[highlight_content]

Perumal Thirumozhi

குலசேகரப் பெருமாள் அருளிச்செய்த

ஸ்ரீராமாயணஸாரமாகிய

பெருமாள் திருமொழி

தனியன்கள்

(உடையவர் அருளிச்செய்தது)

இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே!*

தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் * பொன்னஞ்

சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன்* எங்கள்

குலசேகரன்ன்றேகூறு.

(மணக்கால்நம்பி அருளிச் செய்தது)

ஆரம்கெடப்பரனன்பர்கொள்ளாரென்று* அவர்களுக்கே

வாரங்கொடுகுடப்பாம்பிற்கையிட்டவன்* மாற்றலரை

வீரங்கெடுத்தசெங்கோல்கொல்லிகாவலன் வில்லவர்கோன்*

சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே.

முதல் திருமொழி

இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி

இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த *

அரவரசப் பெருஞ்சோதி அனந்த னென்னும்

அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவித் *

திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி

திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் *

கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு,

என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே? ! 1        1.1       திருவரங்கம்

வாயோரீரைஞ்ஞூறு துதங்களார்ந்த

வளையுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ *

வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்

மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் *

காயாம்பூ மலர்ப் பிறங்கலன்ன மாலைக்

கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

மாயோனை மணத்தூணே பற்றி நின்று, என்

வாயார என்று கொலோ வாழ்த்து நாளே ? 2 1.2       திருவரங்கம்

எம்மாண்பின் அயன் நான்கு நாவினாலும்

எடுத்தேத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு *

எம்மாடும் எழிற்கண்களெட்டினோடும்

தொழுதேத்தி இனிதிறைஞ்ச நின்ற * செம்பொன்

அம்மான் தன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற

அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்களிட்டு,

அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே? 3 1.3       திருவரங்கம்

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை

வேலைவண்ணனை என் கண்ணனை * வன்குன்றமேந்தி

ஆவினை அன்று உய்யக்கொண்ட ஆயரேற்றை

அமரர்கள்தம் தலைவனை அந்தமிழின் இன்பப்

பாவினை * அவ்வடமொழியைப் பற்றற்றார்கள்

பயில் அரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்

கோவினை * நாவுற வழுத்தி என்தன் கைகள்

கொய்ம்மலர் தூய் என்று கொலோ கூப்பு நாளே ? 4         1.4       திருவரங்கம்

இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத்

தும்புருவும் நாரதனும் இறைஞ்சியேத்தத் *

துணையில்லாத் தொன்மறைநூல் தோத்திரத்தால்

தொன்மலர்க்கண் அயன் வணங்கி ஓவாதேத்த *

மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ

மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

மணிவண்ணன் அம்மானைக் கண்டு கொண்டு,

என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே? 5       1.5       திருவரங்கம்

அளிமலர்மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை

அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும் *

தெளிமதி சேர் முனிவர்கள் தம் குழுவுமுந்தித்

திசைதிசையில் மலர் தூவிச் சென்று சேரும் *

களிமலர் சேர் பொழிலரங்கத்து உரகமேறிக்

கண்வளரும் கடல்வண்ணர் கமலக்கண்ணும் *

ஒளிமதி சேர் திருமுகமும் கண்டு கொண்டு

என் உள்ளம் மிக என்று கொலோ உருகு நாளே? 6           1.6       திருவரங்கம்

மறம்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி

வன்புலன்களடக்கி இடர்ப்பாரத் துன்பம் துறந்து *

இருமுப் பொழுதேத்தி எல்லையில்லாத்

தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான *

அறம் திகழும் மனத்தவர்தம் கதியைப், பொன்னி

அணி யரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

நிறம் திகழும் மாயோனைக் கண்டு, என்கண்கள்

நீர்மல்க என்று கொலோ நிற்கு நாளே ? 7      1.7       திருவரங்கம்

கோலார்ந்த நெடுஞ் சார்ங்கம் கூனற் சங்கம்

கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள் *

காலார்ந்த கதிக் கருடனென்னும் வென்றிக்

கடும் பறவை இவையனைத்தும் புறஞ்சூழ் காப்பச் *

சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த

திருவரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

மாலோனைக் கண்டு இன்பக் கலவி யெய்தி

வல்வினையேன் என்று கொலோ வாழு நாளே ? 8           1.8       திருவரங்கம்

தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்

குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி*

ஆராத மனக்களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர

நினைந்துருகி யேத்தி * நாளும்

சீரார்ந்த முழவோசை பரவை காட்டும்

திருவரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

போராழி யம்மானைக் கண்டு துள்ளிப்

பூதலத்தில் என்று கொலோ புரளு நாளே ? 9 1.9       திருவரங்கம்

வன் பெரு வானகமுய்ய அமரருய்ய

மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்யத் *

துன்பமிகு துயரகல அயர்வொன்றில்லாச்

சுகம் வளர, அகமகிழும் தொண்டர் வாழ *

அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளி கொள்ளும்

அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் *

இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்

இசைந்து உடனே என்று கொலோ இருக்கு நாளே? 10     1.10     திருவரங்கம்

திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத்

திருவரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *

கடல் விளங்கு கருமேனியம்மான் தன்னைக்

கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால் *

குடை விளங்கு விறல் தானைக் கொற்ற ஒள்வாள்

கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற்செய்த *

நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்

நலம் திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே. 11          1.11     திருவரங்கம்

இரண்டாம் திருமொழி

தேட்டரும்திறல் தேனினைத் தென்னரங்கனைத்* திருமாதுவாழ்

வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால்கொள் சிந்தையராய் *

ஆட்டமேவி அலர்ந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் *

ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே. 1          2.1            திருவரங்கம்

தோடுலா மலர்மங்கை தோளிணை தோய்ந்ததும் சுடர்வாளியால்*

நீடு மாமரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து *

ஆடிப் பாடி அரங்கவோ ! என்றழைக்கும் தொண்டரடிப்பொடி

ஆட நாம்பெறில் *கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே? 2         2.2            திருவரங்கம்

ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய் *

மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப் பாடி * வண்பொன்னிப்பேர்

ஆறுபோல் வரும் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில்திருமுற்றம்*

சேறுசெய்தொண்டர் சேவடிச் செழுஞ்சேறு என் சென்னிக்கணிவனே. 3   2.3            திருவரங்கம்

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடனுண்டலும்

உடன்று ஆய்ச்சி கண்டு *

ஆர்த்த தோளுடை எம்பிரான் என்னரங்கனுக்கு அடியார்களாய் *

நாத்தழும்பெழ நாரணா என்றழைத்து மெய் தழும்பத் தொழுது

ஏத்தி * இன்புறும் தொண்டர் சேவடி

ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே. 4          2.4       திருவரங்கம்

பொய்சிலைக் குரலேற்றெருத்தமிறுத்துப் போரரவு ஈர்த்தகோன் *

செய்சிலைச் சுடர் சூழொளித் திண்ணமாமதிள் தென்னரங்கனாம் *

மெய்சிலைக் கருமேகமொன்று தம் நெஞ்சில் நின்று திகழப் போய் *

மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என்மனம் மெய்சிலிர்க்குமே. 5      2.5            திருவரங்கம்

ஆதி யந்த மனந்த மற்புதமான வானவர் தம்பிரான் *

பாத மாமலர் சூடும் பத்தியிலாத பாவிகள் உய்ந்திடத் *

தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கனெம்மானுக்கே *

காதல்செய்தொண்டர்க்குஎப்பிறப்பிலும் காதல்செய்யும்என்நெஞ்சமே. 6     2.6            திருவரங்கம்

காரினம் புரைமேனி நற்கதிர் முத்த வெண்ணகைச் செய்யவாய் *

ஆரமார்வ னரங்க னென்னும் அரும் பெருஞ் சுடரொன்றினைச் *

சேரும் நெஞ்சினராகிச் சேர்ந்து கசிந்திழிந்த கண்ணீர்களால் *

வார நிற்பவர் தாளிணைக்கு ஒரு வாரமாகும் என் நெஞ்சமே. 7       2.7            திருவரங்கம்

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறுந் துழாய் *

மாலையுற்ற வரைப் பெருந் திருமார்வனை மலர்க்கண்ணனை *

மாலையுற்றெழுந்தாடிப் பாடித் திரிந்து அரங்கனெம்மானுக்கே *

மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றது என்நெஞ்சமே. 8   2.8            திருவரங்கம்,

திருப்பாற்கடல்

மொய்த்துக்கண்பனிசோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்துநின்று*

எய்த்துக் கும்பிடு நட்டமிட்டு எழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி *

என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி * அவனுக்கே

பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே. 9 2.9       திருவரங்கம்

அல்லி மாமலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம் *

எல்லையில் அடிமைத் திறத்தினில் என்று மேவு மனத்தனாம் *

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன் * சொல்லின்இன்தமிழ்மாலைவல்லவர் தொண்டர் தொண்டர்களாவரே. 10 2.10            திருவரங்கம்

மூன்றாம் திருமொழி

மெய்யில் வாழ்க்கையை, மெய்யெனக் கொள்ளும் * இவ்

வையந் தன்னொடும், கூடுவதில்லை யான் *

ஐயனே ! அரங்கா ! என்றழைக்கின்றேன் *

மையல் கொண்டொழிந்தேன், என்தன் மாலுக்கே. 1           3.1       திருவரங்கம்

நூலினே ரிடையார், திறத்தே நிற்கும் *

ஞாலந் தன்னொடும், கூடுவதில்லை யான் *

ஆலியா வழையா ! அரங்கா ! என்று *

மாலெழுந்தொழிந்தேன், என்தன் மாலுக்கே. 2            3.2       திருவரங்கம்

மாரனார் வரிவெஞ்சிலைக்கு, ஆட்செய்யும் *

பாரினாரொடும், கூடுவதில்லை யான் *

ஆரமார்வன், அரங்கன் அனந்தன் * நல்

நாரணன், நரகாந்தகன் பித்தனே. 3            3.3       திருவரங்கம்

உண்டியே உடையே, உகந்தோடும் இம்

மண்டலத்தொடும், கூடுவதில்லை யான் *

அண்டவாணன், அரங்கன் * வன்பேய் முலை

உண்டவாயன் தன், உன்மத்தன் காண்மினே. 4          3.4       திருவரங்கம்

தீதில் நன்னெறி நிற்க, அல்லாது செய்

நீதியாரொடும், கூடுவதில்லை யான் *

ஆதி ஆயன், அரங்கன் அந்தாமரைப்

பேதை மாமணவாளன் தன், பித்தனே. 5           3.5       திருவரங்கம்

எம்பரத்தரல்லாரொடும், கூடலன் *

உம்பர் வாழ்வை, ஒன்றாகக் கருதலன் *

தம்பிரான், அமரர்க்கு அரங்கநகர்

எம்பிரானுக்கு, எழுமையும் பித்தனே. 6  3.6       திருவரங்கம்

எத்திறத்திலும், யாரொடும் கூடும் * அச்

சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்*

அத்தனே! அரங்கா ! என்றழைக்கின்றேன் *

பித்தனா யொழிந்தேன், எம்பிரானுக்கே. 7         3.7       திருவரங்கம்

பேயரே எனக்கு, யாவரும் * யானும் ஓர்

பேயனே எவர்க்கும், இது, பேசியென்? *

ஆயனே ! அரங்கா !, என்றழைக்கின்றேன் *

பேயனா யொழிந்தேன், எம்பிரானுக்கே. 8         3.8       திருவரங்கம்

அங்கையாழி, அரங்கனடியிணை *

தங்கு சிந்தைத், தனிப் பெரும் பித்தனாய்க் *

கொங்கர் கோன், குலசேகரன் சொன்ன சொல் *

இங்கு வல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. 9           3.9       திருவரங்கம்

நான்காம் திருமொழி

ஊனேறு செல்வத்து, உடற்பிறவி யான் வேண்டேன் *

ஆனேறேழ் வென்றான், அடிமைத் திறமல்லால் *

கூனேறு சங்கமிடத்தான் தன், வேங்கடத்துக் *

கோனேரி வாழும், குருகாய்ப் பிறப்பேனே. 1 4.1       திருவேங்கடம் திருப்பதி

ஆனாத செல்வத்து, அரம்பையர்கள் தற்சூழ, *

வானாளும் செல்வமும், மண்ணரசும் யான் வேண்டேன் *

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் *

மீனாய்ப் பிறக்கும், விதியுடையெ னாவேனே. 2       4.2       திருவேங்கடம் திருப்பதி

பின்னிட்ட சடையானும், பிரமனும் இந்திரனும் *

துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள்வாசல் *

மின்வட்டச் சுடராழி, வேங்கடக்கோன் தானுமிழும் *

பொன் வட்டில் பிடித்து, உடனே புகப்பெறுவெ னாவேனே. 3    4.3       திருவேங்கடம் திருப்பதி

ஒண்பவள வேலை, உலவு தண்பாற்கடலுள் *

கண் துயிலும் மாயோன், கழலிணைகள் காண்பதற்கு *

பண்பகரும் வண்டினங்கள், பண்பாடும் வேங்கடத்து *

செண்பகமாய் நிற்கும், திருவுடையெ னாவேனே. 4            4.4       திருவேங்கடம் திருப்பதி,

திருப்பாற்கடல்

கம்ப மத யானைக், கழுத்தகத்தின் மேலிருந்து *

இன்பமரும் செல்வமும், இவ்வரசும் யான் வேண்டேன் *

எம்பெருமானீசன், எழில் வேங்கட மலை மேல் *

தம்பகமாய் நிற்கும், தவமுடையெ னாவேனே. 5     4.5       திருவேங்கடம் திருப்பதி

மின்னனைய நுண்ணிடையார், உருப்பசியும் மேனகையும் *

அன்னவர் தம் பாடலொடும், ஆடலவை ஆதரியேன் *

தென்னவென வண்டினங்கள், பண்பாடும் வேங்கடத்துள் *

அன்னனைய பொற்குவடாம், அருந்தவத்தெ னாவேனே. 6         4.6       திருவேங்கடம் திருப்பதி

வானாளும் மாமதிபோல், வெண்குடைக்கீழ் * மன்னவர்தம்

கோனாகி வீற்றிருந்து, கொண்டாடும் செல்வறியேன் *

தேனார் பூஞ்சோலைத், திருவேங்கடமலை மேல் *

கானாறாய்ப் பாயும், கருத்துடையெ னாவேனே. 7  4.7       திருவேங்கடம் திருப்பதி

பிறையேறு சடையானும், பிரமனும் இந்திரனும் *

முறையாய பெரு வேள்விக், குறை முடிப்பான் மறையானான் *

வெறியார் தண்சோலைத், திருவேங்கட மலைமேல் *

நெறியாய்க் கிடக்கும், நிலையுடையெ னாவேனே. 8         4.8       திருவேங்கடம் திருப்பதி

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே ! *

நெடியானே ! வேங்கடவா !, நின் கோயிலின் வாசல் *

அடியாரும் வானவரும், அரம்பையரும் கிடந்தியங்கும் *

படியாய்க் கிடந்து * உன் பவளவாய், காண்பேனே. 9         4.9       திருவேங்கடம் திருப்பதி

உம்பருலகாண்டு, ஒரு குடைக்கீழ் * உருப்பசி தன்

அம்பொற் கலை யல்குல் பெற்றாலும், ஆதரியேன் *

செம்பவள வாயான், திருவேங்கட மென்னும் *

எம்பெருமான் பொன்மலை மேல், ஏதேனு மாவேனே. 10           4.10     திருவேங்கடம் திருப்பதி

மன்னிய தண்சாரல், வட வேங்கடத்தான் தன் *

பொன்னியலும் சேவடிகள் காண்பான், புரிந்திறைஞ்சிக் *

கொன்னவிலும் கூர்வேல், குலசேகரன் சொன்ன *

பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே. 11  4.11     திருவேங்கடம் திருப்பதி

ஐந்தாம் திருமொழி

தருதுயரம் தடாயேல், உன் சரணல்லால் சரணில்லை *

விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட்டம்மானே !

அரிசினத்தால், ஈன்றதாய் அகற்றிடினும் * மற்றவள்தன்

அருள் நினைந்தேயழும் குழவி, அதுவே போன்றிருந்தேனே. 1           5.1            வித்துவக்கோடு

கண்டாரிகழ்வனவே, காதலன் தான் செய்திடினும் *

கொண்டானை யல்லால், அறியாக் குலமகள்போல் *

விண்தோய் மதிள்புடைசூழ், விற்றுவக்கோட்டம்மா ! * நீ

கொண்டு ஆளாயாகிலும், உன் குரைகழலே கூறுவனே. 2         5.2            வித்துவக்கோடு

மீன்நோக்கும் நீள்வயல்சூழ், விற்றுவக்கோட்டம்மா !*

என் பால் நோக்காயாகிலும், உன் பற்றல்லால் பற்றிலேன் *

தான் நோக்காது, எத்துயரம் செய்திடினும் * தார்வேந்தன்

கோல்நோக்கிவாழும், குடிபோன்றிருந்தேனே. 3       5.3       வித்துவக்கோடு

வாளால் அறுத்துச் சுடினும், மருத்துவன் பால் *

மாளாத காதல், நோயாளன் போல் மாயத்தால் *

மீளாத்துயர் தரினும், விற்றுவக்கோட்டம்மா ! நீ *

ஆளா உனதருளே பார்ப்பன், அடியேனே. 4     5.4       வித்துவக்கோடு

வெங்கண் திண்களிறடர்த்தாய் விற்றுவக்கோட்டம்மானே *

எங்குப் போய் உய்கேன் உன்னிணையடியே அடையலல்லால் *

எங்கும் போய்க் கரை காணாது, எறிகடல் வாய் மீண்டேயும் *

வங்கத்தின் கூம்பேறும், மாப்பறவை போன்றேனே. 5       5.5       வித்துவக்கோடு

செந்தழலே வந்து, அழலைச் செய்திடினும் * செங்கமலம்

அந்தரம் சேர் வெங்கதிரோற்கல்லால், அலராவால் *

வெந்துயர் வீட்டாவிடினும், விற்றுவக்கோட்டம்மா ! உன்

அந்தமில் சீர்க்கல்லால், அகம் குழைய மாட்டேனே. 6     5.6       வித்துவக்கோடு

எத்தனையும் வான் மறந்த காலத்தும், பைங்கூழ்கள் *

மைத்தெழுந்த மாமுகிலே, பார்த்திருக்கும் * மற்றவை போல்

மெய்த்துயர் வீட்டாவிடினும், விற்றுவக்கோட்டம்மா ! * என்

சித்தம் மிக உன் பாலே வைப்பன் அடியேனே. 7    5.7       வித்துவக்கோடு

தொக்கிலங்கு ஆறெல்லாம், பரந்தோடித் * தொடுகடலே

புக்கன்றிப், புறம் நிற்க மாட்டாத மற்றவை போல் *

மிக்கிலங்கு முகில் நிறத்தாய்!, விற்றுவக்கோட்டம்மா !* உன்

புக்கிலங்கு சீரல்லால், புக்கிலன் காண் புண்ணியனே ! 8           5.8            வித்துவக்கோடு

நின்னையே தான் வேண்டி, நீள்செல்வம் வேண்டாதான்

தன்னையே * தான் வேண்டும் செல்வம் போல் * மாயத்தால்

மின்னையே சேர் திகிரி, விற்றுவக்கோட்டம்மா ! *

நின்னையே தான் வேண்டி, நிற்பன் அடியேனே. 9  5.9       வித்துவக்கோடு

விற்றுவக்கோட்டம்மா!, நீ வேண்டாயேயாயிடினும் *

மற்றாரும் பற்றிலேனென்று, அவனைத் தாள் நயந்த *

கொற்றவேல் தானைத் குலசேகரன் சொன்ன *

நற்றமிழ் பத்தும் வல்லார், நண்ணார் நரகமே. 10    5.10     வித்துவக்கோடு

ஆறாம் திருமொழி

ஏர்மலர்ப் பூங்குழலாயர் மாதர்

எனைப் பலருள்ள இவ்வூரில் * உன்தன்

மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே

உன்தன் பொய்யைக் கேட்டுக் *

கூர்மழைபோல் பனிக்கூதலெய்திக்

கூசிநடுங்கி யமுனை யாற்றில் *

வார்மணற்குன்றில் புலர நின்றேன்

வாசுதேவா ! உன் வரவு பார்த்தே. 1       6.1

கெண்டை யொண்கண் மடவாளொருத்தி

கீழையகத்துத் தயிர் கடையக்

கண்டு * ஒல்லை நானும் கடைவனென்று

கள்ள விழியை விழித்துப் புக்கு *

வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ

வாள் முகம் வேர்ப்பச் செவ்வாய் துடிப்ப *

தண்தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்

தாமோதரா ! மெய்யறிவன் நானே, 2       6.2

கருமலர்க் கூந்தலொருத்தி தன்னைக்

கடைக்கணித்து * ஆங்கே ஒருத்தி தன் பால்

மருவி மனம் வைத்து, மற்றொருத்திக்கு உரைத்து

ஒரு பேதைக்குப் பொய் குறித்து *

புரி குழல் மங்கை யொருத்தி தன்னைப்

புணர்தி, அவளுக்கும் மெய்யனல்லை *

மருதிறுத்தாய் ! உன் வளர்த்தியூடே

வளர்கின்றதால், உன் தன் மாயை தானே. 3  6.3

தாய் முலைப்பாலில் அமுதிருக்கத்

தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று *

பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு

பித்தனென்றே பிறர் ஏச நின்றாய் *

ஆய்மிகுகாதலோடு யானிருப்ப

யான்விட வந்த என் தூதியோடே *

நீ மிகு போகத்தை நன்குகந்தாய்

அதுவும் உன் கோரம்புக்கு ஏற்குமன்றே. 4      6.4

மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு

வீங்கிருள்வாய் என்தன் வீதியூடே *

பொன்னொத்த வாடை குக்கூடலிட்டுப்

போகின்றபோது நான் கண்டு நின்றேன் *

கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக்

கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் *

என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?

இன்னம் அங்கே நட நம்பி ! நீயே. 5      6.5

மற்பொரு தோளுடை வாசுதேவா !

வல்வினையேன் துயில் கொண்டவாறே *

இற்றை இரவிடையேமத்து என்னை

இன்னணை மேலிட்டகன்று நீ போய் *

அற்றை யிரவும் ஓர் பிற்றை நாளும்

அரிவையரோடும் அணைந்து வந்தாய் *

எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் ?

எம்பெருமான் ! நீ எழுந்தருளே. 6 6.6

பையரவினணைப் பள்ளியினாய் !

பண்டையோமல்லோம் நாம் * நீ உகக்கும்

மையரியொண் கண்ணினாருமல்லோம்

வைகி எம் சேரி வரவொழி நீ *

செய்ய வுடையும் திருமுகமும்

செங்கனி வாயும் குழலும் கண்டு *

பொய்யொரு நாள் பட்டதே யமையும்

புள்ளுவம் பேசாதே போகு நம்பி ! 7       6.7

என்னை வருக எனக் குறித்திட்டு

இனமலர் முல்லையின் பந்தர் நீழல் *

மன்னியவளைப் புணரப்புக்கு

மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய் *

பொன்னிறவாடையைக் கையில் தாங்கிப்

பொய்யச்சம் காட்டி நீ போதியேலும் *

இன்னம் என் கையகத்து ஈங்கொரு நாள்

வருதியேல், என் சினம் தீர்வன் நானே. 8        6.8

மங்கல நன் வனமாலை மார்விலிலங்க

மயில்தழை பீலி சூடி *

பொங்கிள வாடை அரையில் சாத்திப்

பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து *

கொங்கு நறுங்குழலார்களோடு

குழைந்து, குழலினிது ஊதி வந்தாய் *

எங்களுக்கே ஒரு நாள் வந்தூத

உன் குழலின்னிசை போதராதே. 9          6.9

அல்லிமலர்த் திருமங்கை கேள்வன் தன்னை

நயந்து, இளவாய்ச்சிமார்கள் *

எல்லிப் பொழுதினில் ஏமத்தூடி

எள்கி யுரைத்த உரையதனைக் *

கொல்லி நகர்க்கிறை கூடற் கோமான்

குலசேகரன் இன்னிசையில் மேவி *

சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்

சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே. 10 6.10

ஏழாம் திருமொழி

ஆலை நீள் கரும்பன்னவன் தாலோ அம்புயத்தடங்கண்ணினன் தாலோ *

வேலைநீர் நிறத்தன்னவன் தாலோ

வேழப்போதகமன்னவன் தாலோ *

ஏலவார் குழலென் மகன் தாலோ

என்றென்று உன்னை என் வாயிடை நிறைய *

தாலொலித்திடும் திருவினையில்லாத்

தாயரில் கடையாயின தாயே. 1    7.1

வடிக்கொ ளஞ்சன மெழுது செம்மலர்க்கண்

மருவி மேலினி தொன்றினை நோக்கி *

முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள்

பொலியும் நீர் முகில் குழவியே போல *

அடக்கியாரச் செஞ்சிறு விரலனைத்தும்

அங்கையோடு அணைந்து ஆனையிற் கிடந்த *

கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் அந்தோ !

கேசவா ! கெடுவேன் கெடுவேனே. 2     7.2

முந்தை நன்முறை யன்புடை மகளிர்

முறை முறை தந்தம் குறங்கிடை யிருத்தி *

எந்தையே! என்தன் குலப்பெருஞ்சுடரே !

எழு முகில் கணத்தெழில் கவரேறே ! *

உந்தை யாவன் ? என்றுரைப்ப, நின் செங்கேழ்

விரலினும் கடைக் கண்ணினும் காட்ட

நந்தன் பெற்றனன் * நல்வினை யில்லா

நங்கள் கோன், வசுதேவன் பெற்றிலனே. 3     7.3

களிநிலாவெழில் மதிபுரை முகமும்

கண்ணனே ! திண்கை மார்வும் திண்தோளும் *

தளிர் மலர்க் கருங்குழல் பிறையதுவும்

தடங்கொள் தாமரைக் கண்களும் * பொலிந்த

இளமை யின்பத்தை இன்று என்தன் கண்ணால்

பருகுவேற்கு இவள் தாயென நினைந்த *

அளவில் பிள்ளைமை யின்பத்தை இழந்த

பாவியேன் எனதாவி நில்லாதே. 4          7.4

மருவும் நின் திருநெற்றியில் சுட்டி யசைதர

மணிவாயிடை முத்தம்

தருதலும் * உன்தன் தாதையைப் போலும்

வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர *

விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து

வெகுளியாய் நின்றுரைக்கும் அவ்வுரையும் *

திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன், எல்லாம்

தெய்வநங்கை யசோதை பெற்றாளே. 5            7.5

தண்ணந் தாமரைக் கண்ணனே ! கண்ணா !

தவழ்ந்தெழுந்து தளர்ந்ததோர் நடையால் *

மண்ணில் செம்பொடியாடி வந்து, என் தன்

மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ! *

வண்ணச் செஞ்சிறு கை விரலனைத்தும்

வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில் *

உண்ணப் பெற்றிலேன் * ஓ ! கொடு வினையேன்

என்னை என் செய்யப் பெற்றது எம்மோயே. 6         7.6

குழகனே ! என்தன் கோமளப்பிள்ளாய் !

கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி *

ஒழுகு பேரெழிலிளஞ்சிறு தளிர் போல்

ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா *

மழலை மென்னகை இடையிடை யருளா

வாயிலே முலையிருக்க என் முகத்தே *

எழில் கொள் நின் திருக்கண்ணிணை நோக்கம்

தன்னையும், இழந்தேன் இழந்தேனே. 7 7.7

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்

முகிழிளஞ் சிறுத் தாமரைக் கையும் *

எழில் கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு

நிலையும், வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும் *

அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்

அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்

தொழுகையும் * இவை கண்ட அசோதை

தொல்லை யின்பத் திறுதி கண்டாளே. 8         7.8

குன்றினால் குடை கவித்ததும், கோலக்

குரவை கோத்ததும் குடமாட்டும் *

கன்றினால் விளவெறிந்ததும், காலால்

காளியன் தலை மிதித்ததும் முதலா *

வென்றிசேர் பிள்ளை நல் விளையாட்ட மனைத்திலும்

அங்கு என்னுள்ளம் உள் குளிர *

ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன், அடியேன்

காணுமாறு இனி உண்டெனில் அருளே. 9      7.9

வஞ்சமேவிய நெஞ்சுடைப்பேய்ச்சி

வரண்டு நார் நரம்பெழக் கரிந்துக்க *

நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ !

சுவைத்து, நீ அருள் செய்து வளர்ந்தாய் *

கஞ்சன்நாள் கவர் கருமுகிலெந்தாய் !

கடைப்பட்டேன் வெறிதே முலை சுமந்து *

தஞ்சமேலொன்றிலேன் உய்ந்திருந்தேன்

தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே. 10 7.10

மல்லை மாநகர்க் கிறையவன் தன்னை

வான் செலுத்தி வந்தீங்கணை மாயத்து *

எல்லையில் பிள்ளை செய்வன காணாத்

தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் *

கொல்லி காவலன், மாலடி முடிமேல்

கோலமாம் குலசேகரன் சொன்ன *

நல்லிசைத் தமிழ்மாலை வல்லார்கள்

நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே. 11         7.11

எட்டாம் திருமொழி

மன்னுபுகழ்க் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே !

தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் * செம்பொன் சேர்

கன்னிநன் மாமதிள் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே !

என்னுடைய இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ. 1 8.1       திருக்கண்ணபுரம்

புண்டரீக மலரதன்மேல், புவனியெல்லாம் படைத்தவனே !

திண்திறலாள் தாடகைதன், உரமுருவச் சிலை வளைத்தாய் ! *

கண்டவர் தம் மனம் வழங்கும், கணபுரத்து என் கருமணியே !

எண்திசையும் ஆளுடையாய் இராகவனே ! தாலேலோ. 2         8.2            திருக்கண்ணபுரம்

கொங்குமலி கருங்குழலாள், கெளசலை தன் குலமதலாய் ! *

தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா ! தாசரதீ ! *

கங்கையிலும் தீர்த்தமலி, கணபுரத்து என் கருமணியே ! *

எங்கள் குலத்து இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ. 3     8.3            திருக்கண்ணபுரம்

தாமரைமேல், அயனவனைப் படைத்தவனே !* தயரதன்தன்

மாமதலாய் ! மைதிலி தன் மணவாளா ! * வண்டினங்கள்

காமரங்களிசை பாடும், கணபுரத்து என் கருமணியே ! *

ஏமருவுஞ் சிலைவலவா ! இராகவனே ! தாலேலோ. 4   8.4       திருக்கண்ணபுரம்

பாராளும் படர் செல்வம், பரதநம்பிக்கே யருளி *

ஆராவன் பிளையவனோடு, அருங்கான மடைந்தவனே ! *

சீராளும் வரைமார்பா ! திருக்கண்ணபுரத்தரசே ! *

தாராளும் நீண்முடி, என் தாசரதீ ! தாலேலோ. 5      8.5       திருக்கண்ணபுரம்

சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே !*

அற்றவர்கட் கருமருந்தே ! அயோத்திநகர்க் கதிபதியே ! *

கற்றவர்கள் தாம் வாழும், கணபுரத்து என் கருமணியே ! *

சிற்றவை தன் சொற்கொண்ட, சீராமா ! தாலேலோ. 6     8.6       திருக்கண்ணபுரம்,

திருவயோத்தி

ஆலினிலைப் பாலகனாய், அன்று உலகமுண்டவனே ! *

வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக் களித்தவனே ! *

காலின் மணி கரையலைக்கும், கணபுரத்து என் கருமணியே ! *

ஆலிநகர்க்கு அதிபதியே ! அயோத்திமனே ! தாலேலோ. 7       8.7            திருக்கண்ணபுரம்,

திருவாலி,

திருவயோத்தி

மலையதனால் அணைகட்டி, மதிளிலங்கை யழித்தவனே ! *

அலைகடலைக் கடைந்து, அமரர்க் கமுதருளிச் செய்தவனே ! *

கலைவலவர் தாம் வாழும், கணபுரத்து என் கருமணியே ! *

சிலைவலவா ! சேவகனே ! சீராமா ! தாலேலோ. 8         8.8       திருக்கண்ணபுரம்

தளையவிழும் நறுங்குஞ்சித், தயரதன்தன் குலமதலாய் ! *

வளைய ஒரு சிலையதனால், மதிளிலங்கை யழித்தவனே ! *

களைகழுநீர் மருங்கலரும், கணபுரத்து என் கருமணியே !*

இளையவர்கட் கருளுடையாய் ! இராகவனே ! தாலேலோ. 9 8.9            திருக்கண்ணபுரம்

தேவரையும் அசுரரையும், திசைகளையும் படைத்தவனே ! *

யாவரும் வந்து அடிவணங்க, அரங்கநகர்த் துயின்றவனே ! *

காவிரி நல்நதி பாயும், கணபுரத்து என் கருமணியே ! *

ஏவரி வெஞ்சிலை வலவா ! இராகவனே ! தாலேலோ. 10        8.10     திருவரங்கம்,

திருக்கண்ணபுரம்

கன்னிநன் மாமதிள் புடைசூழ், கணபுரத்து என் காகுத்தன்

தன்னடி மேல் * தாலேலோ வென்றுரைத்த, தமிழ் மாலை *

கொல்நவிலும் வேல் வலவன் குடைக் குலசேகரன் சொன்ன *

பன்னிய நூல் பத்தும் வல்லார், பாங்காய பத்தர்களே. 11            8.11            திருக்கண்ணபுரம்

ஒன்பதாம் திருமொழி

வன்தாளினிணை வணங்கி வளநகரம்

தொழுதேத்த, மன்னனாவான்

நின்றாயை * அரியணை மேலிருந்தாயை

நெடுங்கானம் படரப் போகு

என்றாள் * எம்இராமாவோ !

உனைப் பயந்த கைகேசிதன் சொற்கேட்டு *

நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்

நன்மகனே ! உன்னை நானே. 1    9.1

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு, இருநிலத்தை

வேண்டாதே விரைந்து * வென்றி

மைவாய களிறொழிந்து தேரொழிந்து

மாவொழிந்து, வனமே மேவி *

நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும்

இளங்கோவும் பின்பு போக *

எவ்வாறு நடந்தனை ? எம்மிராமாவோ !

எம்பெருமான் ! என் செய்கேனே ? 2        9.2

கொல்லணை வேல் வரிநெடுங்கண், கெளசலைதன்

குலமதலாய் ! * குனிவில்லேந்தும்

மல்லணைந்த வரைத்தோளா ! வல்வினையேன்

மனமுருக்கும் வகையே கற்றாய் *

மெல்லணை மேல் முன் துயின்றாய்

இன்று இனிப் போய் வியன் கான மரத்தின் நீழல் *

கல்லணை மேல் கண்துயிலக் கற்றனையோ?

காகுத்தா ! கரிய கோவே ! 3          9.3

வா, போகுவா இன்னம் வந்து

ஒருகால் கண்டு போ * மலராள் கூந்தல்

வேய்போலும் எழில் தோளிதன் பொருட்டா

விடையோன்தன் வில்லைச் செற்றாய் *

மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்

மனமுருக்கும் மகனே ! * இன்று

நீ போக என்னெஞ்சம் இருபிளவாய்ப்

போகாதே நிற்குமாறே ! 4    9.4

பொருந்தார் கைவேல் நுதி போல் பரல்பாய

மெல்லடிக்கள் குருதிசோர *

விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப

வெம்பசி நோய் கூர * இன்று

பெரும்பாவியேன் மகனே ! போகின்றாய்

கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற *

அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன்

என் செய்கேன் ? அந்தோ ! யானே. 5      9.5

அம்மாவென்றுகந்தழைக்கும், ஆர்வச்சொல்

கேளாதே * அணிசேர் மார்வம்

என் மார்வத்திடை யழுந்தத் தழுவாதே

முழுசாதே மோவாதுச்சி *

கைம்மாவின் நடையன்ன மென்னடையும்

கமலம் போல் முகமும் காணாது *

எம்மானை என் மகனை இழந்திட்ட

இழிதகையேன் இருக்கின்றேனே. 6         9.6

பூமருவு நறுங்குஞ்சி புன்சடையாய்ப் புனைந்து

பூந்துகில் சேரல்குல் *

காமரெழில் விழலுடுத்துக் கலனணியாது

அங்கங்கள் அழகு மாறி *

ஏமரு தோளென் புதல்வன், யான் இன்று

செலத் தக்க வனம் தான் சேர்தல் *

தூமறையீர் ! இது தகவோ ? சுமந்திரனே !

வசிட்டனே ! சொல்லீர் நீரே. 7      9.7

பொன் பெற்றாரெழில் வேதப் புதல்வனையும்

தம்பியையும் * பூவைபோலும்

மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென்

மருகியையும், வனத்திற் போக்கி *

நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு

என்னையும் நீள்வானில் போக்க *

என் பெற்றாய் ? கைகேசி ! இருநிலத்தில்

இனிதாக இருக்கின்றாயே. 8           9.8

முன்னொருநாள் மழுவாளி சிலை வாங்கி

அவன் தவத்தை முற்றும் செற்றாய் *

உன்னையும் உன்னருமையையும் உன்மோயின்

வருத்தமும், ஒன்றாகக் கொள்ளாது *

என்னையும் என்மெய்யுரையும் மெய்யாகக்

கொண்டு, வனம்புக்க வெந்தாய் ! *

நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்

ஏழ்பிறப்பும், நெடுந்தோள் வேந்தே ! 9    9.9

தேன் நகுமாமலர்க் கூந்தல், கெளசலையும்

சுமித்திரையும் சிந்தை நோவக் *

கூனுருவில் கொடுந் தொழுத்தை சொற் கேட்ட

கொடியவள் தன்சொற்கொண்டு * இன்று

கானகமே மிக விரும்பி, நீ துறந்த

வளநகரைத் துறந்து * நானும்

வானகமே மிக விரும்பிப் போகின்றேன்

மனுகுலத்தார் தங்கள் கோவே ! 10        9.10

ஏரார்ந்த கருநெடுமா லிராமனாய்

வனம் புக்க, அதனுக்கு ஆற்றா *

தாரார்ந்த தடவரைத் தோள் தயரதன் தான்

புலம்பிய, அப் புலம்பல் தன்னைக் *

கூரார்ந்த வேல் வலவன் கோழியர் கோன்

குடைக் குலசேகரன் சொற்செய்த *

சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்

தீநெறிக் கண் செல்லார் தாமே. 11          9.11

பத்தாம் திருமொழி

அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி யென்னும்

அணிநகரத்து உலகனைத்தும் விளக்கும் சோதி *

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர்விளக்காய்த் தோன்றி

விண்முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னைச் *

செங்கணெடுங் கருமுகிலை இராமன் தன்னைத்

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *

எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான் தன்னை

என்று கொலோ ? கண்குளிரக் காணும் நாளே. 1     10.1     சித்திரகூடம்,

திருவயோத்தி

வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக்கீறி

வருகுருதி பொழிதர வன்கணை யொன்றேவி *

மந்திரம் கொள் மறைமுனிவன் வேள்வி காத்து

வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின் *

செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண்சோலைத்

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *

அந்தணர்களொரு மூவாயிரவர் ஏத்த

அணிமணி யாசனத்திருந்த அம்மான் தானே. 2        10.2     சித்திரகூடம்

செவ்வரிநற் கருநெடுங்கண் சீதைக்காகிச்

சினவிடையோன் சிலையிறுத்து மழுவாளேந்தி *

வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு

வேல்வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னைத் *

தெவ்வரஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர்த்

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *

எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை

இறைஞ்சுவா ரிணையடியே இறைஞ்சினேனே. 3   10.3     சித்திரகூடம்

தொத்தலர் பூஞ்சுரிகுழல் கைகேசி சொல்லால்

தொன்னகரம் துறந்து, துறைக்கங்கை தன்னைப் *

பத்தியுடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்குப்

பரதனுக்குப் பாதுகமும் அரசுமீந்து *

சித்திரகூடத்து இருந்தான் தன்னை இன்று

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *

எத்தனையும் கண் குளிரக் காணப்பெற்ற

இருநிலத்தார்க்கு இமையவர் நேரொவ்வார் தாமே. 4       10.4     சித்திரகூடம்

வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று

வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கிக் *

கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்

கரனோடு தூடணன்தன் உயிரை வாங்கிச் *

சிலை வணக்கி மான்மறிய எய்தான் தன்னைத்

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *

தலை வணக்கிக் கைகூப்பி ஏத்த வல்லார்

திரிதலால், தவமுடைத்துத் தரணி தானே. 5   10.5     சித்திரகூடம்

தனமருவு வைதேகி பிரியலுற்றுத்

தளர்வெய்திச் சடாயுவை வைகுந்தத் தேற்றி *

வனமருவு கவியரசன் காதல் கொண்டு

வாலியைக் கொன்று இலங்கை நகரரக்கர் கோமான் *

சினமடங்க மாருதியால் சுடுவித்தானைத்

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *

இனிதமர்ந்த அம்மானை இராமன் தன்னை

ஏத்துவா ரிணையடியே ஏத்தினேனே. 6 10.6     சித்திரகூடம்

குரை கடலை அடலம்பால் மறுகவெய்து

குலை கட்டி மறு கரையை அதனாலேறி *

எரிநெடுவேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்

இன்னுயிர் கொண்டு, அவன் தம்பிக் கரசுமீந்து *

திருமகளோ டினிதமர்ந்த செல்வன் தன்னைத்

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *

அரசமர்ந்தா னடிசூடும் அரசை யல்லால்

அரசாக எண்ணேன் மற்றரசு தானே. 7  10.7     சித்திரகூடம்

அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி

அரசெய்தி அகத்தியன் வாய்த் தான்முன் கொன்றான்

தன் * பெருந்தொல் கதைகேட்டு, மிதிலைச் செல்வி

உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் *

செம்பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *

எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால்

பருகுவோம், இன்னமுதம் மதியோமன்றே. 8 10.8     சித்திரகூடம்,

திருவயோத்தி

செறிதவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று

செழு மறையோனுயிர் மீட்டுத் தவத்தோனீந்த

நிறைமணிப் பூணணியும் கொண்டு, இலவணன் தன்னைத்

தம்பியால் வானேற்றி * முனிவன் வேண்டத்

திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்

உறைவானை * மறவாத உள்ளந் தன்னை யுடையோம்,

மற்றுறு துயர மடையோ மன்றே. 9       10.9     சித்திரகூடம்

அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி

அடலரவப் பகையேறி அசுரர் தம்மை

வென்று * இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற

விண் முழுதும் எதிர்வரத் தன் தாம மேவிச்

சென்று * இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்

தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *

என்றும் நின்றான் அவனிவ னென்றேத்தி, நாளும்

இறைஞ்சுமினோ, எப்பொழுதும் தொண்டீர் ! நீரே. 10         10.10   சித்திரகூடம்

தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்

திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை *

எல்லையில் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று

அது முதலாத், தன்னுலகம் புக்கதீறா *

கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்

கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற்செய்த *

நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்

நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே. 11 10.11   சித்திரகூடம்

பெருமாள் திருமொழி முற்றும்

 

குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.