய் * நீயும்

அலை பண்பா லானமையால் அன்று. 8

அன்றது கண்டஞ்சாத ஆய்ச்சி உனக்கிரங்கி *

நின்று முலை தந்த இந்நீர்மைக்கு *- அன்று

வரன் முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம் *

பெருமுறையால் எய்துமோ பேர்த்து? 9

பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் * மண்ணிரந்து

காத்தனை பல்லுயிரும் காவலனே! *- ஏத்திய

நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால் *

கா அடியேன் பட்ட கடை. 10

கடை நின்று அமரர் கழல் தொழுது * நாளும்

இடை நின்ற இன்பத்த ராவர் *- புடை நின்ற

நீரோத மேனி நெடுமாலே! * நின்னடியை

யாரோத வல்லாரவர்? 11

அவரிவ ரென்றில்லை அரவணையான் பாதம் *

எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் *- பவரும்

செழுங் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோ னன்றே? *

தொழும் தகையார் நாளும் தொடர்ந்து. 12

தொடரெடுத்த மால் யானை, சூழ் கயம் புக்கு அஞ்சிப்*

படரெடுத்த பைங்கமலம் கொண்டு *– அன்று இடரடுக்க

ஆழியான் பாதம் பணிந்தன்றே ? * வானவர் கோன்

பாழிதா னெய்திற்றுப் பண்டு. 13

பண்டு இப் பெரும் பதியை யாக்கிப் * பழி பாவம்

கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே *- எண் திசையும்

பேர்த்த கரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள் !

தீர்த்தகர ராமின் திரிந்து. 14

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி * அன்று

பிரிந்தது சீதையை மான் பின் போய்ப் *- புரிந்ததுவும்

கண்பள்ளி கொள்ள அழகியதே ! நாகத்தின்

தண் பள்ளி கொள்வான் தனக்கு. 15

தனக்கடிமை பட்டது தானறியானேலும் *

மனத்தடைய வைப்பதாம் மாலை *- வனத்திடரை

ஏரியாம் வண்ணம் இயற்று மிது வல்லால் *

மாரி யார் பெய்கிற்பார் மற்று ? 16

மற்று ஆரியலாவார் ? வானவர் கோன் மாமலரோன் *

சுற்றும் வணங்கும் தொழிலானை *- ஒற்றைப்

பிறையிருந்த செஞ்சடையான் பின் சென்று * மாலைக்

குறையிரந்து தான் முடித்தான் கொண்டு. 17

கொண்டதுலகம் குறளுருவாய்க் * கோளரியாய்

ஒண்திறலோன் மார்வத்துகிர் வைத்தது *- உண்டதுவும்

தான்கடந்த ஏழுலகே தாமரைக் கண்மால் ஒரு நாள் *

வான் கடந்தான் செய்த வழக்கு. 18

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் *

வழக்கென்று நீ மதிக்க வேண்டா *- குழக்கன்று

தீவிளவின் காய்க் கெறிந்த தீமைத் திருமாலே ! *

பார் விளங்கச் செய்தாய் பழி. 19

பழி பாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை *

வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ *- வழுவின்றி

நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும் *

காரணங்கள் தாமுடையார் தாம். 20

தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே * தாமரையின்

பூவுளதே, ஏத்தும் பொழுதுண்டே *- வாமன்

திருமருவு தாள் மருவு சென்னியரே * செவ்வே

அருநரகம் சேர்வதரிது. 21

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றிப்*

பெருக முயல்வாரைப் பெற்றால் *- கரியதோர்

வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே *

தண் கோட்டு மாமலரால் தாழ்ந்து. 22

தாழ்ந்து வரங் கொண்டு தக்க வகைகளால் *

வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் *- தாழ்ந்த

விளங்கனிக்குக் கன்றெறிந்து * வேற்றுருவாய், ஞாலம்

அளந்து அடிக் கீழ்க் கொண்ட அவன். 23

அவன் கண்டாய் நன்னெஞ்சே ! ஆரருளும் கேடும் *

அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் *- அவன் கண்டாய்

காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச் *

சீற்றத் தீயாவானும் சென்று. 24

சென்றது இலங்கை மேல் செவ்வே * தன் சீற்றத்தால்

கொன்றது இராவணனைக் *- கூறுங்கால், நின்றதுவும்

வேயோங்கு தண் சாரல் வேங்கடமே * விண்ணவர் தம்

வாயோங்கு தொல் புகழான் வந்து. 25          திருவேங்கடம் திருப்பதி

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம் *

ஐந்தும் அகத்தடக்கி *- ஆர்வமாய் உந்திப்

படியமரர் வேலையான் பண்டு அமரர்க் கீந்த

படியமரர் வாழும் பதி. 26

பதி யமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை *

மதியுரிஞ்சி வான் முகடு நோக்கிக் *- கதி மிகுத்து அம்

கோல் தேடியோடும் கொழுந்ததே போன்றதே *

மால் தேடி யோடும் மனம். 27

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்

நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் *- எனைப் பலரும்

தேவாதி தேவனெனப் படுவான் * முன்னொரு நாள்

மாவாய் பிளந்த மகன். 28         திருவரங்கம்,

திருவேங்கடம் திருப்பதி,

திருப்பாற்கடல்

மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை *

அகனார வுண்பனென்றுண்டு *- மகனைத் தாய்

தேறாத வண்ணம் திருத்தினாய் * தென்னிலங்கை

நீறாக வெய்தழித்தாய் ! நீ. 29

நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே ! *

நீயன்றுலகு இடந்தா யென்பரால் *- நீயன்று

காரோதம் முன் கடைந்து பின்னடைத்தாய் மாகடலைப் *

பேரோத மேனிப் பிரான் ! 30

பிரானென்று நாளும் பெரும் புலரி யென்றும் *

குரா நற் செழும் போது கொண்டு -* வராகத்து

அணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர் *

மணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31

மகிழ்ந்தது சிந்தை திருமாலே ! *மற்றும்

மகிழ்ந்தது உன் பாதமே போற்றி *- மகிழ்ந்தது

அழலாழி சங்க மவை பாடி யாடும் *

தொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32

துணிந்தது சிந்தை துழாயலங்கல் * அங்கம்

அணிந்தவன் பேர் உள்ளத்துப் பல்கால் *- பணிந்ததுவும்

வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே *

வாய் திறங்கள் சொல்லும் வகை. 33       திருவேங்கடம் திருப்பதி

வகையால் அவனி இரந்தளந்தாய் பாதம் *

புகையால் நறுமலரால் முன்னே * – மிக வாய்ந்த

அன்பாக்கி யேத்தி அடிமைப் பட்டேன் உனக்கு *

என் பாக்கியத்தால் இனி. 34

இனிதென்பர் காமம் * அதனிலும் ஆற்ற

இனிதென்பர் தண்ணீரும் எந்தாய் !-* இனிதென்று

காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல் *

சேம நீராகும் சிறிது. 35

சிறியார் பெருமை சிறிதின் கணெய்தும் *

அறியாரும் தாமறியா ராவர் * – அறியாமை

மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று

எண் கொண்டு என்னெஞ்சே! இரு. 36

இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே *

திருந்து திசைமுகனைத் தந்தாய் ! *- பொருந்திய நின்

பாதங்களேத்திப் பணியாவேல் *பல்பிறப்பும்

ஏதங்க ளெல்லாம் எமக்கு.        37

எமக்கென்று இருநிதியம் ஏமாந்திராதே

தமக்கென்றும் சார்வமறிந்து *- நமக்கென்றும்

மாதவனே யென்னும் மனம் படைத்து * மற்றவன் பேர்

ஓதுவதே நாவினா லோத்து. 38

ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே * உத்தமன் பேர்

ஏத்தும் திறமறிமின் ஏழைகாள் ! *- ஓத்ததனை

வல்லீரேல் நன்று, அதனை மாட்டீரேல் * மாதவன் பேர்

சொல்லுவதே ஓத்தின் சுருக்கு. 39

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று * ஐயார்

நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் *- திருப் பொலிந்த

ஆகத்தான் பாதமறிந்தும் * அறியாத

போகத்தா லில்லை பொருள். 40

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது *

அருளால் அறமருளு மன்றே? *- அருளாலே

மாமறையோர்க் கீந்த மணி வண்ணன் பாதமே *

நீ மறவேல் நெஞ்சே! நினை. 41

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண *

நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் *- மனைப்பால்

பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம் *

துறந்தார் தொழுதாரத் தோள். 42

தோளிரண் டெட்டேழும் மூன்றும் முடி யனைத்தும் *

தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான் – தாளிரண்டும் *

ஆர் தொழுவார் பாதமவை தொழுவ தன்றே? * என்

சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு. 43.

சிறந்தார்க் கெழு துணையாம் செங்கண் மால் நாமம் *

மறந்தாரை மானிடமா வையேன் *- அறந் தாங்கும்

மாதவனே ! என்னும் மனம் படைத்து * மற்றவன் பேர்

ஓதுவதே நாவினால் உள்ளு. 44

உளதென் றிறுமாவார் உண்டில்லை யென்று

தளர்தல தனருகுஞ் சாரார் *- அளவரிய

வேதத்தான் வேங்கடத்தான், விண்ணோர் முடிதோயும்

பாதத்தான் பாதம் பயின்று. 45                     திருவேங்கடம் திருப்பதி

பயின்றது அரங்கம் திருக்கோட்டி * பன்னாள்

பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் *- பயின்றது

அணிதிகழும் சோலை அணி நீர்மலையே *

மணிதிகழும் வண் தடக்கை மால். 46         திருவரங்கம்,

திருமாலிருஞ்சோலை,

திருக்கோட்டியூர்,

திருநீர்மலை,

திருவேங்கடம் திருப்பதி

மாலை யரியுருவன் பாத மலரணிந்து *

காலை தொழுதெழுமின் கை கோலி *- ஞாலம்

அளந்திடந்து உண்டுமிழ்ந்த அண்ணலை மற்றல்லால் *

உளங்கிடந்த வாற்றால் உணர்ந்து. 47

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி *

மணந்தாய் மலர்மகள் தோள் மாலே ! *- மணந்தாய் போய்

வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம் சூழ்

மாயிருஞ்சோலை மலை. 48                          திருமாலிருஞ்சோலை

மலை யேழும் மாநிலங்க ளேழும் அதிரக் *

குலைசூழ் குரை கடல்க ளேழும் *- முலை சூழ்ந்த

நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று *

அஞ்சாது என்னெஞ்சே! அழை. 49

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன *

பிழைப்பில் பெரும் பெயரே பேசி *- இழைப்பரிய

ஆயவனே ! யாதவனே! என்று அவனை யார் முகப்பும் *

மாயவனே என்று மதித்து. 50

மதிக் கண்டாய் நெஞ்சே ! மணிவண்ணன் பாதம் *

மதிக் கண்டாய் மற்றவன் பேர் தன்னை *- மதிக் கண்டாய்

பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த *

நீராழி வண்ணன் நிறம். 51

நிறம் கரியன் செய்ய நெடுமலராள் மார்வன் *

அறம் பெரியன் ஆரது அறிவார்? *- மறம் புரிந்த

வாளரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து *

நீளிருக்கைக் குய்த்தான் நெறி. 52

நெறியார் குழற் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து *

அறியா திளங்கிரி யென்றெண்ணிப் *- பிறியாது

பூங்கொடிக்கள் வைகும் பொருபுனற் குன்றென்னும் *

வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு. 53                        திருவேங்கடம் திருப்பதி

வெற்பென்றிருஞ் சோலை வேங்கட மென்றிவ் விரண்டும் *

நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் *- நிற்பென்று

உளங் கோயில் உள்ளம் வைத்துள்ளினேன் * வெள்ளத்து

இளங்கோயில் கைவிடேலென்று. 54         திருமாலிருஞ்சோலை,

திருவேங்கடம் திருப்பதி

என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும் *

நின்று நினைப்பொழியா நீர்மையால் *- வென்றி

அடலாழி கொண்ட அறிவனே ! * இன்பக்

கடலாழி நீ யருளிக் காண். 55

காணக் கழி காதல் கைமிக்குக் காட்டினால் *

நாணப் படுமென்றால் நாணுமே? *- பேணிக்

கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும் *

திருமாலை நங்கள் திரு. 56

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும் *

கருமம் கடைப் பிடிமின் கண்டீர் *- உரிமையால்

ஏத்தினோம் பாதம் இருந் தடக்கை யெந்தை பேர் *

நால் திசையும் கேட்டீரே? நாம். 57

நாம் பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்துப் *

ஓம்பி யிருந்து எம்மை யோதுவித்து *- வேம்பின்

பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று *

அருள் நீர்மை தந்த அருள். 58

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்துப் *

பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது *- இருள் திரிந்து

நோக்கினேன் நோக்கி நினைந்தே னதொண்கமலம் *

ஓக்கினேன் என்னையு மங்கோர்ந்து. 59

ஓருருவ னல்லை ஒளியுருவம் நின்னுருவம் *

ஈருருவ னென்பர் இருநிலத்தோர் *- ஓருருவம்

ஆதியாம் வண்ணம் அறிந்தாரவர் கண்டீர் *

நீதியால் மண் காப்பார் நின்று. 60

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப * நீண்ட தோள்

சென்றளந்த தென்பர் திசையெல்லாம் *- அன்று

கருமாணியாய் இரந்த கள்வனே ! * உன்னைப்

பிரமாணித்தார் பெற்ற பேறு ! 61

பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதைமையால் *

மாறென்று சொல்லி வணங்கினேன் *- ஏறின்

பெருத் தெருத்தங் கோடொசியப் பெண்ணசையின் பின் போய் *

எருத்திறுத்த நல்லாய ரேறு. 62

ஏறேழும் வென்று அடர்த்த எந்தை * எரி யுருவத்து

ஏறேறி பட்ட விடுசாபம் *- பாறேறி

உண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி *

கண்ட பொருள் சொல்லின் கதை. 63

கதையின் பெரும் பொருளும் கண்ணா! * நின்பேரே

இதய மிருந்தவையே யேத்தில் *- கதையும்

திருமொழியாய் நின்ற திருமாலே! * உன்னைப்

பருமொழியால் காணப் பணி. 64

பணிந்தேன் திருமேனி * பைங்கமலம் கையால்

அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் * துணிந்தேன்

புரிந்தேத்தி உன்னைப் புகலிடம் பார்த்து * ஆங்கே

இருந்தேத்தி வாழுமிது. 65

இது கண்டாய் நன்னெஞ்சே! இப்பிறவி யாவது *

இது கண்டாய் எல்லாம் நாமுற்றது *- இது கண்டாய்

நாரணன் பேரோதி நரகத் தருகணையா *

காரணமும் வல்லையேல் காண். 66

கண்டேன் திருமேனி யான் கனவில் * ஆங்கவன் கைக்

கண்டேன் கனலும் சுடராழி *- கண்டேன் *

உறுநோய் வினை யிரண்டும் ஓட்டுவித்துப் * பின்னும்

மறு நோய் செறுவான் வலி. 67

வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள *

வலிமிக்க வாள் வரை மத்தாக *- வலிமிக்க

வாள் நாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான் *

கோள் நாகம் கொம்பொசித்த கோ. 68

கோவாகி மாநிலங் காத்து * நங்கண் முகப்பே

மாவேகிச் செல்கின்ற மன்னவரும் *- பூமேவும்

செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ்பிறப்பும் *

தண்கமல மேய்ந்தார் தமர். 69

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் *

தமருள்ளும் தண் பொருப்பு வேலை *- தமருள்ளும்

மாமல்லை கோவல் மதிள்குடந்தை யென்பரே *

ஏவல்ல எந்தைக்கு இடம். 70  திருவரங்கம்,

தஞ்சை மாமணிக் கோயில்,

திருக்குடந்தை (கும்பகோணம்),

திருத்தண்கால்,

திருக்கோவலூர்,

திருக்கடல்மல்லை

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப * எரிகான்று

அடங்கார் ஒடுங்குவித்த தாழி *- விடங்காலும்

தீவாயரவணை மேல் தோன்றல் திசை யளப்பான் *

ஆவாரடி நிமிர்த்த போது. 71

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு * ஆங்கலர்ந்த

போதரிந்து கொண்டேத்தும் * போது, உள்ளம் !- போது

மணிவேங்கடவன் மலரடிக்கே செல்ல *

அணிவேங்கடவன் பேராய்ந்து. 72               திருவேங்கடம் திருப்பதி

ஆய்ந்துரைப்பன் ஆயிரம் பேர், ஆதிநடு அந்திவாய் *

வாய்ந்த மலர் தூவி வைகலும் *- ஏய்ந்த

பிறைக் கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான் *

இறைக்கு ஆட்படத் துணிந்த யான். 73

யானே தவஞ் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும் *

யானே தவமுடையேன் எம்பெருமான் ! *- யானே

இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன் *

பெருந் தமிழன் நல்லேன் பெரிது. 74

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று *

இருகணிள மூங்கில் வாங்கி *- அருகிருந்த

தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் *

வான் கலந்த வண்ணன் வரை. 75             திருவேங்கடம் திருப்பதி

வரைச் சந்தனக் குழம்பும் வான் கலனும் பட்டும் *

விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் *- நிரைத்துக் கொண்டு*

ஆதிக் கண் நின்ற, அறிவன் அடியிணையே *

ஓதிப் பணிவதுறும். 76

உறுங்கண்டாய் நன்னெஞ்சே ! உத்தமன் நற்பாதம் *

உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னை *- உறுங்கண்டாய்

ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும் *

சார்த்தி யுரைத்தல் தவம். 77

தவஞ் செய்து நான்முகனே பெற்றான் * தரணி

நிவந்தளப்ப நீட்டிய பொற் பாதம் *- சிவந்த தன்

கையனைத்தும் ஆரக் கழுவினான் * கங்கை நீர்

பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின். 78

பின்னின்று தாயிரப்பக் கேளான் * பெரும்பணைத் தோள்

முன்னின்று தானிரப்பாள் மொய்ம் மலராள் *- சொல் நின்ற

தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவனளந்த

நீள் நிலந்தான் அத்தனைக்கும் நேர். 79

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அதொண் கமலம் *

ஆர்ந்தேன் உன் சேவடி மேலன்பாய் *- ஆர்ந்த

அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ? * முன்னைப்

படிக்கோலம் கண்ட பகல். 80

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் * கனவில்

மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே – மிகக் கண்டேன்*

ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான் *

வான் திகழும் சோதி வடிவு. 81

வடிக்கோல வாள் நெடுங்கண் மாமலராள் * செவ்விப்

படிக்கோலம் கண்டு அகலாள் பல்நாள் *- அடிக்கோலி

ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ? *

கோலத்தால் இல்லை குறை. 82

குறையாக வெஞ் சொற்கள் கூறினேன் கூறி *

மறை யாங்கென வுரைத்த மாலை *- இறையேனும்

ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும் *

மாயன் கண் சென்ற வரம். 83

வரங் கருதித் தன்னை வணங்காத வன்மை *

உரங் கருதி மூர்க்கத்தவனை *- நரங் கலந்த

சிங்கமாய்க் கீண்ட திருவனடி யிணையே *

அங்கண் மா ஞாலத்து அமுது. 84

அமுதென்றும் தேனென்றும் ஆழியானென்றும் *

அமுதன்று கொண்டு கந்தானென்றும் *- அமுதன்ன

சொல் மாலை யேத்தித் தொழுதேன் சொலப் பட்ட *

நன்மாலை யேத்தி நவின்று. 85

நவின்றுரைத்த நாவலர்கள் நாள்மலர் கொண்டு * ஆங்கே

பயின்றதனால் பெற்ற பயனென் கொல்? *- பயின்றார் தம்

மெய்த் தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை * யான்

எத்தவத்தால் காண்பன் கொல் இன்று? 86

இன்றா அறிகின்றே னல்லேன் * இரு நிலத்தைச்

சென்று ஆங்களந்த திருவடியை *- அன்று

கருக் கோட்டியுள் கிடந்து கை தொழுதேன் * கண்டேன்

திருக் கோட்டி யெந்தை திறம். 87              திருக்கோட்டியூர்

திறம்பிற்று இனி யறிந்தேன் தென்னரங்கத் தெந்தை *

திறம்பா வழி சென்றார்க் கல்லால் *- திறம்பாச்

செடி நரகை நீக்கித் தாம் செல்வதன் முன் * வானோர்

கடி நரக வாசற் கதவு. 88          திருவரங்கம்

கதவிக் கதஞ் சிறந்து கஞ்சனை முன் காய்ந்து *

அதவிப் போர் யானை யொசித்துப் *- பதவியாய்ப்

பாணியால் நீரேற்றுப் பண்டொரு கால் * மாவலியை

மாணியாய்க் கொண்டிலையே மண்? 89

மண்ணுலகம் ஆளேனே ? வானவர்க்கும் வானவனாய் *

விண்ணுலகந் தன்னகத்து மேவேனே ? *- நண்ணித்

திருமாலைச் செங்கண் நெடியானை * எங்கள்

பெருமானைக் கை தொழுத பின். 90

பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர் ! *

முன்னால் வணங்க முயன்மினோ *- பல்நூல்

அளந்தானைக் கார்க் கடல்சூழ் ஞாலத்தை * எல்லாம்

அளந்தானவன் சேவடி. 91

அடியால் முன் கஞ்சனைச் செற்று * அமரரேத்தும்

படியான் கொடி மேல் புள் கொண்டான் *- நெடியான் தன்

நாமமே ஏத்துமின்கள் * ஏத்தினால் தாம் வேண்டும்

காமமே காட்டும் கடிது. 92

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை *

கொடிதென்று அது கூடா முன்னம் *- வடிசங்கம்

கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் * கொங்கை நஞ்சு

உண்டானை ஏத்துமினோ உற்று. 93

உற்று வணங்கித் தொழுமின் * உலகேழும்

முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் *- பற்றிப்

பொருந்தாதான் மார்பிடந்து பூம்பாடகத்துள்

இருந்தானை * ஏத்தும் என் நெஞ்சு. 94   பாடகம்

என்னெஞ்சம் மேயான் என் சென்னியான் * தானவனை

வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன் *- முன்னம் சேய்

ஊழியான் ஊழி பெயர்த்தான் * உலகேத்தும்

ஆழியான் அத்தியூரான். 95      திருக்கச்சி (அத்திகிரி)

அத்தியூரான் புள்ளை யூர்வான் * அணிமணியின்

துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் *- முத்தீ

மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்

இறையாவான் * எங்கள் பிரான். 96           திருக்கச்சி (அத்திகிரி)

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ *

செங்கண் நெடுமால் திருமார்பா ! *- பொங்கு

படமூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்*

குடமூக்கில்[குக்] கோயிலாக் கொண்டு. 97                    திருக்குடந்தை (கும்பகோணம்)

கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது *

உண்டது உலகேழும் உள்ளொடுங்கக் *- கொண்டு

குடமாடிக் கோவலனாய் * மேவி என்னெஞ்சம்

இடமாகக் கொண்ட இறை. 98

இறை யெம்பெருமான் ! அருளென்று * இமையோர்

முறை நின்று மொய்ம் மலர்கள் தூவ *- அறை கழல

சேவடியான் செங்கணெடியான் * குறளுருவாய்

மாவடிவில் மண் கொண்டான் மால். 99

மாலே ! நெடியோனே ! கண்ணனே ! விண்ணவர்க்கு

மேலா ! * வியன் துழாய்க் கண்ணியனே ! *- மேலால்

விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே ! * என்தன்

அளவன்றால் யானுடைய அன்பு. 100

இரண்டாம் திருவந்தாதி முற்றும்

பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.