Thirumozhi 9-8

பெரிய திருமொழி

ஒன்பதாம் பத்து

எட்டாம் திருமொழி

முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார்

கலவியை, விடு தடுமாறல் *

அந்தர மேழும் அலை கடலேழும்

ஆய, எம்மடிகள் தம் கோயில் *

சந்தொடு மணியும் அணிமயில் தழையும்

தழுவி வந்து அருவிகள் நிரந்து *

வந்திழி சாரல் மாலிருஞ்சோலை

வணங்குதும் வா மடநெஞ்சே !        9.8.1      திருமாலிருஞ்சோலை

இண்டையும் புனலும் கொண்டிடையின்றி

எழுமினோ தொழுது மென்று * இமையோர்

அண்டரும் பரவ அரவணைத் துயின்ற

சுடர்முடிக் கடவுள் தம்கோயில் *

விண்டலர் தூளி வேய் வளர் புறவில்

விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் *

வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை

வணங்குதும் வா மடநெஞ்சே !        9.8.2      திருமாலிருஞ்சோலை

பிணிவளர் ஆக்கை நீங்க நின்றேத்தப்

பெருநில மருளில் முன்னருளி *

அணிவளர் குறளாய் அகலிட முழுதும்

அளந்த எம் அடிகள் தம் கோயில் *

கணிவளர் வேங்கை நெடு நிலமதனில்

குறவர் தம் கவணிடைத் துரந்த *

மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை

வணங்குதும் வா மடநெஞ்சே !        9.8.3      திருமாலிருஞ்சோலை

சூர்மையிலாய பேய்முலை சுவைத்துச்

சுடு சரமடு சிலைத் துரந்து *

நீர்மையிலாத தாடகை மாள

நினைந்தவர் மனம் கொண்ட கோயில் *

கார்மலி வேங்கை கோங்கலர் புறவில்

கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் *

வார்புனல் சூழ்தண் மாலிருஞ்சோலை

வணங்குதும் வா மடநெஞ்சே !        9.8.4      திருமாலிருஞ்சோலை

வணங்கலி லரக்கன் செருக் களத்தவிய

மணிமுடி ஒருபதும் புரள *

அணங் கெழுந்தவன் தன் கவந்தம் நின்றாட

அமர் செய்த அடிகள் தம் கோயில் *

பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப்

பிரசம் வந்திழிதரப் * பெருந்தேன்

மணங்கமழ் சாரல் மாலிருஞ்சோலை

வணங்குதும் வா மடநெஞ்சே !        9.8.5      திருமாலிருஞ்சோலை

விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று

விளங்கனிக்கு இளங்கன்று விசிறிக் *

குடங் கலந்தாடிக் குரவை முன் கோத்த

கூத்த எம் அடிகள் தம் கோயில் *

தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத்

தடவரைக் களிறென்று முனிந்து *

மடங்கல் நின்றதிரும் மாலிருஞ்சோலை

வணங்குதும் வா மடநெஞ்சே !        9.8.6      திருமாலிருஞ்சோலை

தேனுகனாவி போயுக அங்கு ஓர்

செழுந்திரள் பனங்கனி யுதிரத் *

தானுகந் தெறிந்த தடங்கடல் வண்ணர்

எண்ணி முன் இடங் கொண்ட கோயில் *

வானகச் சோலை மரதகச் சாயல்

மாமணிக் கல்லதர் நிறைந்து

மானுகர் சாரல் மாலிருஞ்சோலை

வணங்குதும் வா மடநெஞ்சே !        9.8.7      திருமாலிருஞ்சோலை

புதமிகு விசும்பில் புணரி சென்றணவப்

பொருகடல் அரவணைத் துயின்று *

பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த

பனிமுகில் வண்ணர் தம்கோயில் *

கதமிகு சினத்த கடதடக் களிற்றின்

கவுள்வழிக் களிவண்டு பருக *

மதமிகு சாரல் மாலிருஞ்சோலை

வணங்குதும் வா மடநெஞ்சே !        9.8.8      திருமாலிருஞ்சோலை

புந்தியில் சமணர் புத்தரென்றிவர்கள்

ஒத்தன பேசவும் உகந்திட்டு *

எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்

எண்ணி முன் இடங்கொண்ட கோயில் *

சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்

தாழ்வரை மகளிர்கள் * நாளும்

மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ்சோலை

வணங்குதும் வா மடநெஞ்சே !        9.8.9      திருமாலிருஞ்சோலை

வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை

மாமணி வண்ணரை வணங்கும் *

தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல்

சூழ்வயலாலி நன்னாடன் *

கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்

கலியன் வாயொலி செய்த பனுவல்

கொண்டு * இவை பாடும் தவமுடையார்கள்

ஆள்வர் இக்குரை கடலுலகே.     9.8.10    திருமாலிருஞ்சோலை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.