Thirunedundandakam

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

 

திருநெடுந்தாண்டகம்

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்

விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்ப் *

பின்னுருவாய் முன்னுருவிற் பிணி மூப்பில்லாப்

பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது * எண்ணும்

பொன்னுருவாய் மணியுருவிற் பூதமைந்தாய்ப்

புனலுருவாய் அனலுருவில் திகழும் சோதி

தன்னுருவாய் * என்னுருவில் நின்ற எந்தை

தளிர் புரையும் திருவடி என்தலை மேலவே. 1

பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப்

பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற *

ஏருருவில் மூவருமே யென நின்ற

இமையவர் தம் திருவுரு வேறெண்ணும் போது *

ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ

ஒன்று மாகட லுருவம் ஒத்து நின்ற *

மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி

முகிலுருவம் எம்மடிக ளுருவந் தானே. 2

திருவடிவில் கருநெடுமால் சேயனென்றும்

திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தானென்றும் *

பெருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்

பெருமானைக் கருநீல வண்ணன் தன்னை *

ஒரு வடிவத் தோருரு வென்று உணரலாகாது

ஊழிதோறூழி நின்றேத்த லல்லால் * கருவடிவில்

செங்கண்ண வண்ணன் தன்னைக்

கட்டுரையே யாரொருவர் காண்கிற்பாரே ? 3

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை

இருநிலம் கால் தீ நீர் விண் பூதமைந்தாய்ச் *

செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்

திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி *

அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா

அந்தணனை, அந்தணர் மாட்டு அந்தி வைத்த

மந்திரத்தை * மந்திரத்தால் மறவாது என்றும்

வாழுதியேல், வாழலாம் மடநெஞ்சமே ! 4

ஒண்மிதியிற் புனலுருவி ஒரு கால் நிற்ப

ஒரு காலும் காமரு சீரவுணன் உள்ளத்து *

எண்மதியும் கடந்து அண்டமீது போகி

இருவிசும்பின் ஊடு போயெழுந்து * மேலைத்

தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித்

தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு *

மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை

மலர் புரையும் திருவடியே வணங்கினேனே. 5

அலம் புரிந்த நெடுந் தடக்கை அமரர் வேந்தன்

அஞ்சிறைப்புள் தனிப்பாகன் * அவுணர்க்கு என்றும்

சலம் புரிந்து அங்கருளில்லாத் தன்மையாளன்

தானுகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடி *

நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணையீர்த்த

நெடுவேய்கள் படு முத்த முந்த வுந்திப் *

புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்

பூங்கோவலூர் தொழுதும், போது நெஞ்சே ! 6       திருக்கோவலூர்

வற்புடைய வரை நெடுந்தோள் மன்னர் மாள

வடிவாய மழுவேந்தி உலகமாண்டு *

வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேலுய்த்த

வேள் முதலா வென்றானூர் * விந்தம் மேய

கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட

கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமலவேலி *

பொற்புடைய மலை யரையன் பணிய நின்ற

பூங்கோவலூர் தொழுதும், போது நெஞ்சே ! 7       திருக்கோவலூர்

நீரகத்தாய் ! நெடுவரையினுச்சி மேலாய் !

நிலாத்திங்கள் துண்டத்தாய் ! நிறைந்த கச்சி

ஊரகத்தாய் ! * ஒண்துறை நீர் வெஃகா வுள்ளாய் !

உள்ளுவாருள்ளத்தாய் ! * உலகமேத்தும்

காரகத்தாய் ! கார்வானத்துள்ளாய் ! கள்வா !

காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் ! * பேராது என்னெஞ்சினுள்ளாய் !

பெருமான்! உன் திருவடியே பேணினேனே. 8      திருப்பேர்நகர்,

நீரகம்,

நிலாத்திங்கள்துண்டம்,

ஊரகம்,

திருவெ:கா,

காரகம்,

கார்வானம்,

திருக்கள்வனூர்

வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்

மல்லையாய் ! மதிள்கச்சியூராய் ! பேராய் ! *

கொங்கத்தார் வளங் கொன்றை யலங்கல் மார்வன்

குலவரையன் மடப் பாவை இடப் பால் கொண்டான்

பங்கத்தாய் ! * பாற்கடலாய் ! பாரின் மேலாய் !

பனிவரையி னுச்சியாய் ! பவள வண்ணா ! *

எங்குற்றாய் எம்பெருமான் ! உன்னை நாடி

ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே. 9                திருப்பேர்நகர்,

ஊரகம்,

பவளவண்ணம்,

திருக்கடல்மல்லை,

திருப்பாற்கடல்

பொன்னானாய் ! பொழிலேழும் காவல் பூண்ட

புகழானாய் ! இகழ்வாய தொண்டனேன் நான் *

என்னானாய் ! என்னானாய் ! என்னலல்லால்

என்னறிவன் ஏழையேன் ? * உலகமேத்தும்

தென்னானாய் ! வடவானாய் ! குடபாலானாய் !

குணபால மதயானாய் ! இமையோர்க்கு என்றும்

முன்னானாய் ! * பின்னானார் வணங்கும் சோதி !

திருமூழிக்களத்தானாய் ! முதலானாயே ! 10       திருமூழிக்களம்

பட்டுடுக்கும் அயர்த்திரங்கும் பாவை பேணாள்

பணிநெடுங்கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் *

எள்துணைப் போது என் குடங்காலிருக்க கில்லாள்

எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் *

மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்

மடமான இது செய்தார் தம்மை * மெய்யே

கட்டுவிச்சி சொல்லென்னச் சொன்னாள், நங்காய் !

கடல்வண்ணர் இது செய்தார் காப்பாராரே? 11         திருவரங்கம்

நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும்

நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள் *

நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ ! என்னும்

வம்பார் பூம் வயலாலி மைந்தா என்னும் *

அஞ்சிறைய புட்கொடியே ஆடும் பாடும்

அணியரங்கம் ஆடுதுமோ ? தோழீ ! என்னும் *

என் சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன்

இருநிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ ! பாவமே.               12           திருவரங்கம்,

திருவாலி

கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் ! என்றும்

காமரு பூங்கச்சி ஊரகத்தாய் ! என்றும் *

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் ! என்றும்

வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே ! என்றும் *

மல்லடர்த்து மல்லரை அன்று அட்டாய் ! என்றும்

மாகீண்ட கைத்தலத்து என் மைந்தா ! என்றும் *

சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே யென்று

துணை முலை மேல் துளிசோரச் சோர்கின்றாளே. 13                ஊரகம்,

திருவெ:கா

முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை, * மூவா

மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற *

அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய

அந்தணனை, அந்தணர் தம் சிந்தையானை *

விளக்கொளியை மரதகத்தைத் திருத்தண்காவில்

வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *

வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று

மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே. 14   திருவரங்கம்,

திருக்குறுங்குடி,

திருத்தண்கா,

திருவெ:கா

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சிமேய

களிறு ! என்றும், கடல் கிடந்த கனியே ! என்றும் *

அல்லியம் பூமலர்ப் பொய்கைப் பழனவேலி

அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் ! என்றும் *

சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித்

தூமுறுவல் நகை இறையே தோன்ற நக்கு *

மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி ஆங்கே

மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே. 15     திருவழுந்தூர்,

திருக்கச்சி (அத்திகிரி),

திருப்பாற்கடல்

கன்று மேய்த்து இனிதுகந்த காளாய் ! என்றும்

கடிபொழில் சூழ் கணபுரத்து என்கனியே ! என்றும் *

மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் ! என்றும்

வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும் *

வென்றசுரர் குலம் களைந்த வேந்தே ! என்றும்

விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய் ! என்றும் *

துன்று குழல் கருநிறத்து என் துணையே! என்றும்

துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே. 16

திருக்கண்ணபுரம்,

திருநறையூர்,

திருவேங்கடம் திருப்பதி

பொங்கார் மெல்லிளங் கொங்கை பொன்னே பூப்பப்

பொருகயல் கண் நீரரும்பப் போந்து நின்று *

செங்கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்

சிறுகுரலுக்கு உடலுருகிச் சிந்தித்து * ஆங்கே

தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித்

தண்கோவலூர் பாடியாடக் கேட்டு *

நங்காய் ! நங்குடிக்கு இதுவோ நன்மை ? என்ன

நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே. 17            திருக்குடந்தை (கும்பகோணம்),

திருநறையூர்,

திருத்தண்கால்,

திருக்கோவலூர்

கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்

கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம் *

பார்வண்ண மடமங்கை பத்தர், பித்தர்

பனிமலர் மேற் பாவைக்குப் பாவம் செய்தேன் ! *

ஏர்வண்ண வென்பேதை என்சொல் கேளாள்

எம்பெருமான் திருவரங்கம் எங்கே ? என்னும் *

நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேனென்னும்

இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறே ! 18    திருவரங்கம்,

திருநீர்மலை

முற்றாரா வனமுலையாள் பாவை, மாயன்

மொய் யகலத்துள் ளிருப்பாள் அஃதும் கண்டு

அற்றாள் * தன் நிறைவழிந்தாள் ஆவிக்கின்றாள்

அணியரங்க மாடுதுமோ ? தோழீ ! என்னும் *

பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்

பேர் பாடித் தண்குடந்தை நகரும் பாடிப் *

பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்

பொருவற்றாள் என்மகள் உம்பொன்னும் அஃதே. 19      திருவரங்கம்,

திருப்பேர்நகர்,

திருக்குடந்தை (கும்பகோணம்)

தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்

தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ யொல்கிப் *

போராளனாயிரந் தோள் வாணன் மாளப்

பொருகடலை அரண் கடந்து புக்கு மிக்க

பாராளன் * பாரிடந்து பாரை யுண்டு

பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட

பேராளன் * பேரோதும் பெண்ணை, மண் மேல்

பெருந்தவத்த ளென்றல்லால் பேசலாமே ? 20

மைவண்ண நறுங்குஞ்சிக் குழல் பின்தாழ

மகரம் சேர் குழை இரு பாடு இலங்கியாட *

எய்வண்ண வெஞ்சிலையே துணையா, இங்கே

இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் *

கைவண்ணம் தாமரை வாய் கமலம் போலும்

கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே *

அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழீ !

அவரை நாம் தேவரென்று அஞ்சினோமே. 21

நைவள மொன்றாராயா நம்மை நோக்கா

நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்

செய்வளவில் * என்மனமும் கண்ணும் ஓடி

எம்பெருமான் திருவடிக்கீழணைய * இப்பால்

கைவளையும் மேகலையும் காணேன், கண்டேன்

கனமகரக் குழை யிரண்டும் நான்கு தோளும் *

எவ்வளவுண்டு எம்பெருமான் கோயில் ? என்றேற்கு

இதுவன்றோ எழிலாலி என்றார் தாமே. 22

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து, என்

ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே *

தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்திச்

சேலுகளும் திருவரங்கம் நம்மூரென்ன *

கள்ளூரும் பைந்துழாய் மாலையானைக்

கனவிடத்தில் யான் காண்பன், கண்ட போது *

புள்ளூரும் கள்வா! நீ போகேலென்பன்

என்றாலும் இது நமக்கோர் புலவி தானே. 23       திருவரங்கம்

இருகையில் சங்கிவை நில்லா எல்லே பாவம் !

இலங்கொலி நீர்ப்பெரும் பெளவம் மண்டியுண்ட *

பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம்

பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ *

ஒரு கையில் சங்கு ஒரு கை மற்றாழி யேந்தி

உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து * என்

பொரு கயற்கண் நீரரும்பப் புலவி தந்து

புனலரங்கம் ஊரென்று போயினாரே. 24      திருவரங்கம்

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்

கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் *

தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே

தாழ்ந்திலங்கு மகரம் சேர் குழையும் காட்டி *

என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும்

என் வளையும் கொண்டு, என்னை யாளும் கொண்டு *

பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலினுாடே

புனலரங்கம் ஊரென்று போயினாரே. 25      திருவரங்கம்

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்

தேனதனை வாய் மடுத்து, உன் பெடையும் நீயும் *

பூமருவி இனிதமர்ந்து பொறியிலார்ந்த

அறுகால சிறுவண்டே ! தொழுதேன், உன்னை *

ஆமருவி நிரை மேய்த்த அமரர் கோமான்

அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று *

நீ மருவி யஞ்சாதே நின்று, ஓர் மாது

நின் நயந்தாளென்று இறையே இயம்பிக் காணே. 26    திருவழுந்தூர்

செங்கால மடநாராய் ! இன்றே சென்று

திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு *

என்காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்

இதுவொப்பது எமக்கின்ப மில்லை * நாளும்

பைங்கான மீதெல்லாம் உனதேயாகப்

பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன் * தந்தால்

இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும்

இரு நிலத்தில் இனிதின்ப மெய்தலாமே. 27          திருக்கண்ணபுரம்

தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச்

சென்று, உலகம் மூன்றினையும் திரிந்து * ஓர் தேரால்

மன்னிலங்கு பாரதத்தை மாளவூர்ந்த

வரையுருவின் மாகளிற்றைத் தோழீ ! * என்தன்

பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு

போகாமை வல்லேனாய்ப் புலவியெய்தி *

என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பமெய்த

எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே. 28

அன்றாயர் குலமகளுக் கரையன் தன்னை

அலை கடலைக் கடைந்தடைத்த அம்மான் தன்னைக் *

குன்றாத வலியரக்கர் கோனை மாளக்

கொடுஞ் சிலைவாய்ச் சரந்துரந்து குலங்களைந்து

வென்றானைக் * குன்றெடுத்த தோளினானை

விரிதிரை நீர் விண்ணகரம் மருவி நாளும்

நின்றானைத் * தண்குடந்தைக் கிடந்த மாலை

நெடியானை, அடிநாயேன் நினைந்திட்டேனே. 29 திருக்குடந்தை (கும்பகோணம்),

திருவிண்ணகர்

மின்னு மாமழை தவழும் மேக வண்ணா !

விண்ணவர் தம் பெருமானே ! அருளாயென்று *

அன்னமாய் முனிவரோடு அமரரேத்த

அருமறையை வெளிப் படுத்த அம்மான் தன்னை *

மன்னுமா மணிமாட மங்கை வேந்தன்

மானவேல் பரகாலன் கலியன் சொன்ன *

பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார், தொல்லைப்

பழவினையை முதலரிய வல்லார் தாமே. 30

திருநெடுந்தாண்டகம் முற்றும்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.