Thiruppavai

ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த

திருப்பாவை

ஆண்டாள் தனியன்கள்

(ஸ்ரீபராசரபட்டர் அருளிச்செய்தது)

நீளாதுங்கஸ்தநகிரிதடீஸுப்தமுத்போத்யக்ருஷ்ணம்

பாரார்த்யம்ஸ்வம்ஶ்ருதிஶத: ஶிரஸ்ஸித்தமத்யாபயந்தி|

ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்யாபலாத்க்ருத்ய புங்க்தே

கோதாதஸ்யைநமஇதமிதம்பூயஏவாஸ்துபூய.||

(உய்யக்கொண்டார் அருளிச்செய்தவை)

அன்னவயற்புதுவையாண்டாள் அரங்கற்குப்

பன்னுதிருப்பாவைபல்பதியம்* – இன்னிசையால்

பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை* பூமாலை

சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே தொல்பாவை

பாடியருளவல்லபல்வளையாய்! – நாடிநீ

வேங்கடவற்கு என்னை விதியென்ற விம்மாற்றம்

நாம்கடவாவண்ணமேநல்கு.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் *

நீராடப் போதுவீர் ! போதுமினோ நேரிழையீர் ! *

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் ! *

கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன் *

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம் *

கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் *

நாராயணனே நமக்கே பறை தருவான் *

பாரோர் புகழப் படிந்து ஏலோரெம்பாவாய். 1

வையத்து வாழ்வீர்காள் ! * நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்

பையத் துயின்ற பரமனடி பாடி *

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் * நாட்காலே நீராடி

மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் *

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் *

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி *

உய்யுமாறெண்ணி உகந்து ஏலோரெம்பாவாய். 2     திருப்பாற்கடல்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி *

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் *

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து *

ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகளப் *

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத் *

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் * குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் *

நீங்காத செல்வம் நிறைந்து ஏலோரெம்பாவாய். 3

ஆழிமழைக் கண்ணா ! ஒன்று நீ கைகரவேல் *

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி *

ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கறுத்து *

பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில் *

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து *

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் *

வாழ உலகினில் பெய்திடாய் * நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோரெம்பாவாய். 4

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் *

தூய பெரு நீர் யமுனைத் துறைவனை *

ஆயர் குலத்தினில் தோன்றும் மணி விளக்கைத் *

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் *

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது *

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் *

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் *

தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோரெம்பாவாய்.     5          வடமதுரை

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் *

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ? *

பிள்ளாய் ! எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு *

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி *

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை *

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் *

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் *

உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோரெம்பாவாய். 6

கீசு கீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் * கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே ! *

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து *

வாச நறுங்குழலாய்ச்சியர் * மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ? *

நாயகப் பெண் பிள்ளாய் ! நாராயணன் மூர்த்தி *

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? *

தேசமுடையாய்! திற ஏலோரெம்பாவாய். 7

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தன காண் * மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து * உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் * கோதுகலமுடைய

பாவாய் ! எழுந்திராய் * பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய *

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் *

ஆ! ஆ! என்றாராய்ந்தருள் ஏலோரெம்பாவாய். 8

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத் *

தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும் *

மாமான் மகளே ! மணிக் கதவம் தாள் திறவாய் *

மாமீர் ! அவளை எழுப்பீரோ ? * உன்மகள்தான்

ஊமையோ ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ ? *

ஏமப்பெரும் துயில் மந்திரப் பட்டாளோ ? *

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று *

நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய். 9

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் ! *

மாற்றமும் தாராரோ ? வாசல் திறவாதார் *

நாற்றத் துழாய் முடி நாராயணன் * நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் * பண்டொரு நாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும் *

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ *

ஆற்ற அனந்தலுடையாய் ! அருங்கலமே ! *

தேற்றமாய் வந்து திற ஏலோரெம்பாவாய். 10

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து *

செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் *

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே ! *

புற்றரவல்குல் புனமயிலே ! போதராய் *

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து * நின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச் *

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி ! * நீ

எற்றுக்கு உறங்கும் பொருள் ? ஏலோரெம்பாவாய். 11

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி *

நினைத்து முலை வழியே நின்று பால் சோர *

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் ! *

பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றிச் *

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற *

மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய் *

இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம் ? *

அனைத்தில்லத்தாரும் அறிந்து ஏலோரெம்பாவாய். 12

புள்ளின் வாய் கீண்டானைப் * பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப் *

பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம் புக்கார் *

வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று *

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் ! *

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே *

பள்ளிக் கிடத்தியோ ? பாவாய் ! நீ நன்னாளால் *

கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோரெம்பாவாய். 13

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் *

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் *

செங்கல் பொடிக்கூறை வம்பற்ற அத்தவர் *

தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் *

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்

நங்காய் ! எழுந்திராய் * நாணாதாய் ! நாவுடையாய் ! *

சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையன் *

பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோரெம்பாவாய். 14

எல்லே ! இளங்கிளியே ! இன்னமுறங்குதியோ ? *

சில்லென்றழையேன்மின் ! நங்கைமீர் ! போதருகின்றேன் *

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் *

வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக *

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை *

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள் *

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை * மாயனைப் பாடு ஏலோரெம்பாவாய். 15

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில் காப்பானே ! * கொடித் தோன்றும் தோரண

வாயில் காப்பானே ! * மணிக் கதவம் தாள் திறவாய் *

ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை *

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் *

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் *

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா ! * நீ

நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோரெம்பாவாய். 16

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ் செய்யும்

எம்பெருமான் ! * நந்தகோபாலா ! எழுந்திராய் *

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே ! குலவிளக்கே !

எம்பெருமாட்டி ! யசோதாய் ! அறிவுறாய் *

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர் கோமானே ! * உறங்கா தெழுந்திராய் *

செம்பொற் கழலடிச் செல்வா ! பலதேவா ! *

உம்பியும் நீயும் உறங்கேல் ஓரெம்பாவாய். 17

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் *

நந்த கோபாலன் மருமகளே ! நப்பின்னாய் ! *

கந்தம் கமழும் குழலீ ! கடைதிறவாய் *

வந்தெங்கும் கோழி அழைத்தன காண் * மாதவிப்

பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் *

பந்தார் விரலி ! உன் மைத்துனன் பேர் பாட *

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோரெம்பாவாய். 18

குத்து விளக்கெரியக் கோட்டுக் கால் கட்டில் மேல் *

மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக் *

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் *

வைத்துக் கிடந்த மலர்மார்பா ! வாய்திறவாய் *

மைத்தடங் கண்ணினாய் ! நீ உன் மணாளனை *

எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண் *

எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் *

தத்துவமன்று தகவு ஏலோரெம்பாவாய். 19

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று *

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் *

செப்பமுடையாய் ! திறலுடையாய் ! * செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா ! துயிலெழாய் *

செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் *

நப்பின்னை நங்காய் ! திருவே ! துயிலெழாய் *

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை *

இப்போதே எம்மை நீராட்டு ஏலோரெம்பாவாய். 20

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப *

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் *

ஆற்றப் படைத்தான் மகனே ! அறிவுறாய் *

ஊற்றமுடையாய் ! பெரியாய் ! * உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே ! துயிலெழாய் *

மாற்றா ருனக்கு வலி தொலைந்து * உன் வாசற்கண்

ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே *

போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோரெம்பாவாய். 21

அங்கண் மா ஞாலத்தரசர் * அபிமான

பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே *

சங்கமிருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் *

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப்பூப் போலே *

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? *

திங்களு மாதித்தியனும் எழுந்தாற் போல் *

அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் *

எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோரெம்பாவாய். 22

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் *

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து *

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி *

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் *

போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா !* உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் * கோப்புடைய

சீரிய சிங்காசனத்து இருந்து * யாம் வந்த

காரியம் ஆராய்ந்தருள் ஏலோரெம்பாவாய். 23

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி *

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் ! திறல் போற்றி *

பொன்றச் சகடமுதைத்தாய் ! புகழ் போற்றி *

கன்று குணிலா எறிந்தாய் ! கழல் போற்றி *

குன்று குடையா எடுத்தாய் ! குணம் போற்றி *

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி *

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் *

இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோரெம்பாவாய். 24

ஒருத்தி மகனாய்ப் பிறந்து * ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர *

தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் * கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே ! * உன்னை

அருத்தித்து வந்தோம் * பறை தருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி *

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோரெம்பாவாய். 25

மாலே ! மணிவண்ணா ! மார்கழி நீராடுவான் *

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் *

ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன *

பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே *

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே *

சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே *

கோல விளக்கே கொடியே விதானமே *

ஆலினிலையாய் ! அருள் ஏலோரெம்பாவாய். 26

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா ! * உன்தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறு சம்மானம் *

நாடு புகழும் பரிசினால் நன்றாகச் *

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே *

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் *

ஆடை உடுப்போம் அதன் பின்னே பால்சோறு

மூட * நெய் பெய்து முழங்கை வழிவாரக் *

கூடியிருந்து குளிர்ந்து ஏலோரெம்பாவாய். 27

கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்து உண்போம் *

அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து * உன்தன்னைப்

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் *

குறைவொன்று மில்லாத கோவிந்தா * உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க வொழியாது *

அறியாத பிள்ளைகளோம் * அன்பினால் உன்தன்னைச்

சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே *

இறைவா ! நீ தாராய் பறை ஏலோரெம்பாவாய். 28

சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து * உன்

பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் *

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ *

குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது *

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா !

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் * உன்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம் *

மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோரெம்பாவாய். 29

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் *

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி *

அங்கு அப்பறை கொண்ட வாற்றை * அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே *

இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் *

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் *

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். 30

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடந் தோன்றுமூர்*

நீதியால் நல்லபத்தர்வாழுமூர் நான்மறைகளோதுமூர்*

வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்*

வேதமனைத்துக்கும் வித்தாகும்* கோதை தமிழ்

ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை*

வையம் சுமப்பதும் வம்பு.

திருப்பாவை முற்றும்

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.