Thirumalai

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த

திருமாலை

தனியன்கள்

(திருவரங்கப்பெருமாள் அரையர் அருளிச்செய்தது)

மற்றொன்றும்வேண்டாமனமே!* மதிளரங்கர்

கற்றினம்மேய்த்தகழலிணைக்கீழ்* – உற்ற

திருமாலைபாடும்சீர்த் தொண்டரடிப்பொடிஎம்

பெருமானை* எப்பொழுதும்பேசு.

காவலில் புலனை வைத்துக், கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து *

நாவலிட்டு உழிதருகின்றோம், நமன்தமர் தலைகள் மீதே *

மூவுல குண்டுமிழ்ந்த முதல்வ ! நின் நாமம் கற்ற *

ஆவலிப் புடைமை கண்டாய், அரங்கமா நகருளானே ! 1                       திருவரங்கம்

பச்சை மாமலை போல்மேனி, பவளவாய் கமலச்செங்கண் *

அச்சுதா அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும் *

இச்சுவை தவிர யான் போய், இந்திர லோகம் ஆளும் *

அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே ! 2               திருவரங்கம்

வேத நூல் பிராயம் நூறு, மனிசர் தாம் புகுவரேலும் *

பாதியும் உறங்கிப் போகும், நின்ற இப்பதினை யாண்டு *

பேதை பாலகன் அதாகும், பிணிபசி மூப்புத் துன்பம் *

ஆதலால் பிறவி வேண்டேன், அரங்கமா நகருளானே ! 3                      திருவரங்கம்

மொய்த்த வல்வினையுள் நின்று, மூன்றெழுத்துடைய பேரால் *

கத்திரபந்து மன்றே, பராங் கதி கண்டு கொண்டான் *

இத்தனை அடியரானார்க்கு இரங்கும், நம் அரங்கனாய

பித்தனைப் பெற்றும் * அந்தோ ! பிறவியுள் பிணங்குமாறே. 4                       திருவரங்கம்

பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு *

உண்டு இராக் கிடக்குமப்போது உடலுக்கே கரைந்து நைந்து *

தண்துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடித் *

தொண்டு பூண்டமுத முண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே. 5                    திருவரங்கம்

மறம் சுவர் மதிளெடுத்து, மறுமைக்கே வெறுமை பூண்டு *

புறம் சுவரோட்டை மாடம், புரளும் போது அறிய மாட்டீர் *

அறம் சுவராகி நின்ற, அரங்கனார்க்கு ஆட்செய்யாதே *

புறஞ் சுவர் கோலஞ் செய்து, புள் கவ்வக் கிடக்கின்றீரே. 6                   திருவரங்கம்

புலையறமாகி நின்ற, புத்தொடு சமணமெல்லாம் *

கலையறக் கற்ற மாந்தர், காண்பரோ கேட்பரோ தாம் ? *

தலையறுப் புண்டும் சாகேன், சத்தியம் காண்மின் ஐயா ! *

சிலையினால் இலங்கை செற்ற தேவனே, தேவனாவான். 7                 திருவரங்கம்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் * நின்பால்

பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக் *

குறிப்பெனக்கு அடையுமாகில் கூடுமேல் * தலையை ஆங்கே

அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகருளானே ! 8                        திருவரங்கம்

மற்றுமோர் தெய்வமுண்டே? மதியிலா மானிடங்காள் ! *

உற்ற போதன்றி நீங்கள், ஒருவனென்று உணர மாட்டீர் *

அற்றமே லொன்றறியீர், அவனல்லால் தெய்வ மில்லை *

கற்றினம் மேய்த்த எந்தை, கழலிணை பணிமின் நீரே. 9             திருவரங்கம்

நாட்டினான் தெய்வம் எங்கும், நல்லதோரருள் தன்னாலே *

காட்டினான் திருவரங்கம், உய்பவர்க்கு உய்யும் வண்ணம் *

கேட்டிரே நம்பிமீர்காள் !, கெருட வாகனனும் நிற்கச் *

சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே. 10                திருவரங்கம்

ஒரு வில்லால் ஓங்கு முந்நீரடைத்து, உலகங்களுய்யச் *

செருவிலே அரக்கர் கோனைச் செற்ற, நம் சேவகனார் *

மருவிய பெரிய கோயில், மதிள் திருவரங்க மென்னாக் *

கருவிலே திருவிலாதீர் ! காலத்தைக் கழிக்கின்றீரே. 11             திருவரங்கம்

நமனும் முற்கலனும் பேச, நரகில் நின்றார்கள் கேட்க *

நரகமே சுவர்க்க மாகும், நாமங்களுடைய நம்பி *

அவனதூர் அரங்க மென்னாது, அயர்த்து வீழ்ந்தளிய மாந்தர் *

கவலையுள் படுகின்றாறென்று, அதனுக்கே கவல்கின்றேனே.            12            திருவரங்கம்

எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்களெல்லாம் *

வெறிகொள் பூந்துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த *

அறிவிலா மனிசரெல்லாம் அரங்க மென்றழைப்ப ராகில் *

பொறியில் வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியுமன்றே ?  13  திருவரங்கம்

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை *

கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை *

அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்க மென்னா *

மிண்டர் பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கி, நாய்க் கிடுமினீரே.     14            திருவரங்கம்

மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போலப் *

பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி யுடைய கோமான் *

உய்யப் போமுணர்வினார்கட்கு ஒருவனென்று உணர்ந்த பின்னை *

ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்க மன்றே ?  15    திருவரங்கம்

சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம் *

மாதரார் கயற்கணென்னும் வலையுள் பட்டழுந்துவேனைப் *

போதரே யென்று சொல்லிப், புந்தியுள் புகுந்து * தன்பால்

ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்க மன்றே ? 16        திருவரங்கம்

விரும்பி நின்றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன்றில்லை *

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறையிறை உருகும் வண்ணம் *

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட *

கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணிணை களிக்குமாறே !   17            திருவரங்கம்

இனிதிரைத் திவலை மோத, எறியும் தண் பரவை மீதே *

தனிகிடந்து அரசு செய்யும், தாமரைக் கண்ணன் எம்மான்! *

கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் *

பனியரும்பு உதிருமாலோ, என் செய்கேன் பாவியேனே ?  18    திருவரங்கம்

குடதிசை முடியை வைத்துக், குணதிசை பாதம் நீட்டி *

வடதிசை பின்பு காட்டித், தென்திசை இலங்கை நோக்கிக் *

கடல் நிறக்கடவு ளெந்தை, அரவணைத் துயிலுமா கண்டு *

உடலெனக்கு உருகுமாலோ! என்செய்கேன் ? உலகத்தீரே.  19   திருவரங்கம்

பாயும் நீரரங்கந் தன்னுள், பாம்பணைப் பள்ளி கொண்ட *

மாயனார் திருநன் மார்வும், மரகத வுருவும் தோளும் *

தூய தாமரைக் கண்களும், துவரிதழ்ப் பவள வாயும் *

ஆயசீர் முடியும் தேசும், அடியரோர்க்கு அகலலாமே? 20  திருவரங்கம்

பணிவினால் மனமதொன்றிப் பவளவா யரங்கனார்க்குத் *

துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே ! நீ சொல்லாய் *

அணியினார் செம்பொனாய அருவரை யனைய கோயில் *

மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்கலாமே ?   21     திருவரங்கம்

பேசிற்றே பேசலல்லால், பெருமை யொன்று உணரலாகாது *

ஆசற்றார் தங்கட்கல்லால், அறியலாவானு மல்லன் *

மாசற்றார் மனத்துளானை, வணங்கி நாமிருப்ப தல்லால் *

பேசத் தானாவ துண்டோ, பேதை நெஞ்சே ! நீ சொல்லாய்  22 திருவரங்கம்

கங்கையில் புனிதமாய, காவிரி நடுவு பாட்டுப் *

பொங்கு நீர் பரந்து பாயும், பூம்பொழி லரங்கந் தன்னுள் *

எங்கள் மாலிறைவ னீசன், கிடந்ததோர் கிடக்கை கண்டும் *

எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே. 23        திருவரங்கம்

வெள்ள நீர் பரந்து பாயும், விரிபொழி லரங்கம் தன்னுள் *

கள்வனார் கிடந்தவாறும், கமலநன் முகமும் கண்டும் *

உள்ளமே ! வலியை போலும், ஒருவனென்று உணர மாட்டாய் *

கள்ளமே காதல் செய்து, உன் கள்ளத்தே கழிக்கின்றாயே. 24   திருவரங்கம்

குளித்து மூன்றனலை யோம்பும் குறிகொள் அந்தணமை தன்னை

ஒளித்திட்டேன் * என் கணில்லை நின் கணும் பத்தனல்லேன் *

களிப்பது என் கொண்டு ? நம்பீ ! கடல்வண்ணா ! கதறுகின்றேன் *

அளித்தெனக் கருள் செய் கண்டாய் அரங்கமா நகருளானே! 25                     திருவரங்கம்

போதெலாம் போதுகொண்டு உன்பொன்னடி புனையமாட்டேன் *

தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன் *

காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் * அது தன்னாலே

ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே ! என் செய்வான் தோன்றினேனே ?  26            திருவரங்கம்

குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடித் *

தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன் *

மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் நெஞ்சு தன்னால் *

அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே.  27            திருவரங்கம்

உம்பரால் அறியலாகா ஒளியுளார், ஆனைக்காகி *

செம்புலா லுண்டு வாழும், முதலை மேல் சீறி வந்தார் *

நம்பரமாய துண்டே? நாய்களோம் சிறுமை யோரா *

எம்பிராற்கு ஆட் செய்யாதே, என் செய்வான் தோன்றினேனே. 28      திருவரங்கம்

ஊரிலேன் காணியில்லை, உறவு மற்றொருவ ரில்லை *

பாரில் நின் பாத மூலம் பற்றிலேன், பரம மூர்த்தி ! *

காரொளி வண்ணனே ! என் கண்ணனே ! கதறுகின்றேன் *

ஆருளர் ? களைகண் அம்மா ! அரங்கமா நகருளானே ! 29        திருவரங்கம்

மனத்திலோர் தூய்மை யில்லை, வாயிலோரின் சொலில்லை *

சினத்தினால் செற்றம் நோக்கித், தீவிளி விளிவன் வாளா *

புனத்துழாய் மாலையானே! பொன்னிசூழ் திருவரங்கா ! *

எனக்கினிக் கதியென் சொல்லாய்? என்னை யாளுடைய கோவே ! 30            திருவரங்கம்

தவத்துளார் தம்மிலல்லேன், தனம் படைத்தாரி லல்லேன் *

உவர்த்த நீர் போல, என்தனுற்றவர்க் கொன்று மல்லேன் *

துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன் *

அவத்தமே பிறவி தந்தாய், அரங்கமா நகருளானே ! 31        திருவரங்கம்

ஆர்த்து வண்டலம்பும் சோலை அணி திருவரங்கந் தன்னுள் *

கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே ! * உன்னைக் காணும்

மார்க்க மொன்றறிய மாட்டா, மனிசரில் துரிசனாய *

மூர்க்கனேன் வந்து நின்றேன், மூர்க்கனேன் மூர்க்கனேனே. 32          திருவரங்கம்

மெய்யெல்லாம் போக விட்டு விரிகுழலாரில் பட்டுப் *

பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து நின்றேன் *

ஐயனே ! அரங்கனே ! உன்னரு ளென்னு மாசை தன்னால் *

பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே. 33    திருவரங்கம்

உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவானுணர் வொன்றில்லாக் *

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு *

உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந்து அறிதி யென்று *

வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே. 34   திருவரங்கம்

தாவியன்று உலகமெல்லாம், தலைவிளாக் கொண்ட எந்தாய் ! *

சேவியேன் உன்னை யல்லால், சிக்கெனச் செங்கண் மாலே ! *

ஆவியே! அமுதே !, என்த னாருயி ரனைய எந்தாய் ! *

பாவியேன் உன்னை யல்லால், பாவியேன் பாவியேனே. 35     திருவரங்கம்

மழைக்கு அன்று வரை முனேந்தும் மைந்தனே ! மதுரஆறே ! *

உழைக்கன்றே போல நோக்க முடையவர் வலையுள் பட்டு *

உழைக்கின்றேற்கு என்னை நோக்கா தொழிவதே !* உன்னை யன்றே

அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி ! அரங்கமா நகருளானே ! 36    திருவரங்கம்

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ், திருவரங்கத்து ளோங்கும் *

ஒளியுளார் தாமே யன்றே, தந்தையும் தாயுமாவார் *

எளியதோ ரருளுமன்றே, என் திறத்து எம்பிரானார் *

அளிய நம் பையல் என்னார், அம்மவோ கொடியவாறே ! 37    திருவரங்கம்

மேம்பொருள் போகவிட்டு, மெய்ம்மையை மிக உணர்ந்து *

ஆம் பரிசு அறிந்து கொண்டு, ஐம்புல னகத் தடக்கிக் *

காம்பறத் தலை சிரைத்து, உன் கடைத்தலை யிருந்து வாழும் *

சோம்பரை உகத்தி போலும், சூழ்புன லரங்கத்தானே !     38        திருவரங்கம்

அடிமையில் குடிமை யில்லா, அயல் சதுப்பேதிமாரில் *

குடிமையில் கடமைப் பட்ட, குக்கரில் பிறப்பரேலும் *

முடியினில் துளபம் வைத்தாய் ! மொய்கழற்கு அன்பு செய்யும் *

அடியரை உகத்தி போலும், அரங்கமா நகருளானே ! 39        திருவரங்கம்

திருமறு மார்வ !, நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து *

மருவிய மனத்தராகில், மாநிலத் துயிர்க ளெல்லாம் *

வெருவுறக் கொன்று சுட்டிட்டு, ஈட்டிய வல்வினைய ரேலும் *

அருவினைப் பயன துய்யார், அரங்கமா நகருளானே. 40 திருவரங்கம்

வானுளார் அறியலாகா வானவா ! என்பராகில் *

தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் ! என்பராகில் *

ஊனமாயினகள் செய்யும், ஊனகாரகர்க ளேலும் *

போனகம் செய்த சேடம் தருவரேல், புனிதமன்றே. 41      திருவரங்கம்

பழுதிலா ஒழுகலாற்றுப், பலசதுப்பேதி மார்கள் *

இழி குலத்தவர்க ளேலும், எம்மடியார்க ளாகில் *

தொழுமின் நீர் கொடுமின் கொண்மின் என்று, நின்னோடும் ஒக்க *

வழிபட அருளினாய் போல், மதிள் திருவரங்கத்தானே. 42                     திருவரங்கம்

அமரவோ ரங்கமாறும், வேதமோர் நான்குமோதி *

தமர்களில் தலைவராய, சாதி யந்தணர்க ளேலும் *

நுமர்களைப் பழிப்பராகில், நொடிப்பதோ ரளவில் ஆங்கே *

அவர்கள் தாம் புலையர் போலும், அரங்கமா நகருளானே. 43              திருவரங்கம்

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்*

எண்ணிலா வூழியூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப *

விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த

கண்ணறா ! * உன்னை என்னோ? களைகணாக் கருதுமாறே. 44                    திருவரங்கம்

வளவெழும் தவள மாட மதுரை மாநகரந் தன்னுள் *

கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்கமாலைத் *

துளவத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப்பொடி சொல் *

இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே. 45                  திருவரங்கம்

திருமாலை முற்றும்

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.