[highlight_content]

Thirumozhi 9-1

பெரிய திருமொழி

ஒன்பதாம் பத்து

முதல் திருமொழி

வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளரவினணை மேவிச் *

சங்கமார் அங்கைத் தடமலருந்திச் சாமமா மேனி என் தலைவன் *

அங்கமாறு ஐந்து வேள்வி நால் வேதம்

அருங்கலை பயின்று * எரி மூன்றும்

செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்

திருக்கண்ணங்குடியுள் நின்றானே.               9.1.1      திருக்கண்ணங்குடி

கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக்

கராம் கொளக் கலங்கி * உள் நினைந்து

துவளமேல் வந்து தோன்றி வன்முதலை

துணிபடச் சுடுபடை துரந்தோன் *

குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்

கொய்ம்மலர் நெய்தலொண் கழனி *

திவளும் மாளிகை சூழ் செழுமணிப் புரிசைத்

திருக்கண்ணங்குடியுள் நின்றானே.               9.1.2      திருக்கண்ணங்குடி

வாதை வந்தடர வானமும் நிலனும்

மலைகளும் அலைகடல் குளிப்ப *

மீதுகொண் டுகளும் மீனுருவாகி

விரிபுனல் வரியகட் டொளித்தோன் *

போதலர் புன்னை மல்லிகை மெளவல்

புதுவிரை மதுமல ரணைந்து *

சீதவொண் தென்றல் திசை தொறும் கமழும்

திருக்கண்ணங்குடியுள் நின்றானே.             9.1.3      திருக்கண்ணங்குடி

வென்றி சேர் திண்மை விலங்கல் மாமேனி

வெள்ளெயிற் றொள்ளெரித் தறுகண் *

பன்றியாய் அன்று பார்மகள் பயலை

தீர்த்தவன், பஞ்சவர் பாகன் *

ஒன்றலா உருவத்து உலப்பில் பல் காலத்து

உயர்கொடி ஒளிவளர் மதியம் *

சென்று சேர் சென்னிச் சிகர நன்மாடத்

திருக்கண்ணங்குடியுள் நின்றானே.               9.1.4      திருக்கண்ணங்குடி

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய்

மூவடி நீரொடும் கொண்டு *

பின்னும் ஏழுலகும் ஈரடியாகப்

பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன் *

அன்னமென் கமலத்தணி மலர்ப் பீடத்து

அலை புனலிலைக் குடை நீழல் *

செந்நெலொண் கவரி யசைய வீற்றிருக்கும்

திருக்கண்ணங்குடியுள் நின்றானே.               9.1.5      திருக்கண்ணங்குடி

மழுவினால் அவனி யரசை மூவெழுகால்

மணிமுடி பொடி படுத்து * உதிரக்

குழுவுவார் புனலுள் குளித்து,

வெங்கோபம் தவிர்ந்தவன் * குலைமலி கதலிக்

குழுவும் வார் கமுகும் குரவும் நற்பலவும்

குளிர்தரு சூதமாதவியும் *

செழுமையார் பொழில்கள் தழுவும் நன்மாடத்

திருக்கண்ணங்குடியுள் நின்றானே.               9.1.6      திருக்கண்ணங்குடி

வானுளாரவரை வலிமையால் நலியும்

மறிகடல் இலங்கையார் கோனைப் *

பானு நேர் சரத்தால் பனங்கனி போலப்

பருமுடி யுதிர வில் வளைத்தோன் *

கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக்

கணமுகில் முரசம் நின்றதிரத் *

தேனுலா வரிவண்டு இன்னிசை முரலும்

திருக்கண்ணங்குடியுள் நின்றானே.               9.1.7      திருக்கண்ணங்குடி

அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை

அஞ்சிடாதே யிட * அதற்குப்

பெரிய மாமேனி அண்ட மூடுருவப்

பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன் *

வரையின் மாமணியும் மரதகத் திரளும்

வயிரமும் வெதிருதிர் முத்தும் *

திரைகொணர்ந்துந்தி வயல் தொறும் குவிக்கும்

திருக்கண்ணங்குடியுள் நின்றானே.               9.1.8      திருக்கண்ணங்குடி

பன்னிய பாரம் பார்மகட்கு ஒழியப்

பாரதமா பெரும் போரில் *

மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்

மைத்துனற்கு உய்த்த மாமாயன் *

துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்

சூழ்ந்தெழு செண்பக மலர் வாய் *

தென்ன வென்று அளிகள் முரன்றிசை பாடும்

திருக்கண்ணங்குடியுள் நின்றானே.               9.1.9      திருக்கண்ணங்குடி

கலையுலா வல்குல் காரிகை திறத்துக்

கடற்பெரும் படையொடும் சென்று *

சிலையினால் இலங்கை தீயெழச் செற்ற

திருக்கண்ணங்குடியுள் நின்றானை *

மலைகுலா மாட மங்கையர் தலைவன்

மானவேல் கலியன் வாயொலிகள் *

உலவுசொல் மாலை ஒன்பதோ டொன்றும்

வல்லவர்க்கு இல்லை நல்குரவே.       9.1.10    திருக்கண்ணங்குடி

error: Content is protected !!