Moonraam Thiruvandadi

பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாந்திருவந்தாதி

தனியன்

 

(குருகை காவலப்பன் அருளிச்செய்தது)

சீராரும்மாடத்திருக்கோவலூர் அதனுள்*

காரார்கருமுகிலைக்காணப்புக்கு* – ஓராத்

திருக்கண்டேனென்றுரைத்த சீரான்கழலே*

உரைக்கண்டாய்நெஞ்சே! உகந்து.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழும்

அருக்கனணி நிறமும் கண்டேன் *- செருக் கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன் *

என்னாழி வண்ணன் பால் இன்று. 1

இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன் *

பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் *- அன்று

திருக்கண்டு கொண்ட திருமாலே ! * உன்னை

மருக்கண்டு கொண்டென் மனம். 2

மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் * மலராள்

தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் *- சினத்துச்

செருநர் உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன் *

வரு நரகம் தீர்க்கும் மருந்து. 3

மருந்தும் பொருளும் அமுதமும் தானே *

திருந்திய செங்கண் மாலாங்கே *- பொருந்தியும்

நின்றுலக முண்டுமிழ்ந்தும் * நீரேற்றும் மூவடியால்

அன்றுலகம் தாயோனடி. 4.

அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் *

படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணம் *- முடி வண்ணம்

ஓராழி வெய்யோன் ஒளியும் அஃதன்றே *

ஆராழி கொண்டாற்கு அழகு. 5

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர்வண்ணம் *

அழகன்றே அண்டங் கடத்தல் *- அழகன்றே

அங்கை நீரேற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ *

கங்கை நீர் கான்ற கழல். 6

கழல் தொழுதும் வா நெஞ்சே! கார்க்கடல் நீர் வேலை *

பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன் *- எழிலளந் தங்கு

எண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை *

நண்ணற் கரியானை நாம். 7

நாமம் பல சொல்லி நாராயணா வென்று *

நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே ! – வா * மருவி

மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையுந் தண்துழாய்க் *

கண்ணனையே காண்க நங்கண். 8

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் *

மண்ணளந்த பாதமும் மற்றவையே *- எண்ணில்

கருமாமுகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன் *

திருமாமணி வண்ணன் தேசு. 9

தேசும் திறலும் திருவும் உருவமும் *

மாசில் குடிப் பிறப்பும் மற்றவையும் *- பேசில்

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத *

நலம் புரிந்து சென்றடையும் நன்கு. 10

நன்கோதும் நால்வேதத்துள்ளான் * நறவிரியும்

பொங்கோதருவிப் புனல் வண்ணன் *- சங்கோதப்

பாற்கடலான் பாம்பணையின் மேலான் * பயின்றுரைப்பார்

நூற்கடலான் நுண்ணறிவினான். 11           திருப்பாற்கடல்

அறிவென்னும் தாள் கொளுவி * ஐம்புலனும் தம்மில்

செறிவென்னும் திண்கதவம் செம்மி *- மறையென்றும்

நன்கோதி நன்குணர்வார் காண்பரே * நாள்தோறும்

பைங்கோத வண்ணன் படி. 12

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று *

அடிவட்டத்தா லளப்ப நீண்ட – முடி வட்டம் *

ஆகாய மூடறுத்து அண்டம் போய் நீண்டதே *

மாகாயமாய் நின்ற மாற்கு. 13

மாற்பால் மனஞ் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு *

நூற்பால் மனம் வைக்க நொய்விதம் *- நாற்பால

வேதத்தான் வேங்கடத்தான் * விண்ணோர் முடிதோயும்

பாதத்தான் பாதம் பணிந்து. 14                     திருவேங்கடம் திருப்பதி

பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோதப் *

பணிந்த பண மணிகளாலே – அணிந்து * அங்கு

அனந்தனனைக் கிடக்கும் அம்மான் * அடியேன்

மனந்தனணைக் கிடக்கும் வந்து. 15

வந்துதைத்த வெண்திரைகள் செம்பவளம் வெண்முத்தம்*

அந்தி விளக்கு மணி விளக்காம் *- எந்தை

ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் *

திருவல்லிக் கேணியான் சென்று. 16        திருவல்லிக்கேணி

சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால் *

என்ற நாளெந்நாளும் நாளாகும் *- என்றும்

இறவாத எந்தை இணையடிக்கே யாளாய் *

மறவாது வாழ்த்துக என் வாய். 17

வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் * மூவடி மண்

நீயளந்து கொண்ட நெடுமாலே ! *- தாவிய நின்

எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி *

அஞ்சாதிருக்க அருள். 18

அருளா தொழியுமே? * ஆலிலை மேல் அன்று

தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் *- இருளாத

சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூய்க் கை தொழுது *

முந்தையராய் நிற்பார்க்கு முன். 19

முன்னுலகம் உண்டுமிழ்ந்தாய்க்கு * அவ்வுலகம் ஈரடியால்

பின்னளந்து கோடல் பெரிதொன்றே ? *- என்னே!

திருமாலே ! செங்கணெடியானே ! * எங்கள்

பெருமானே ! நீ இதனைப் பேசு. 20

பேசுவார் எவ்வளவு பேசுவர் * அவ்வளவே

வாசமலர்த் துழாய் மாலையான் *- தேசுடைய

சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் * பொங்கரவ

வக்கரனைக் கொன்றான் வடிவு. 21

வடிவார் முடி கோட்டி வானவர்கள் * நாளும்

கடியார் மலர் தூவிக் காணும் – படியானைச் *

செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே !

மெய்ம்மையே காண விரும்பு. 22

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார் *

சுரும்பு தொளையில் சென்றூத *- அரும்பும்

புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே *

மனம் துழாய் மாலாய் வரும். 23

வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும் *

நெருங்கு தீ நீருருவு மானான் *- பொருந்தும்

சுடராழி யொன்றுடையான் சூழ் கழலே * நாளும்

தொடர் ஆழி நெஞ்சே! தொழுது. 24

தொழுதால் பழுதுண்டே? தூநீருலகம் *

முழுதுண்டு மொய் குழலாளாய்ச்சி *- இழுதுண்ட

வாயானை மால் விடை யேழ் செற்றானை * வானவர்க்கும்

சேயானை நெஞ்சே! சிறந்து. 25

சிறந்த என் சிந்தையும் செங்கணரவும் *

நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் *- உறைந்ததுவும்

வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே *

தாம் கடவார் தண்துழாயார். 26                   திருக்கச்சி (அத்திகிரி),

வேளுக்கை,

திருவெ:கா,

திருவேங்கடம் திருப்பதி

ஆரே துயருழந்தார்? துன்புற்றா ராண்டையார் *

காரே மலிந்த கருங்கடலை *- நேரே

கடைந்தானைக் காரணனை * நீரணை மேல் பள்ளி

அடைந்தானை நாளுமடைந்து. 27

அடைந்த தரவணைமேல் * ஐவர்க்காய் அன்று

மிடைந்தது பாரத வெம்போர் *- உடைந்ததுவும்

ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே !* வாளெயிற்றுப்

பேய்ச்சி பாலுண்ட பிரான். 28

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து *

ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே *- வாய்த்த

இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய் *

தெருளா மொழியானைச் சேர்ந்து. 29

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் *

நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பும் *- வாய்ந்த

மறை பாடகம் அனந்தன் வண்துழாய்க் கண்ணி *

இறை பாடியாய இவை. 30      திருக்குடந்தை (கும்பகோணம்),

பாடகம்,

திருவேங்கடம் திருப்பதி

இவை யவன் கோயில் இரணியன தாகம் *

அவை செய்தரி யுருவமானான் *- செவி தெரியா

நாகத்தான் நால் வேதத்துள்ளான் * நறவேற்றான்

பாகத்தான் பாற்கடலுளான். 31                      திருப்பாற்கடல்

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும் *

நூற்கடலும் நுண்ணுால தாமரை மேல் *- பாற்பட்

டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் *

குருந்தொசித்த கோபாலகன். 32                   திருவேங்கடம் திருப்பதி,

திருப்பாற்கடல்

பாலகனாய் ஆலிலை மேல் * பைய உலகெல்லாம்

மேலொரு நாள் உண்டவனே ! மெய்ம்மையே *- மாலவனே !

மந்தரத்தால் மாநீர்க் கடல் கடைந்து * வானமுதம்

அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று. 33

அன்றிவ் வுலகம் அளந்த அசைவே கொல்? *

நின்றிருந்து வேளுக்கை * நீள்நகர்வாய் – அன்று

கிடந்தானைக் கேடில் சீரானை * முன் கஞ்சைக்

கடந்தானை நெஞ்சமே! காண். 34               வேளுக்கை

காண் காணென விரும்பும் கண்கள் * கதிரிலகு

பூண்தாரகலத்தான் பொன்மேனி *- பாண்கண்

தொழில் பாடி வண்டறையும் தொங்கலான் * செம்பொன்

கழல் பாடி யாம் தொழுதும் கை. 35

கைய கனலாழி கார்க்கடல் வாய் வெண்சங்கம் *

வெய்ய கதை சார்ங்கம் வெஞ்சுடர்வாள் *- செய்ய

படை பரவை பாழி பனி நீருலகம் *

அடியளந்த மாயனவற்கு. 36

அவற்கு அடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான் *

உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் *- துவர்க்கும்

பவளவாய்ப் பூமகளும் பன்மணிப் பூணாரம் *

திகழும் திருமார்பன் தான். 37

தானே தனக்கு உவமன் தன்னுருவே எவ்வுருவும் *

தானே தவவுருவும் தாரகையும் – தானே *

எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் * அண்டத்து

இருசுடருமாய இறை. 38

இறையாய் நிலனாகி எண்திசையும் தானாய் *

மறையாய் மறைப் பொருளாய் வானாய்ப் *- பிறை வாய்ந்த

வெள்ளத் தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான் *

உள்ளத்தினுள்ளே உளன். 39    திருவேங்கடம் திருப்பதி

உளன் கண்டாய் நல்நெஞ்சே! உத்தமனென்றும்

உளன் கண்டாய் * உள்ளுவா ருள்ளத்து – உளன் கண்டாய் *

விண்ணொடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான் *

மண்ணொடுங்கத் தானளந்த மன். 40       திருவேங்கடம் திருப்பதி

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்திசையும் *

துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே *- மின்னை

உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் * குன்றம்

குடையாக ஆ காத்த கோ. 41

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி *

மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன் *- மேவி

அரியுருவமாகி இரணியன தாகம் *

தெரியுகிரால் கீண்டான் சினம். 42

சினமா மத களிற்றின் திண்மருப்பைச் சாய்த்துப் *

புனமேய பூமியதனைத் -* தனமாகப்

பேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார் *

ஓரகலத்துள்ளது உலகு. 43

உலகமும் ஊழியும் ஆழியும் * ஒண்கேழ்

அலர் கதிரும் செந்தீயு மாவான் *- பலகதிர்கள்

பாரித்த பைம்பொன் முடியானடி யிணைக்கே *

பூரித்து என் நெஞ்சே! புரி. 44

புரிந்து மத வேழம் மாப் பிடியோடு ஊடித் *

திரிந்து சினத்தால் பொருது *- விரிந்த சீர்

வெண் கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே * மேலொரு நாள்

மண் கோட்டுக் கொண்டான் மலை. 45  திருவேங்கடம் திருப்பதி

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித் *

தலை முகடு தானொரு கை பற்றி *- அலை முகட்டு

அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான் *

பிண்டமாய் நின்ற பிரான். 46

நின்ற பெருமானே! நீரேற்று * உலகெல்லாம்

சென்ற பெருமானே! செங்கண்ணா! *- அன்று

துரக வாய் கீண்ட துழாய் முடியாய்! * நங்கள்

நரக வாய் கீண்டாயும் நீ. 47

நீயன்றே நீரேற்று உலகம் அடியளந்தாய்? *

நீயன்றே நின்று நிரை மேய்த்தாய்? *- நீயன்றே

மாவாயுரம் பிளந்து மாமருதினூடு போய்த் *

தேவாசுரம் பொருதாய் செற்று? 48

செற்றதுவும், சேரா இரணியனைச் * சென்றேற்றுப்

பெற்றதுவும் மாநிலம் * பின்னைக்காய் – முற்றல்

முரியேற்றின் முன்னின்று மொய்ம்பொழித்தாய் ! * மூரிச்

சுரியேறு சங்கினாய்! சூழ்ந்து. 49

சூழ்ந்த துழா யலங்கல் சோதி மணி முடி மால் *

தாழ்ந்த அருவித் தடவரைவாய் *- ஆழ்ந்த

மணிநீர்ச் சுனை வளர்ந்த மாமுதலை கொன்றான் *

அணிநீல வண்ணத்தவன். 50

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்*

அவனே அணிமருதம் சாய்த்தான் *- அவனே

கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர் *

இலங்காபுர மெரித்தா னெய்து. 51

எய்தான் மராமர மேழும் இராமனாய் *

எய்தானம்மான் மறிய ஏந்திழைக்காய் *- எய்ததுவும்

தென்னிலங்கைக் கோன்வீழச் * சென்று குறளுருவாய்

முன்னிலம் கைக்கொண்டான் முயன்று. 52

முயன்று தொழு நெஞ்சே ! மூரிநீர் வேலை *

இயன்ற மரத்தாலிலையின் மேலால் *- பயின்றங்கோர்

மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த் *

தண்ணலங்கல் மாலையான் தாள். 53

தாளால் சகடம் உதைத்துப் பகடுந்திக் *

கீளா மருதிடை போய்க் * கேழலாய் – மீளாது

மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப் *

பெண்ணகலம் காதல் பெரிது. 54

பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு *

கரிய முகிலிடை மின் போலத் *- தெரியுங்கால்

பாணொடுங்க வண்டறையும் பங்கயமே * மற்றவன் தன்

நீள் நெடுங்கண் காட்டும் நிறம். 55

நிறம் வெளிது செய்து பசிது கரிதென்று *

இறையுருவம் யாமறியோம் எண்ணில் *- நிறைவுடைய

நாமங்கை தானும் நலம் புகழ வல்லளே ? *

பூமங்கை கேள்வன் பொலிவு. 56

பொலிந்திருண்ட கார்வானில் மின்னே போல் தோன்றி *

மலிந்து திருவிருந்த மார்வன் *- பொலிந்த

கருடன் மேல் கொண்ட கரியான் கழலே *

தெருடன் மேல் கண்டாய் தெளி. 57

தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி *

அளிந்த கடுவனையே நோக்கி *- விளங்கிய

வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே * மேலொருநாள்

மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. 58                 திருவேங்கடம் திருப்பதி

வாழும் வகை யறிந்தேன் மைபோல் நெடுவரை வாய் *

தாழு மருவி போல் தார் கிடப்ப *- சூழும்

திருமாமணி வண்ணன் செங்கண்மால் * எங்கள்

பெருமானடி சேரப் பெற்று. 59

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச்சகடம் *

முற்றக் காத்தூடு போயுண்டுதைத்துத் *- கற்றுக்

குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான் * வெற்றிப்

பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு. 60

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் *

கொண்டங் குறைவார்க்குக் கோயில் போல் *- வண்டு

வளங்கிளரும் நீள்சோலை வண்பூங்கடிகை *

இளங்குமரன் தன் விண்ணகர். 61               திருவிண்ணகர்,

திருமாலிருஞ்சோலை,

திருக்கடிகை (சோளசிங்கபுரம்),

திருவேங்கடம் திருப்பதி,

திருப்பாற்கடல்,

பரமபதம்

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *

மண்ணகரம் மாமாட வேளுக்கை *- மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62        திருவரங்கம்,

திருக்குடந்தை (கும்பகோணம்),

திருவிண்ணகர்,

திருக்கோட்டியூர்,

வேளுக்கை,

திருவெ:கா,

திருவேங்கடம் திருப்பதி

தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் *

சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் *- சூழும்

திரண்டருவி பாயும் திருமலை மேலெந்தைக்கு *

இரண்டுருவு மொன்றா யிசைந்து. 63       திருவேங்கடம் திருப்பதி

இசைந்த அரவமும் வெற்பும் கடலும் *

பசைந்தங் கமுது படுப்ப *- அசைந்து

கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் *

கிடந்திருந்து நின்றதுவும் அங்கு. 64          திருவெ:கா

அங்கற்கிடரின்றி அந்திப் பொழுதத்து *

மங்க இரணியன தாகத்தைப் *- பொங்கி

அரி யுருவமாய்ப் பிளந்த அம்மானவனே *

கரி யுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. 65

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மாமணிகள் *

ஏய்ந்த பணக்கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப *- வாய்ந்த

மது கைடவரும் வயிறுருகி மாண்டார் *

அது கேடவர்க் கிறுதி யாங்கு. 66

ஆங்கு மலரும் குவியுமாலுந்தி வாய் *

ஓங்கு கமலத்தினொண்போது *- ஆங்கைத்

திகிரி சுடரென்றும் வெண் சங்கம் * வானில்

பகருமதி யென்றும் பார்த்து. 67

பார்த்த கடுவன் சுனைநீர் நிழல் கண்டு *

பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து *- கார்த்த

களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே * மேல்நாள்

விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு. 68                 திருவேங்கடம் திருப்பதி

வெற்பென்று வேங்கடம் பாடும் * வியன் துழாய்க்

கற்பென்று சூடும் கருங்குழல் மேல் *- மற்பொன்ற

நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் *

பூண்ட நாளெல்லாம் புகும். 69                       திருவேங்கடம் திருப்பதி

புகு மதத்தால் வாய்பூசிக் கீழ் தாழ்ந்து * அருவி

உகு மதத்தால் கால் கழுவிக் கையால் *- மிகு மதத் தேன்

விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே *

கண்டு வணங்கும் களிறு. 70          திருவேங்கடம் திருப்பதி

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி *

ஒளிறு மருப்பொசிகை யாளி – பிளிறி

விழக் கொன்று * நின்றதிரும் வேங்கடமே * மேனாள்

குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. 71                    திருவேங்கடம் திருப்பதி

குன்றொன்றினாய குறமகளிர் கோல் வளைக்கை *

சென்று விளையாடும் தீங்கழை போய் *- வென்று

விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே * மேலை

இளங்குமரர் கோமான் இடம். 72                 திருவேங்கடம் திருப்பதி

இடம் வலமேழ் பூண்ட இரவித் தேரோட்டி *

வடமுக வேங்கடத்து மன்னும் *- குடம் நயந்த

கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே *

நாத்தன்னால் உள்ள நலம். 73                      திருவேங்கடம் திருப்பதி

நலமே வலிது கொல் நஞ்சூட்டு வன் பேய் *

நிலமே புரண்டு போய் வீழச் *- சலமே தான்

வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி ஊட்டுவான் *

தன்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து. 74

சார்ந்தகடு தேய்ப்பத் தடாவிய கோட்டுச்சி வாய் *

ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலைச் *- சேர்ந்து

சின வேங்கை பார்க்கும் திருமலையே * ஆயன்

புன வேங்கை நாறும் பொருப்பு. 75           திருவேங்கடம் திருப்பதி

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் * ஐந்து

நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா *- விருப்புடைய

வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூய்க் கைதொழுதால் *

அஃகாவே தீவினைக ளாய்ந்து. 76               திருவெ:கா

ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில் *

வாய்ந்த குழவியாய் * வாளரக்கன் – ஏய்ந்த

முடிப்போது மூன்றேழென் றெண்ணினான் * ஆர்ந்த

அடிப்போது நங்கட் கரண். 77

அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன் *

முரனாள் வலம் சுழிந்த மொய்ம்பன் – சரணாமேல் *

ஏது கதி யேது நிலை யேது பிறப்பென்னாதே *

ஓது கதி மாயனையே யோர்த்து. 78

ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து

பேர்த்தால் * பிறப்பேழும் பேர்க்கலாம் *- கார்த்த

விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி *

நிரையார மார்வனையே நின்று. 79

நின்றெதிராய நிரை மணித்தேர் வாணன் * தோள்

ஒன்றிய வீரைஞ்ஞூறுடன் துணிய *- வென்றிலங்கும்

ஆர்படு வான் நேமி அரவணையான் சேவடிக்கே *

நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு. 80

நெஞ்சால் நினைப் பரியனேலும் * நிலை பெற்றென்

நெஞ்சமே ! பேசாய் * நினைக்குங்கால் – நெஞ்சத்துப்

பேராது நிற்கும் பெருமானை யென் கொலோ ?

ஓராது நிற்பது உணர்வு. 81

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து *

புணரிலும் காண்பரியன் உண்மை *- இணரணையக்

கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை *

எங்கணைந்து காண்டு மினி. 82

இனி அவன் மாயனென வுரைப்பரேலும் *

இனி அவன் காண்பரியனேலும் *- இனி அவன்

கள்ளத்தால் மண்கொண்டு விண் கடந்த பைங்கழலான் *

உள்ளத்தி னுள்ளே யுளன். 83

உளனாய நான்மறையி னுட்பொருளை * உள்ளத்

துளனாகத் தேர்ந்துணர்வரேலும் *- உளனாய

வண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே *

கண்டாருகப்பர் கவி. 84

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல்போய்ச் *

செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார் *- புவியினார்

போற்றி யுரைக்கப் பொலியுமே ? * பின்னைக்காய்

ஏற்றுயிரை யட்டானெழில். 85

எழில் கொண்டு மின்னுக் கொடி யெடுத்து * வேகத்

தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் *- எழில் கொண்ட

நீர்மேக மன்ன நெடுமால் நிறம் போலக் *

கார்வானம் காட்டும் கலந்து. 86

கலந்து மணியிமைக்கும் கண்ணா! * நின்மேனி

மலர்ந்து மரதகமே காட்டும் *- நலந்திகழும்

கொந்தின் வாய் வண்டறையும் தண்துழாய்க் கோமானை *

அந்தி வான் காட்டுமது. 87

அது நன்று இது தீதென்று ஐயப்படாதே *

மதுநின்ற தண்துழாய் மார்வன் *- பொதுநின்ற

பொன்னங் கழலே தொழுமின் * முழுவினைகள்

முன்னம் கழலும் முடிந்து. 88

முடிந்த பொழுதில் குறவாணர் * ஏனம்

படிந்துழுசால் பைந்தினைகள் வித்த *- தடிந்தெழுந்த

வேய்ங்கழை போய் விண்திறக்கும் வேங்கடமே * மேலொரு நாள்

தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு. 89      திருவேங்கடம் திருப்பதி

சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப * விண்ணாறு

அலம்பிய சேவடி போய் * அண்டம் – புலம்பிய தோள்

எண்திசையும் சூழ இடம் போதாது என் கொலோ?*

வண்துழாய் மாலளந்த மண். 90

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய் *

வெண்ணெய் விழுங்க * வெகுண்டு ஆய்ச்சி – கண்ணிக்

கயிற்றினால் கட்டத் தான் கட்டுண் டிருந்தான் *

வயிற்றினோ டாற்றா மகன். 91

மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன் *

மகனாம் அவன் மகன்தன் காதல் – மகனைச் *

சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே *

நிறை செய்து என் நெஞ்சே! நினை. 92

நினைத்து உலகில் ஆர் தெளிவார் ? நீண்ட திருமால் *

அனைத்துலகு முள்ளொடுக்கி ஆல்மேல் *- கனைத்துலவு

வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை *

உள்ளத்தே வை நெஞ்சே! உய்த்து. 93

உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி *

வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் *- மெத்தெனவே

நின்றான் இருந்தான் கிடந்தான் * என்னெஞ்சத்துப்

பொன்றாமை மாயன் புகுந்து. 94

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் *

இகழ்ந்த இரணியன தாகம் – சுகிர்ந்தெங்கும்

சிந்தப் பிளந்த * திருமால் திருவடியே*

வந்தித்து என் நெஞ்சமே! வாழ்த்து. 95

வாழ்த்திய வாயராய் வானோர் * மணிமகுடம்

தாழ்த்தி வணங்கத் தழும்பாமே *- கேழ்த்த

அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன் *

அடித்தாமரை யாமலர். 96

அலரெடுத்த உந்தியான் * ஆங்கெழிலாய

மலரெடுத்த மாமேனி மாயன் *- அலரெடுத்த

வண்ணத்தான் மாமலரான் வார் சடையான் என்றிவர்கட்கு *

எண்ணத்தா னாமோ? இமை. 97

இமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும் *

அமஞ் சூழ்ந்தற விளங்கித் தோன்றும் *- நமன் சூழ்

நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் *

துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு. 98

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான் *

அட்டபுயகரத்தான் * அஞ்ஞான்று – குட்டத்துக்

கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான் *

தாள் முதலே நங்கட்குச் சார்வு. 99            அட்டபுயகரம்

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் * தண்துழாய்த்

தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் *- காரார்ந்த

வானமரு மின்னிமைக்கும் வண்தாமரை நெடுங்கண் *

தேனமரும் பூமேல் திரு. 100

மூன்றாந்திருவந்தாதி முற்றும்

பேயாழ்வார் திருவடிகளே சரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.