Nachiar Thirumozhi

ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த

நாச்சியார் திருமொழி

தனியன்

(திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச்செய்தது)

கோலச்சுரிசங்கைமாயன் செவ்வாயின் குணம் வினவம்

 சிலத்தனள்* தென்திருமல்லிநாடி* செழுங்குழல்மேல் மாலைத்தொடை தென்னரங்கருக்கியும்மதிப்புடைய

 சோலைக்கிளி* அவள்தூயநற்பாதம்துணைநமக்கே.

அல்லிநாள் தாமரைமேலாரணங்கினின்துணைவி*

மல்லிநாடாண்டமடமயில் – மெல்லியலாள்

ஆயர்குலவேந்தனாகத்தாள்* தென்புதுவை

வேயர்பயந்த விளக்கு

முதல் திருமொழி

தையொரு திங்களும் தரை விளக்கித்

தண் மண்டலமிட்டு மாசி முன்னாள் *

ஐய நுண் மணற் கொண்டு தெருவணிந்து

அழகினுக் கலங்கரித்து அனங்கதேவா ! *

உய்யவுமாங் கொலோ என்று சொல்லி

உன்னையும் உம்பியையும் தொழுதேன் *

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை

வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே. 1     1.1       திருவேங்கடம் திருப்பதி

வெள்ளை நுண்மணற் கொண்டு தெருவணிந்து

வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து *

முள்ளுமில்லாச் சுள்ளியெரி மடுத்து

முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா ! *

கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு

கடல்வண்ணனென்பதோர் பேரெழுதிப் *

புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர்

இலக்கினில் புக என்னை எய்க்கிற்றியே. 2    1.2

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு

முப்போதும் உன்னடி வணங்கித் *

தத்துவமிலி யென்று நெஞ்செரிந்து

வாசகத் தழித்து உன்னை வைதிடாமே *

கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு

கோவிந்தனென்பதோர் பேரெழுதி *

வித்தகன் வேங்கடவாணனென்னும்

விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே. 3 1.3       திருவேங்கடம் திருப்பதி

சுவரில் புராண ! நின் பேரெழுதிச்

சுறவ நற்கொடிக்களும் துரங்கங்களும் *

கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்

காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா ! *

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்

ஆதரித்தெழுந்த என் தடமுலைகள் *

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே. 4    1.4

வானிடை வாழும் அவ்வானவர்க்கு

மறையவர் வேள்வியில் வகுத்த அவி *

கானிடைத் திரிவதோர் நரி புகுந்து

கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப *

ஊனிடையாழி சங்கு உத்தமர்க்கென்று

உன்னித்தெழுந்த என் தடமுலைகள் *

மானிடவர்க்கென்று பேச்சுப் படில்

வாழகில்லேன் கண்டாய் மன்மதனே ! 5         1.5

உருவுடையார் இளையார்கள் நல்லார்

ஓத்து வல்லார்களைக் கொண்டு * வைகல்

தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள்

திருந்தவே நோற்கின்றேன் காமதேவா ! *

கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்

கருவிளை போல் வண்ணன் * கமலவண்ணத்

திருவுடை முகத்தினில் திருக்கண்களால்

திருந்தவே நோக்கெனக் கருள் கண்டாய். 6   1.6

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்

கட்டி யரிசி அவலமைத்து *

வாயுடை மறையவர் மந்திரத்தால் *

மன்மதனே! உன்னை வணங்குகின்றேன் *

தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன்

திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் *

சாயுடை வயிறும் என் தடமுலையும் *

தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே. 7        1.7

மாசுடை யுடம்பொடு தலையுலறி

வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு *

தேசுடைத் திறலுடைக் காமதேவா !

நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய் *

பேசுவதொன்றுண்டு இங்கு எம்பெருமான் !

பெண்மையைத் தலையுடைத்தாக்கும் வண்ணம் *

கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும்

இப்பேறு எனக்கு அருள் கண்டாய். 8     1.8

தொழுது முப்போதும் உன்னடி வணங்கித்

தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன் *

பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே

பணிசெய்து வாழப் பெறாவிடில் நான் *

அழுதழுத லமர்ந்தம்மா வழங்க

ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் *

உழுவதோ ரெருத்தினை நுகங்கொடு பாய்ந்து

ஊட்டமின்றித் துரந்தாலொக்குமே. 9      1.9       திருப்பாற்கடல்

கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக்

கழலிணை பணிந்து * அங்கோர் கரி அலற

மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த

மணி வண்ணற்கு என்னை வகுத்திடென்று *

பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும்

புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை *

விருப்புடை இன்தமிழ் மாலை வல்லார்

விண்ணவர் கோன் அடி நண்ணுவரே. 10         1.10

இரண்டாம் திருமொழி

நாமமாயிரம் ஏத்த நின்ற நாராயணா ! நரனே ! * உன்னை

மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே *

காமன் போதரு காலமென்று பங்குனி நாள் கடைபாரித்தோம் *

தீமை செய்யும் சிரீதரா ! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. 1       2.1

இன்று முற்றும் முதுகு நோவ இருந்திழைத்த இச்சிற்றிலை *

நன்றும் கண்ணுற நோக்கி நாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்*

அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் ! *

என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்க மெழாதது எம் பாவமே. 2          2.2

குண்டுநீருறை கோளரீ! மதயானை கோள்விடுத்தாய் !*உன்னைக்

கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களாலிட்டு வாதியேல் *

வண்டல்நுண்மணல் தெள்ளியாம் வளைக்கைகளால் சிரமப்பட்டோம் *

தெண் திரைக் கடற்பள்ளியாய் ! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. 3   2.3            திருப்பாற்கடல்

பெய்யுமா முகில் போல் வண்ணா !

உன்தன்பேச்சும் செய்கையும் * எங்களை

மையலேற்றி மயக்க உன் முகம் மாயமந்திரம்தான்கொலோ ? *

நொய்யர் பிள்ளைகளென்பதற்கு உன்னை

நோவ நாங்கள் உரைக்கிலோம் *

செய்யதாமரைக் கண்ணினாய் !

எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. 4  2.4

வெள்ளை நுண் மணற்கொண்டு

சிற்றில் விசித்திரப்பட * வீதிவாய்த்

தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்

அழித்தியாகிலும் * உன்தன்மேல்

உள்ளமோடி உருகலல்லால்

உரோடமொன்றுமிலோம் கண்டாய் *

கள்ள மாதவா ! கேசவா !

உன் முகத்தன கண்களல்லவே. 5           2.5

முற்றிலாத பிள்ளைகளோம்

முலை போந்திலாதோமை * நாடொறும்

சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு

திண்ணென நாம் அது

கற்றிலோம் * கடலை அடைத்து

அரக்கர் குலங்களை முற்றவும்

செற்று * இலங்கையைப் பூசலாக்கிய சேவகா !

எம்மை வாதியேல். 6  2.6

பேதம் நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன்சுவை*

யாதுமொன்றறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் ? *

ஓதமா கடல் வண்ணா ! உன் மணவாட்டிமாரொடு சூழறும் *

சேதுபந்தம் திருத்தினாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. 7      2.7

வட்டவாய்ச் சிறுதூதையோடு சிறுசுளகும் மணலும் கொண்டு *

இட்டமா விளையாடுவோங்களைச் சிற்றில்ஈடழித்தென் பயன்?*

தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச்சக்கரம் கையிலேந்தினாய் !*

கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்வண்ணனே ! 8      2.8

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப்

புன் முறுவல் செய்து*

சிற்றிலோடு எங்கள் சிந்தையும்

சிதைக்கக்கடவையோ ? கோவிந்தா ! *

முற்ற மண்ணிடம் தாவி

விண்ணுற நீண்டளந்து கொண்டாய் ! * எம்மைப்

பற்றி மெய்ப்பிணக்கிட்டக்கால்

இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் ? 9   2.9

சீதை வாயமுதமுண்டாய் !

எங்கள் சிற்றில் நீ சிதையேலென்று *

வீதி வாய் விளையாடும்

ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை *

வேதவாய்த் தொழிலார்கள் வாழ்

வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன் *

கோதை வாய்த் தமிழ் வல்லவர்

குறைவின்றி வைகுந்தம் சேருவரே. 10            2.10

மூன்றாம் திருமொழி

கோழிஅழைப்பதன் முன்னம் குடைந்துநீராடுவான் போந்தோம்*

ஆழியஞ் செல்வன் எழுந்தான் அரவணைமேல் பள்ளி கொண்டாய் !*

ஏழைமையாற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் *

தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே. 1          3.1

இதுஎன்புகுந்ததுஇங்குஅந்தோ! இப்பொய்கைக்குஎவ்வாறுவந்தாய்?*

மதுஇன் துழாய் முடி மாலே ! மாயனே ! எங்கள் அமுதே ! *

விதியின்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் ! விரையேல் *

குதிகொண்டு அரவில் நடித்தாய் ! குருந்திடைக் கூறை பணியாய். 2          3.2

எல்லே ! ஈதுஎன்ன இளமை? எம்அனைமார் காணிலொட்டார் *

பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்து ஏறியிருத்தி *

வில்லால் இலங்கை யழித்தாய் ! நீ வேண்டியதெல்லாம் தருவோம் *

பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தருளாயே. 3         3.3

பரக்க விழித்தெங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில் *

அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் *

இரக்கமே லொன்று மிலாதாய் ! இலங்கை யழித்த பிரானே ! *

குரக்கரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய். 4       3.4

காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி *

வேலைப் பிடித்தென்னை மார்களோட்டில் என்ன விளையாட்டோ ?*

கோலச் சிற்றாடை பலவும்கொண்டு நீ ஏறியிராதே *

கோலம் கரிய பிரானே ! * குருந்திடைக் கூறை பணியாய். 5 3.5

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம்காலைக் கதுவ *

விடத் தேளெறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம் *

குடத்தை எடுத்தேற விட்டுத் கூத்தாட வல்ல எங்கோவே ! *

படிற்றை யெல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்தருளாயே. 6           3.6

நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதியல்லாதன செய்தாய்*

ஊரகம் சாலவும் சேய்த்துஆல் ஊழியெல்லாம் உணர்வானே! *

ஆர்வம் உனக்கேயுடையோம் அம்மனைமார் காணிலொட்டார்*

போரவிடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறியிராதே. 7         3.7

மாமிமார் மக்களேயல்லோம் மற்றும்இங்கு எல்லாரும் போந்தார்*

தூமலர்க் கண்கள்வளரத் தொல்லை இராத்துயில்வானே! *

சேமமேலென்றிது சாலச் சிக்கென நாம் இது சொன்னோம் *

கோமள ஆயர் கொழுந்தே ! குருந்திடைக் கூறை பணியாய். 8          3.8

கஞ்சன் வலை வைத்த அன்று காரிருளெல்லில் பிழைத்து *

நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக்கன்னியரோமை *

அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் *

வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசிமையிலீ ! கூறை தாராய். 9  3.9

கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டைப் *

பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை *

இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய் *

மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே. 10      3.10

நான்காம் திருமொழி

தெள்ளியார் பலர், கை தொழும் தேவனார் *

வள்ளல், மாலிருஞ்சோலை மணாளனார் *

பள்ளி கொள்ளுமிடத்து, அடி கொட்டிடக் *

கொள்ளுமாகில் நீ, கூடிடு கூடலே ! 1   4.1       திருமாலிருஞ்சோலை

காட்டில் வேங்கடம், கண்ணபுர நகர் *

வாட்டமின்றி, மகிழ்ந்துறை வாமனன் *

ஓட்டரா வந்து, என் கைப்பற்றித் தன்னொடும்

கூட்டுமாகில் நீ, கூடிடு கூடலே ! 2         4.2       திருக்கண்ணபுரம்,

திருவேங்கடம் திருப்பதி

பூமகன், புகழ் வானவர் போற்றுதற்

காமகன் * அணி வாணுதல், தேவகி

மாமகன் * மிகு சீர், வசுதேவர் தம் *

கோமகன் வரில், கூடிடு கூடலே ! 3       4.3

ஆய்ச்சிமார்களும், ஆயரும் அஞ்சிட *

பூத்த நீள் கடம்பேறிப், புகப் பாய்ந்து *

வாய்த்த காளியன் மேல், நடமாடிய *

கூத்தனார் வரில், கூடிடு கூடலே ! 4      4.4

மாட மாளிகை சூழ், மதுரைப் பதி

நாடி * நந்தெருவின் நடுவே, வந்திட்டு *

ஓடை மா மதயானை, உதைத்தவன் *

கூடுமாகில் நீ, கூடிடு கூடலே ! 5 4.5       வடமதுரை

அற்றவன், மருதம் முறிய நடை

கற்றவன் * கஞ்சனை, வஞ்சனையில்

செற்றவன் * திகழும், மதுரைப்பதிக் *

கொற்றவன் வரில், கூடிடு கூடலே ! 6  4.6       வடமதுரை

அன்று, இன்னாதன செய் சிசுபாலனும் *

நின்ற நீள் மருதும், எருதும் புள்ளும்*

வென்றி வேல் விறல், கஞ்சனும் வீழ முன் *

கொன்றவன் வரில், கூடிடு கூடலே ! 7 4.7

ஆவலன்புடையார் தம், மனத்தன்றி

மேவலன் * விரை சூழ், துவராபதிக்

காவலன் * கன்று மேய்த்து, விளையாடும் *

கோவலன் வரில், கூடிடு கூடலே ! 8     4.8       துவாரகை (துவரை)

கொண்ட கோலக் குறளுருவாய்ச், சென்று *

பண்டு மாவலி தன், பெரு வேள்வியில்*

அண்டமும் நிலனும், அடியொன்றினால் *

கொண்டவன் வரில், கூடிடு கூடலே ! 9           4.9

பழகு நான்மறையின், பொருளாய் * மத

மொழுகு வாரணம் உய்ய, அளித்த * எம்

அழகனார், அணியாய்ச்சியர் சிந்தையுள் *

குழகனார் வரில், கூடிடு கூடலே ! 10     4.10

ஊடல் கூடல், உணர்தல் புணர்தலை *

நீடு நின்ற, நிறை புகழாய்ச்சியர்

கூடலைக் * குழற் கோதை, முன் கூறிய *

பாடல் பத்தும் வல்லார்க்கு, இல்லை பாவமே. 11           4.11

ஐந்தாம் திருமொழி

மன்னு பெரும்புகழ் மாதவன்

மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்

தன்னை * உகந்தது காரணமாக

என் சங்கிழக்கும் வழக்குண்டே ? *

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்

பொதும்பினில் வாழும் குயிலே ! *

பன்னி எப்போதும் இருந்து விரைந்து

என் பவளவாயன் வரக் கூவாய். 1          5.1

வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட

விமலன் எனக்கு உருக்காட்டான் *

உள்ளம் புகுந்து என்னை நைவித்து

நாளும் உயிர் பெய்து கூத்தாட்டுக் காணும் *

கள்ளவிழ் செண்பகப்பூ மலர்கோதிக்

களித்து இசை பாடும் குயிலே ! *

மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது

என் வேங்கடவன் வரக் கூவாய். 2         5.2       திருவேங்கடம் திருப்பதி

மாதலி தேர் முன்புகோல் கொள்ள

மாயன் இராவணன் மேல் * சரமாரி

தாய்தலை அற்றற்று வீழத்தொடுத்த

தலைவன் வரவெங்கும் காணேன் *

போதலர் காவில் புதுமணம் நாறப்

பொறி வண்டின் காமரம் கேட்டு * உன்

காதலியோடு உடன் வாழ் குயிலே !

என் கருமாணிக்கம் வரக் கூவாய். 3      5.3

என்புருகி இனவேல் நெடுங்கண்கள்

இமை பொருந்தா பல நாளும் *

துன்பக் கடல் புக்கு வைகுந்தனென்பதோர்

தோணி பெறாது உழல்கின்றேன் *

அன்புடையாரைப் பிரிவுறு நோய் அது

நீயும் அறிதி குயிலே ! *

பொன்புரை மேனிக் கருளக்கொடியுடைப்

புண்ணியனை வரக்கூவாய். 4        5.4

மென்னடை அன்னம் பரந்து விளையாடும்

வில்லிபுத்தூர் உறைவான் தன் *

பொன்னடி காண்பதோர் ஆசையினால்

என் பொருகயற் கண்ணிணை துஞ்சா *

இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த

என் கோலக் கிளியை *

உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே !

உலகளந்தான் வரக் கூவாய். 5      5.5       ்ரீவில்லிபுத்தூர்

எத்திசையும் அமரர் பணிந்தேத்தும்

இருடீகேசன் வலி செய்ய *

முத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும்

முலையும் அழகழிந்தேன் நான் *

கொத்தலர் காவில் மணித்தடம்

கண்படைகொள்ளும் இளங்குயிலே ! *

என் தத்துவனை வரக் கூகிற்றியாகில்

தலையல்லால் கைம்மாறிலேனே. 6      5.6

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்

புணர்வதோர் ஆசையினால் * என்

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து

ஆவியை ஆகுலம் செய்யும் *

அங்குயிலே ! உனக்கென்ன மறைந்துறைவு ?

ஆழியும் சங்கும் ஒண்தண்டும் *

தங்கிய கையவனை வரக் கூவில்

நீ சாலத்தருமம் பெறுதி. 7    5.7       திருப்பாற்கடல்

சார்ங்கம் வளைய வலிக்கும்

தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன் *

நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச்சங்கம்

நானும் அவனும் அறிதும் *

தேங்கனி மாம்பொழில்

செந்தளிர் கோதும் சிறு குயிலே ! * திருமாலை

ஆங்கு விரைந்தொல்லைக் கூகிற்றியாகில்

அவனை நான் செய்வன காணே. 8         5.8

பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது

ஓர் பாசத்தகப்பட்டிருந்தேன் *

பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ்குயிலே!

குறிக்கொண்டு இது நீ கேள் *

சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல்

பொன் வளை கொண்டு தருதல் *

இங்குள்ள காவினில் வாழக்கருதில்

இரண்டத்தொன்றேல் திண்ணம் வேண்டும். 9           5.9

அன்றுலகமளந்தானை உகந்து

அடிமைக்கண் அவன் வலிசெய்யத் *

தென்றலும் திங்களும் ஊடறுத்து

என்னை நலியும் முறைமை அறியேன் *

என்றும் இக்காவில் இருந்திருந்து

என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே ! *

இன்று நாராயணனை வரக் கூவாயேல்

இங்குத்தை நின்றும் துரப்பன். 10  5.10

விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை

வேற்கண் மடந்தை விரும்பிக் *

கண்ணுற என் கடல் வண்ணனைக்கூவு

கருங்குயிலே ! என்ற மாற்றம் *

பண்ணுறு நான்மறையோர் புதுவை மன்னன்

பட்டர்பிரான் கோதை சொன்ன *

நண்ணுறு வாசக மாலை வல்லார்

நமோ நாராயணாய என்பாரே. 11 5.11

ஆறாம் திருமொழி

வாரணமாயிரம், சூழ வலஞ்செய்து *

நாரண நம்பி, நடக்கின்றானென்று * எதிர்

பூரண பொற்குடம் வைத்துப், புறமெங்கும் *

தோரணம் நாட்டக், கனாக்கண்டேன் தோழீ ! நான். 1       6.1

நாளை வதுவை மணமென்று, நாளிட்டுப் *

பாளை கமுகு, பரிசுடைப் பந்தற்கீழ் *

கோளரி மாதவன், கோவிந்தன் என்பான் ஓர் *

காளை புகுதக், கனாக்கண்டேன் தோழீ ! நான். 2    6.2

இந்திரனுள்ளிட்ட, தேவர் குழாமெல்லாம் *

வந்திருந்து, என்னை மகள் பேசி மந்திரித்து *

மந்திரக் கோடி யுடுத்தி, மணமாலை *

அந்தரி சூட்டக், கனாக்கண்டேன் தோழீ! நான். 3      6.3

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து, நனி நல்கிப் *

பார்ப்பனச் சிட்டர்கள், பல்லாண்டெ(ரெ)டுத்தேத்திச் *

பூப்புனை கண்ணிப், புனிதனோடு என்தன்னைக் *

காப்பு நாண்கட்டக், கனாக்கண்டேன் தோழீ ! நான். 4       6.4

கதிரொளி தீபம், கலசமுடனேந்தி *

சதிரிள மங்கையார் தாம், வந்து எதிர் கொள்ள *

மதுரையார் மன்னன், அடிநிலை தொட்டு * எங்கும்

அதிரப் புகுதக், கனாக்கண்டேன் தோழீ ! நான். 5     6.5       வடமதுரை

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத *

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த, பந்தற் கீழ் *

மைத்துனன் நம்பி, மதுசூதன் வந்து * என்னைக்

கைத்தலம் பற்றக், கனாக்கண்டேன் தோழீ ! நான். 6        6.6

வாய் நல்லார், நல்ல மறையோதி மந்திரத்தால் *

பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்*

காய் சின மாகளிறன்னான், என் கைப்பற்றித் *

தீ வலம் செய்யக், கனாக் கண்டேன் தோழீ ! நான். 7       6.7

இம்மைக்கும், ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் *

நம்மை யுடையவன், நாராயணன் நம்பி *

செம்மை யுடைய, திருக்கையால் தாள் பற்றி *

அம்மி மிதிக்கக், கனாக் கண்டேன் தோழீ ! நான். 8            6.8

வரிசிலை வாள் முகத்து, என்னைமார் தாம் வந்திட்டு *

எரிமுகம் பாரித்து, என்னை முன்னே நிறுத்தி *

அரிமுகன் அச்சுதன் கைம்மேல், என் கை வைத்துப் *

பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ ! நான். 9        6.9

குங்குமமப்பிக், குளிர் சாந்தம் மட்டித்து *

மங்கல வீதி வலஞ் செய்து, மணநீர் *

அங்கு அவனோடும் உடன் சென்று, அங்கு ஆனை மேல் *

மஞ்சனமாட்டக், கனாக் கண்டேன் தோழீ நான். 10 *          6.10

ஏழாம் திருமொழி

கருப்பூரம் நாறுமோ ? கமலப்பூ நாறுமோ ? *

திருப்பவளச் செவ்வாய்தான், தித்தித்திருக்குமோ ? *

மருப்பொசித்த மாதவன்தன், வாய்ச்சுவையும் நாற்றமும் *

விருப்புற்றுக் கேட்கின்றேன், சொல்லாழி வெண்சங்கே ! 1.      7.1

கடலில் பிறந்து, கருதாது * பஞ்சசனன்

உடலில் வளர்ந்து போய், ஊழியான் கைத்தலத்

திடரில் * குடியேறித், தீயவசுரர் *

நடலைப்பட முழங்கும், தோற்றத்தாய் நற்சங்கே ! 2         7.2

தடவரையின் மீதே, சரற்கால சந்திரன் *

இடையுவாவில் வந்து, எழுந்தாலே போல * நீயும்

வடமதுரையார் மன்னன், வாசுதேவன் கையில் *

குடியேறி வீற்றிருந்தாய், கோலப் பெருஞ்சங்கே. 3            7.3       வடமதுரை

சந்திரமண்டலம் போல், தாமோதரன் கையில் *

அந்தரமொன்றின்றி, ஏறி அவன் செவியில் *

மந்திரங்கொள்வாயே போலும், வலம்புரியே ! *

இந்திரனும் உன்னோடு, செல்வத்துக்கேலானே. 4    7.4

உன்னோடுடனே, ஒரு கடலில் வாழ்வாரை *

இன்னார் இனையாரென்று, எண்ணுவாரில்லை காண் *

மன்னாகி நின்ற, மதுசூதன் வாயமுதம் *

பல்நாளும் உண்கின்றாய், பாஞ்சசன்னியமே. 5         7.5

போய்த் தீர்த்தமாடாதே, நின்ற புணர் மருதம் *

சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே, ஏறிக் குடி கொண்டு *

சேய்த்தீர்த்தமாய் நின்ற, செங்கண்மால் தன்னுடைய *

வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய், வலம்புரியே. 6          7.6

செங்கமல நாண் மலர் மேல், தேனுகரும் அன்னம்போல்*

செங்கண் கருமேனி, வாசுதேவனுடைய *

அங்கைத் தலமேறி, அன்னவசஞ் செய்யும் *

சங்கு அரையா! உன் செல்வம், சால அழகியதே. 7 7.7

உண்பது சொல்லில், உலகளந்தான் வாயமுதம் *

கண்படைகொள்ளில், கடல்வண்ணன் கைத்தலத்தே *

பெண்படையார் உன் மேல், பெரும்பூசல் சாற்றுகின்றார் *

பண் பல செய்கின்றாய், பாஞ்சசன்னியமே ! * 8      7.8

பதினாறாமாயிரவர் தேவிமார், பார்த்திருப்ப *

மதுவாயில் கொண்டாற்போல், மாதவன் தன் வாயமுதம் *

பொதுவாக உண்பதனைப், புக்கு நீயுண்டக்கால் *

சிதையாரோ உன்னோடு ? செல்வப் பெருஞ்சங்கே ! 9     7.9

பாஞ்சசன்னியத்தைப், பற்பநாபனோடும் *

வாய்ந்த பெருஞ்சுற்றமாக்கிய, வண்புதுவை *

ஏய்ந்த புகழ்ப் பட்டர் பிரான் கோதை, தமிழ் ஈரைந்தும் *

ஆய்ந்தேத்த வல்லாரவரும், அணுக்கரே. 10    7.10

ஆயனுக்காகத், தான் கண்ட கனாவினை *

வேயர் புகழ், வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல் *

தூய தமிழ் மாலை, ஈரைந்தும் வல்லவர் *

வாயு நன் மக்களைப் பெற்று, மகிழ்வரே. 11  7.11

எட்டாம் திருமொழி

விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்காள் ! *

தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே ? *

கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனைப் *

பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கு ஓர் பெருமையே ? 1          8.1       திருவேங்கடம் திருப்பதி

மாமுத்த நிதி சொரியும் மாமுகில்காள் ! * வேங்கடத்துச்

சாமத்தின் நிறம்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே ! *

காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல் *

ஏமத்தோர் தென்றலுக்கு இங்கிலக்காய் நானிருப்பேனே. 2       8.2       திருவேங்கடம் திருப்பதி

ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோடிவை யெல்லாம் *

எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால் *

குளிரருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம்பாடி *

அளியத்த மேகங்காள் ! ஆவி காத்திருப்பேனே. 3  8.3       திருவேங்கடம் திருப்பதி

மின்னாகத்தெழுகின்ற மேகங்காள் ! * வேங்கடத்துத்

தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு *

என் ஆகத்து இளங்கொங்கை விரும்பித் தாம் நாடோறும் *

பொன்னகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே. 4         8.4       திருவேங்கடம் திருப்பதி

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் ! * வேங்கடத்துத்

தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள் ! *

ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடலிடந்தான் *

தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே. 5            8.5       திருவேங்கடம் திருப்பதி

சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் ! * மாவலியை

நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள் ! *

உலங்கு உண்ட விளங்கனி போல் உள்மெலியப் புகுந்து * என்னை

நலங்கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே. 6 8.6       திருவேங்கடம் திருப்பதி

சங்கமா கடல் கடைந்தான் தண்முகில்காள் !* வேங்கடத்துச்

செங்கண்மால் சேவடிக் கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் *

கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து * ஒரு நாள்

தங்குமேல் என்னாவி தங்குமென்று உரையீரே. 7   8.7       திருவேங்கடம் திருப்பதி

கார்காலத்தெழுகின்ற கார்முகில்காள் ! * வேங்கடத்துப்

போர்காலத்தெழுந்தருளிப் பொருதவனார் பேர் சொல்லி *

நீர்காலத்து எருக்கின் அம்பழவிலை போல் வீழ்வேனை *

வார்காலத்தொரு நாள் தம் வாசகம் தந்தருளாரே. 8         8.8       திருவேங்கடம் திருப்பதி

மதயானை போலெழுந்த மாமுகில்காள்!* வேங்கடத்தைப்

பதியாக வாழ்வீர்காள்! பாம்பணையான் வார்த்தை என்னே ! *

கதியென்றும் தானாவான் கருதாது * ஓர் பெண் கொடியை

வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே. 9   8.9       திருவேங்கடம் திருப்பதி

நாகத்தினணையானை நன்னுதலாள் நயந்து உரைசெய்*

மேகத்தை வேங்கடக்கோன் விடு தூதில் விண்ணப்பம் *

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் *

ஆகத்து வைத்துரைப்பாரவர் அடியாராகுவரே. 10    8.10     திருவேங்கடம் திருப்பதி

ஒன்பதாம் திருமொழி

சிந்துரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை யெங்கும் *

இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் *

மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ் சாறு கொண்ட *

சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்று உய்துங் கொலோ? 1   9.1            திருமாலிருஞ்சோலை

போர்க்களிறு பொரும் மாலிருஞ்சோலை யம்பூம்புறவில் *

தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற *

கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன் *

ஆர்க்கு இடுகோ? தோழீ ! அவன் தார் செய்த பூசலையே. 2     9.2            திருமாலிருஞ்சோலை

கருவிளை யொண்மலர்காள் ! காயாமலர்காள் ! * திருமால்

உருவொளி காட்டுகின்றீர் எனக்கு உய்வழக்கொன்று உரையீர் *

திரு விளையாடு திண்தோள் திருமாலிருஞ்சோலை நம்பி *

வரிவளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே. 3       9.3            திருமாலிருஞ்சோலை

பைம்பொழில் வாழ்குயில்காள்! மயில்காள்!ஒண்கருவிளைகாள் !*

வம்பக் களங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள் !*

ஐம்பெரும் பாதகர்காள் ! அணிமாலிருஞ்சோலை நின்ற *

எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே? 4          9.4            திருமாலிருஞ்சோலை

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற *

செங்கண் கருமுகிலின் திருவுருப்போல் * மலர்மேல்

தொங்கிய வண்டினங்காள் ! தொகு பூஞ்சுனைகாள்!* சுனையில்

தங்கு செந்தாமரைகாள் ! எனக்கு ஓர் சரண் சாற்றுமினே. 5    9.5            திருமாலிருஞ்சோலை

நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு * நான்

நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் *

நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன் *

ஏறு திருவுடையான் இன்று வந்து இவைகொள்ளுங்கொலோ? 6        9.6            திருமாலிருஞ்சோலை

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் * நான்

ஒன்று நூறாயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் *

தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள்

நின்ற பிரான் * அடியேன் மனத்தே வந்து நேர்படிலே. 7 9.7            திருமாலிருஞ்சோலை

காலை யெழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள் *

மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ ? *

சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் *

ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8           9.8            திருமாலிருஞ்சோலை,

துவாரகை (துவரை)

கோங்கலரும்பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள்மேல் *

தூங்கு பொன்மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன் *

பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் *

சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ? 9       9.9            திருமாலிருஞ்சோலை

சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது *

வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற

சுந்தரனைச் * சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த *

செந்தமிழ்ப் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே. 10          9.10            திருமாலிருஞ்சோலை

பத்தாம் திருமொழி

கார்க்கோடல்பூக்காள்! கார்க்கடல்வண்ணன்என்மேல் * உம்மைப்

போர்க்கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான் ?*

ஆர்க்கோ இனி நாம் பூசலிடுவது ? * அணிதுழாய்த்

தார்க்கு ஓடும் நெஞ்சந்தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ! 1      10.1

மேல்தோன்றிப் பூக்காள் ! மேலுலகங்களின் மீதுபோய் *

மேல் தோன்றும் சோதி வேதமுதல்வர் வலங்கையில் *

மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது * எம்மை

மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றிரே. 2         10.2

கோவை மணாட்டி!, நீ உன்கொழுங்கனி கொண்டு * எம்மை

ஆவி தொலைவியேல், வாயழகர் தம்மை யஞ்சுதும் *

பாவியேன் தோன்றிப், பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல் *

நாவுமிரண்டுள ஆய்த்து, நாணிலியேனுக்கே. 3         10.3

முல்லைப் பிராட்டி! நீ உன் முறுவல்கள் கொண்டு * எம்மை

அல்லல் விளைவியேல், ஆழிநங்காய் ! உன்னடைக்கலம் *

கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட, குமரனார்

சொல்லும் பொய்யானால் * நானும் பிறந்தமை பொய்யன்றே. 4       10.4

பாடும் குயில்காள் !, ஈதென்ன பாடல் ? * நல்வேங்கட

நாடர் நமக்கொரு வாழ்வு தந்தால், வந்து பாடுமின் *

ஆடும் கருளக் கொடியுடையார், வந்து அருள் செய்து *

கூடுவராயிடில் கூவி, நும் பாட்டுக்கள் கேட்டுமே. 5          10.5     திருவேங்கடம் திருப்பதி

கணமா மயில்காள் ! கண்ணபிரான் திருக்கோலம் போன்று *

அணிமா நடம் பயின்றா டுகின்றீர்க்கு, அடிவீழ்கின்றேன் *

பணமாட ரவணைப், பற்பல காலமும் பள்ளி கொள் *

மணவாளர் நம்மை வைத்த பரிசிது, காண்மினே. 6 10.6

நடமாடித் தோகை விரிக்கின்ற, மாமயில்காள்! * உம்மை

நடமாட்டம் காணப், பாவியேன் நான் ஓர் முதலிலேன் *

குடமாடு கூத்தன் கோவிந்தன், கோமிறை செய்து * எம்மை

உடைமாடு கொண்டான், உங்களுக்கினி ஒன்று போதுமே ? 7  10.7

மழையே! மழையே !, மண்புறம் பூசி உள்ளாய் நின்று *

மெழுகூற்றினாற்போல், ஊற்று நல்வேங்கடத்துள் நின்ற *

அழகப்பிரானார் தம்மை, என் நெஞ்சத்தகப்படத்

தழுவிநின்று* என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே? 8   10.8            திருவேங்கடம் திருப்பதி

கடலே! கடலே!, உன்னைக் கடைந்து கலக்குறுத்து *

உடலுள் புகுந்து நின்று, ஊறலறுத்தவற்கு * என்னையும்

உடலுள் புகுந்து நின்று, ஊறலறுக்கின்ற மாயற்கு * என்

நடலைகளெல்லாம், நாகணைக்கே சென்றுரைத்தியே. 9  10.9

நல்ல என் தோழி !, நாகணைமிசை நம்பரர் *

செல்வர் பெரியர், சிறுமானிடவர் நாம் செய்வதென் ? *

வில்லி புதுவை விட்டுசித்தர், தங்கள் தேவரை *

வல்ல பரிசு வருவிப்பரேல், அது காண்டுமே. 10      10.10

பதினோராம் திருமொழி

தாமுகக்கும் தம்கையில், சங்கமே போலாவோ ? *

யாமுகக்கும் எங்கையில், சங்கமும் ஏந்திழையீர் ! *

தீமுகத்து நாகணைமேல், சேரும் திருவரங்கர் *

ஆ! முகத்தை நோக்காரால், அம்மனே ! அம்மனே ! 1       11.1     திருவரங்கம்

எழிலுடைய அம்மனைமீர் !, என்னரங்கத்தின்னமுதர் *

குழலழகர் வாயழகர், கண்ணழகர் * கொப்பூழில்

எழுகமலப் பூவழகர் * எம்மானார், என்னுடைய

கழல் வளையைத் தாமும் கழல்வளையேயாக்கினரே. 2           11.2     திருவரங்கம்

பொங்கோதம் சூழ்ந்த, புவனியும் விண்ணுலகும் *

அங்காதும் சோராமே, ஆள்கின்ற எம்பெருமான் *

செங்கோலுடைய, திருவரங்கச்செல்வனார் *

எங்கோல் வளையால் இடர் தீர்வராகாதே ? 3           11.3     திருவரங்கம்

மச்சணிமாட, மதிளரங்கர் வாமனனார் *

பச்சைப் பசுந்தேவர், தாம் பண்டு நீரேற்ற *

பிச்சைக் குறையாகி, என்னுடைய பெய்வளைமேல் *

இச்சையுடையரேல், இத்தெருவே போதாரே ? 4        11.4     திருவரங்கம்

பொல்லாக்குறளுருவாய்ப், பொற்கையில் நீரேற்று *

எல்லாவுலகும் அளந்துகொண்ட எம்பெருமான் *

நல்லார்கள் வாழும், நளிரரங்க நாகணையான் *

இல்லாதோம் கைப்பொருளும், எய்துவான் ஒத்துளனே. 5          11.5     திருவரங்கம்

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்* காவிரி நீர்

செய்ப்புரளவோடும், திருவரங்கச்செல்வனார் *

எப்பொருட்கும் நின்றுஆர்க்கும், எய்தாது * நான்மறையின்

சொற்பொருளாய் நின்றார், என் மெய்ப்பொருளும் கொண்டாரே. 6    11.6            திருவரங்கம்

உண்ணாது உறங்காது, ஒலிகடலை ஊடறுத்துப் *

பெண்ணாக்கையாப்புண்டு, தாமுற்ற பேதெல்லாம் *

திண்ணார் மதிள் சூழ், திருவரங்கச்செல்வனார் *

எண்ணாதே, தம்முடைய நன்மைகளே எண்ணுவரே. 7     11.7     திருவரங்கம்

பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு* பண்டொருநாள்

மாசுடம்பில் நீர் வாரா, மானமிலாப் பன்றியாம் *

தேசுடைய தேவர், திருவரங்கச்செல்வனார் *

பேசியிருப்பனகள், பேர்க்கவும் பேராவே. 8      11.8     திருவரங்கம்

கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான் *

திண்ணார்ந்திருந்த, சிசுபாலன் தேசழிந்து *

அண்ணாந்திருக்கவே, ஆங்கவளைக் கைப்பிடித்த *

பெண்ணாளன் பேணுமூர் பேரும், அரங்கமே. 9        11.9     திருவரங்கம்

செம்மையுடைய, திருவரங்கர் தாம் பணித்த *

மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் *

தம்மையுகப்பாரைத், தாமுகப்பர் என்னும் சொல் *

தம்மிடையே பொய்யானால், சாதிப்பார் ஆர் இனியே ? 10          11.10   திருவரங்கம்

பன்னிரண்டாம் திருமொழி

மற்றிருந்தீர்கட்கு அறியலாகா

மாதவனென்பதோர் அன்பு தன்னை *

உற்றிருந்தேனுக்கு உரைப்பதெல்லாம்

ஊமையரோடு செவிடர் வார்த்தை *

பெற்றிருந்தாளை யொழியவே போய்ப்

பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி *

மற்பொருந்தா மற்களமடைந்த

மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின். 1     12.1     வடமதுரை

நாணி இனியோர் கருமமில்லை

நாலயலாரும் அறிந்தொழிந்தார் *

பாணியாது என்னை மருந்து செய்து

பண்டு பண்டாக்க உறுதிராகில் *

மாணியுருவாய் உலகளந்த

மாயனைக் காணில் தலை மறியும் *

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்

ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின். 2        12.2     திருவாய்ப்பாடி (கோகுலம்)

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்

தனிவழி போயினாளென்னும் சொல்லு

வந்தபின்னைப் * பழிகாப்பரிது

மாயவன் வந்து உருக்காட்டுகின்றான் *

கொந்தளமாக்கிப் பரக்கழித்துக்

குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற *

நந்தகோபாலன் கடைத்தலைக்கே

நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின். 3         12.3

அங்கைத்தலத்திடை ஆழி கொண்டானவன்

முகத்தன்றி விழியேனென்று *

செங்கச்சுக்கொண்டு கண்ணாடையார்த்துச்

சிறு மானிடவரைக் காணில் நாணும் *

கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர்

கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா *

இங்குத்தை வாழ்வை ஒழியவேபோய்

யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின். 4         12.4

ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது

அம்மனைமீர் ! துழதிப்படாதே *

கார்க்கடல் வண்ணனென்பானொருவன்

கை கண்ட யோகம் தடவத் தீரும் *

நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்

காளியனுச்சியில் நட்டம் பாய்ந்து *

போர்க்களமாக நிருத்தம் செய்த

பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின். 5        12.5

கார்த்தண்முகிலும் கருவிளையும்

காயாமலரும் கமலப் பூவும் *

ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு

இருடீகேசன் பக்கல் போகேயென்று *

வேர்த்துப் பசித்து வயிறசைந்து

வேண்டு அடிசிலுண்ணும்போது ஈதென்று *

பார்த்திருந்து நெடு நோக்குக்கொள்ளும்

பத்த விலோசனத்து உய்த்திடுமின். 6     12.6

வண்ணம்திரிவும் மனங்குழைவும்

மானமிலாமையும் வாய் வெளுப்பும் *

உண்ணலுறாமையும் உள்மெலிவும் *

ஓதநீர் வண்ணனென்பானொருவன் *

தண்ணந்துழாயென்னும் மாலை கொண்டு

சூட்டத்தணியும் * பிலம்பன்தன்னைப்

பண்ணழியப் பலதேவன் வென்ற

பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின். 7         12.7

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்

காடு வாழ் சாதியுமாகப்பெற்றான் *

பற்றி உரலிடை ஆப்புமுண்டான்

பாவிகாள் ! உங்களுக்கு ஏச்சுக்கொலோ ? *

கற்றனபேசி வசவுணாதே

காலிகளுய்ய மழைதடுத்துக் *

கொற்றக் குடையாக ஏந்தி நின்ற

கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின். 8     12.8

கூட்டிலிருந்து கிளி எப்போதும்

கோவிந்தா! கோவிந்தா ! என்றழைக்கும் *

ஊட்டக்கொடாது செறுப்பனாகில்

உலகளந்தான் ! என்று உயரக் கூவும் *

நாட்டில் தலைப்பழியெய்தி

உங்கள் நன்மையிழந்து தலையிடாதே *

சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும்

துவராபதிக்கு என்னை உய்த்திடுமின். 9            12.9     துவாரகை (துவரை)

மன்னு மதுரை தொடக்கமாக

வண் துவராபதி தன்னளவும் *

தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்

தாழ் குழலாள் துணிந்த துணிவைப் *

பொன்னியல் மாடம் பொலித்து தோன்றும்

புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை *

இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை

ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே. 10        12.10

பதிமூன்றாம் திருமொழி

கண்ணனென்னும் கருந்தெய்வம் காட்சிப்பழகிக் கிடப்பேனை *

புண்ணில் புளிப்பெய்தாற் போலப் புறம் நின்று அழகு பேசாதே *

பெண்ணின் வருத்தமறியாத பெருமான் * அரையில் பீதக

வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே. 1           13.1

பால் ஆலிலையில் துயில் கொண்ட

பரமன் வலைப்பட்டிருந்தேனை *

வேலால் துன்னம் பெய்தாற்போல்

வேண்டிற்றெல்லாம் பேசாதே *

கோலால் நிரை மேய்த்து ஆயனாய்க்

குடந்தைக்கிடந்த குடமாடி*

நீலார் தண்ணந் துழாய்கொண்டு

என் நெறி மென்குழல் மேல் சூட்டீரே. 2          13.2     திருக்குடந்தை (கும்பகோணம்)

கஞ்சைக்காய்ந்த கருவில்லி கடைக்கணென்னும் சிறைக்கோலால்*

நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை *

அஞ்சேலென்னானவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை *

வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3      13.3

ஆரே உலகத்து ஆற்றுவார் ? ஆயர் பாடி கவர்ந்துண்ணும் *

காரேறுழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை *

ஆராவமுத மனையான் தன் அமுத வாயி லூறிய *

நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே. 4           13.4

அழிலும்தொழிலும்உருக்காட்டான் அஞ்சேலென்னானவனொருவன்*

தழுவி முழுசிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால் *

தழையின் பொழில் வாய் நிரைப் பின்னே நெடுமால் ஊதி வருகின்ற *

குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே. 5       13.5

நடை யொன்றில்லா உலகத்து நந்தகோபன் மகனென்னும் *

கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டுப் *

புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில் *

பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகாவுயிர் என்னுடம்பையே. 6           13.6

வெற்றிக் கருளக் கொடியான் தன் மீமீதாடா உலகத்து *

வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பேயாக வளர்த்தாளே *

குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு *

அற்ற குற்றமவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே. 7    13.7

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத *

கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால் *

கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் *

அள்ளிப்பறித்திட்டு அவன்மார்விலெறிந்து என்அழலைத் தீர்வேனே. 8       13.8

கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந்தற்கு ஓர்குற்றேவல் *

இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென் ?*

செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று *

மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே. 9 13.9

அல்லல்விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணிவிளக்கை*

வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை *

வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும் *

சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே. 10      13.10            திருவாய்ப்பாடி (கோகுலம்)

பதிநான்காம் திருமொழி

பட்டிமேய்ந்தோர் காரேறு பலதேவற்குஓர்கீழ்க்கன்றாய்*

இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே ? *

இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி *

விட்டுக்கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே. 1       14.1

அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும் *

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே ?*

கணங்களோடு மின் மேகம் கலந்தாற்போல் * வனமாலை

மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே. 2          14.2

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை *

ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக் கண்டீரே ? *

மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்*

மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே. 3       14.3

கார்த்தண் கமலக்கண்ணென்னும் நெடுங்கயிறு படுத்தி * என்னை

ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே ?*

போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக்கன்றே போல்*

வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே. 4          14.4

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் *

ஏதுமொன்றும் கொளத் தாரா ஈசன் தன்னைக் கண்டீரே ? *

பீதகவாடையுடை தாழப் பெருங்கார் மேகக்கன்றே போல் *

வீதியார வருவானை விருந்தாவனத்தே கண்டோமே. 5 14.5

தருமமறியாக் குறும்பனைத் தன்கைச் சார்ங்கமதுவே போல் *

புருவ வட்டமழகிய பொருத்தமிலியைக் கண்டீரே ?

உருவு கரிதாய் முகம் செய்தாய் உதயப்பருப்பதத்தின் மேல் *

விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே. 6      14.6

பொருத்தமுடைய நம்பியைப் புறம்போல் உள்ளும் கரியானைக்*

கருத்தைப் பிழைத்து நின்ற அக்கருமாமுகிலைக் கண்டீரே ? *

அருத்தித் தாரா கணங்களால் ஆரப்பெருகு வானம் போல் *

விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே. 7            14.7

வெளிய சங்கொன்றுடையானைப் பீதகவாடை யுடையானை *

அளிநன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே ? *

களிவண்டுஎங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்குழல்கள் தடந்தோள்மேல்*

மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே. 8    14.8

நாட்டைப் படையென்று அயன் முதலாத் தந்த

நளிர் மாமலர் உந்தி *

வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே ? *

காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய *

வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே. 9            14.9

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த

பரமன் தன்னைப் பாரின் மேல் *

விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் *

மருந்தாமென்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் *

பெருந்தாளுடைய பிரானடிக்கீழ்ப் பிரியாதென்றும் இருப்பாரே. 10    14.10

நாச்சியார் திருமொழி முற்றும்

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.